Elegant Rose - Diagonal Resize 2 ஜனவரி 2012 ~ TAMIL ISLAM

வியாழன், 19 ஜனவரி, 2012

read more " "

ஒடுக்கத்துப் புதன்

ஒடுக்கத்துப் புதன்

கேள்வி: ஒடுக்கத்துப் புதனன்று நாம் செய்ய வேண்டியதென்ன?
பதில்: ஸபர் மாதத்தின்  இறுதிப்புதனன்று இரவு அவ்வருடத்திற்கான மூன்று இலட்சம் பலாய், முஸீபத்துகள் இறங்குவதாக மாபெரும் தவஞானி குத்புல் ஹிந்து காஜா முயீனுத்தீன்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் அகக்கண் பார்வையால் கண்டறிந்ததாக அன்னாரது சீடர் பரீதுத்தீன் ஷக்கன்ஜீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது 'ஜவாஹிருல் கம்ஸா' எனும் நூலில் கூறுவதோடு அத்தினத்தில் ஸலாமுன் எனத் தொடங்கும் திருவசனங்களை எழுதிக் குடித்தால் அச்சோதனைகள் அவர்களை அணுகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
'நோய் மொத்தமாக இறங்குகிறது.நோய் நிவாரணி கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது' எனற நபிமொழியை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மூலமாக தைலமி ரஹிமஹுல்லாஹ் அவர்களும், ஹாகிம் தாரீகிலும் பதிவு செய்துள்ளனர். இதனை இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது அத்துர்ருல் மன்தூர் எனும் நூலில் கூறுகின்றனர்.
பதாவா ஹதீதிய்யா ஓரம் பக்கம் 233
குத்புல் ஹிந்த் அவர்களின் கனவுக்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைகின்றது.
நன்றி: வஸீலா 1-11-87
ஒடுக்கத்துப் புதன் துஆ
بسم الله الرحمن الرحيم.
سَلاَمٌ قَوْلاًَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ. سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِِيْنَ. سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ. سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ. سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ. اَللّٰهُمَّ اَعْصِمْنَا مِنَ الْبَلآءِ وَدَرْكِ الشَّقَآءِ وَسُوْءِِ الْقَضَآءِ وَشَمَاتِةِ الْآعْدَآءِ وَمَلْجُوْمِ الْوَبَآءِ وَمَوْتِ فُجْاءَةٍ وَمِنْ زَوالِ الْبَرَكَةِ وَالنِّعْمَةِ وَمِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُبْنِ وَالْبَرْصَامِ وَالْحُمّٰى وَالشَّقِيْقَةِ وَمِنْ جَمِيْعِ الْاَمْرَاضِ وَالْاَسْقَامِ بِفَضْلِكَ وَجُوْدِكَ يَاذَالْجَلاَلِ وَالْاِكْرَامِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ وَصَلَّى اللهُ عَلىَ خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلىَ اٰ لِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَا لَمِيْنَ اٰمِيْنَ .
இதை கரைத்து குடித்த பின் நக்ஷபந்தியா ஷெய்குமார்கள் பேரில் பாத்திஹா ஓதி ஹதியா செய்யவும்.
ஒடுக்கத்துப் புதன் உண்டா?
சபர் மாத இறுதிப் புதன் கிழமையினையே ஒடுக்கத்துப் புதன்என்று அழைக்கின்றனர்.

இந்த நாளில் வாழை இலைகளிலோ அல்லது பனை ஓலைகளிலோ திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை உடலில் குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லீம்களிடம்
இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் கற்றறிந்த மார்க்க அறிஞர்களாக இருந்தனர்.அவர்களின் பார்வையில் இது மார்க்கத்திற்கு உட்பட்டதாகவே தெரிந்தது. எனவே அதை அவர்கள் தடுக்கவில்லை.

எனவே இது பற்றி திருக்குர்ஆனும் நபி மொழிகளும், இஸ்லாமிய அறிஞர்களால் சொல்லப்பட்ட தகவல்களையும் சுருக்கமாகத் தருகின்றோம்.

அல்லாஹ் படைத்த ஏழு நாட்களில் கெட்ட நாள், மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றுக்கான நாள் உண்டு என்பதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது. 
انا ارسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ("ஆத்" கூட்டத்தினர் மீது) "நஹ்ஸ்" உடைய நாளில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். 
திருக்குர்ஆன் – கமர் அத்தியாயம் – வசனம் – 101 

فارسلنا عليهم ريحا صرصرا في ايام نحسات
நிச்சயமாக நாம் அவர்கள் மீது "நஹ்ஸ்" உடைய நாட்களில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். 
திருக்குர்ஆன் – புஸ்ஸிலத் அத்தியாயம் – வசனம் – 16 

மேற்கண்ட இரு வசனங்களிலும் முன் வாழ்ந்த கூட்டத்தினருக்கு அல்லாஹ் கடுங் காற்றை அனுப்பி அவர்களைத் தண்டித்ததாக  கூறியுள்ளான். 

மேற்கண்ட இரு வசனங்களில் முந்திய வசனத்தில் "நஹ்ஸ்" என்ற சொல் ஒருமையாகவும் இரண்டாம் வசனத்தில் பன்மையாகவும் வந்துள்ளது. இச்சொல்லுக்கு தீமை, மிடிமை, தரித்திரம் போன்ற அர்த்தங்கள் உள்ளன. மேற்கண்ட இரு வசனங்கள் மூலம் "நஹ்ஸ்" உடைய நாளொன்று உண்டு என்பது தெளிவாகின்றது. அந்நாள் எது என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது இவ்விவரத்தை சரியாக அறிந்து கொள்வதாயின் "ஆத்" கூட்டத்தினருக்கு அல்லாஹ் பயங்கர காற்றை காற்றை அனுப்பிய மாதம், நாள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். இதில் கூட வரலாற்று ஆசிரியர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. எனினும் இது தொடர்பாக சொல்லப்பட்டுள்ள பலருடைய கருத்துக்களையும் இங்கு தருகின்றோம்.

அந்த நாள் புதன் கிழமைதான் என்று அநேக அறிஞர்கள் கருத்துக் கூறி உள்ளனர். ஆயினும் அவர்கள் எந்த மாதம் என்பது பற்றி தெளிவாகவும் திட்டவட்டமாகவும் ஒன்றும் சொன்னதாகக் காணவில்லை. தப்சீர் றூஹுல் மஆநீயில் ஆசிரியர் அவர்கள் தங்களின் மேற்கண்ட விரிவுரை நூல் 27 ம் பாகம் 119 ம் பக்கத்தில் அது  ஷவ்வால் மாதப் பிற் பகுதியிலுள்ள புதன் கிழமை என்று கூறியுள்ளார்கள். அல்லாமா வகீஉ  ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் "குறர்" என்ற நூலில் ஒவ்வொரு மாதத்தின் கடைசிப் புதன்கிழமை "நஹ்ஸ்" உடைய நாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளதாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத்தொட்டும் வந்துள்ள நபீ மொழியை இப்னு மர்தவைஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும், அல்ஹதீபுல் பக்தாதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் அறிவித்துள்ளதாக எழுதியுள்ளார்கள். இமாம் தபறானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அந்நாள் புதன் கிழமை என்று தங்களின்தபறானீ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். ஆயினும் மேற்கண்ட இரு நபீ மொழிகளையும் அபூ ஹாதம், இப்னு ஜவ்ஸீ, இப்னு றஜப், சகாவீ ஆகியோர் "ழயீப்"  பலம் குறைந்தவை என்று கூறி உள்ளனர்.
புதன் கிழமை "நஹ்ஸ்' உடைய நாள் என்று தகவல்  இருப்பது போல அது நல்ல நாள் என்றும் தகவல் உள்ளன. மின்ஹாஜுல் ஹுலைமீ, ஷுஆபுல் பைஹகீ ஆகிய இரு நூல்களிலும் புதன் கிழமை மதிய நேரத்தின் பின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இமாம் புர்ஹானுல் இஸ்லாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் "ஹிதாயஹ்" என்ற நூலில் வந்துள்ளதாக "தஃலீமுல் முதஅல்லிம்" என்ற நூலில், புதன் கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என்றும் அன்றுதான் அல்லாஹ் ஒளியைப் படைத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால்தான் பெரியோர்கள்- ஹஸ்ரத்மார்கள் கல்வி சம்பந்தமான வகுப்புக்களை புதன் கிழமையில் தொடக்கி வந்துள்ளார்கள். அதோடு புதன் கிழமை கல்விக்குரிய நாளென்றும் பரவலாக கணிக்கப் படுகின்றது. 



எவனாவது புதன் கிழமை மரங்களை நட்டு "சுப்ஹானல் பாஇதில் வாரிதி" என்று சொல்வானாயின் அவை அவனுக்கு காய் கனிகளைக் கொடுக்கும் என்ற இந்த நபீ மொழியை ஜாபீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க இப்னு ஹிப்பான்  ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும் தைலமீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும்  தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். இந்த நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு பெரியோர்கள் செயல் பட்டு வந்துள்ளார்கள்.
புதன் கிழமை "நஹ்ஸ்" உடைய நாள் என்பதற்கு சில தகவல்களை இங்கு தருகிறோம். "எனது உம்மத்துக்கள் வெறுக்கமாட்டார்கள் என்றிருந்தால் புதன் கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று நான் அவர்களை பணித்திருப்பேன்" என்று பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறியதாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹ அறிவித்துள்ளார்கள். இந்த நபீ மொழி "பிர்தௌஸ்" என்ற நூலில் பதிவாகி உள்ளது" 
வார நாட்களில் சனிக்கிழமை – சூட்சி, துரோகத்துக்குரிய நாளாகும். ஞாயிற்றுக் கிழமை மரம் நடுதல், கட்டிடம் கட்டுவதற்குரிய நாளாகும். வியாழக் கிழமை தேவைகளைத் தேடுவதற்கும் அதிகாரிகளிடம் செல்வதற்கும் உரிய நாளாகும். வெள்ளிக் கிழமை திருமணப் பேச்சுக்கும், திருமணம் செய்வதற்கும் பொருத்தமான நாளாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். 
இந்த நபீ மொழியை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்ததாக அபூயஃலா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும், அபூ சயீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் அறிவித்ததாக இப்னு அதிய்யஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும், தமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் "அல்பவாயித்"என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ஆயினும் சகாவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இந்த நபீ மொழியை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். 
வெண்குஷ்டம்,கருங்குஷ்டம் இரண்டும் புதன் கிழமையில் தான் வெளியாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபீ மொழியை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளதாக இப்னு மாஜாவும், வேறு இரு வழிகளில் ஹாகிம் அவர்களும் பதிவு செய்துள்ளார்கள். புதன் கிழமை நகம் வெட்டுதல் கூடாதென்றும் அவ்வாறு செய்தால் குஷ்ட நோய் வரும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் செல்வது நல்லதெனினும் அதை புதன் கிழமை தவிர்த்துக் கொள்வது நல்லதென்று தகவல்கள் கூறுகின்றன. 
புதன் கிழமை மிடிமைக்குரிய நாளாக கருதப்படும் என்றும், மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிகவும் கடுமையான மிடிமைக்குரிய நாளென்றும் "அர்றவ்ழஹ்" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிடிமைக்குரிய நாளென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.   


"ரூஹுல் பயான்" என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூல்  வால்யூம் 09 பக்கம் 324 புதன் கிழமையில் சுவர்கத்து நீர் உலகத்து நீருடன் கலக்கப் படுவதால் அன்று குளிப்பது சிறந்ததென்று கூறப் பட்டுள்ளது. 



தண்டனை பெற்ற எந்த ஒரு கூட்டமாயினும் அது புதன் கிழமையிலேயே தண்டிக்க பட்டுள்ளது. இத்தகவல் ரூஹுள் பயான் வால்யூம் 08 பக்கம் 328 இல் இடம்பெற்றுள்ளது.


சபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமையில் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள், துன்பங்கள் இறங்குவதாகவும், வருட நாட்களில் அந்நாள் ஒன்று மட்டுமே கஷ்டமான நாள் என்றும் இறைஞானிகள் சொல்லியிருப்பதாக "முஜர்றபாதுத் தைறபீ" என்ற நூல் 103 ம் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது. 
அஷ் ஷெய்குல் காமில் பரீதுத்தீன் மஸ்ஊத் கன்ஜே ஷகர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், தங்களின் ஞான குரு ஹாஜா முயீனுத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் அவ்ராத் தொகுப்பில் பின்வருமாறு இருக்கத் தான் கண்டதாக கூறியுள்ளார்கள்.


ஒவ்வொரு வருடமும் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள் – துன்பங்கள் இறங்குகின்றன அவை யாவும் சபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையிலேயே இறங்குகின்றன. அந்த வருட நாட்களில் இந்நாள் மிகவும் கஷ்டமானது. அன்று யாராவது நான்கு ரக்அத் தொழுது நான்குரக்அத்திலும் "பாத்திஹா சூரா" ஓதிய பின் இன்னா அஃதைனாகல் கவ்தர் என்ற சூரத்தை 17 தடவைகளும், குல்ஹுவல்லாஹ்வை ஐந்து தரமும் , குல் அஊது பிறப்பில் பலக் ஒரு தரமும், குல் அஊது பிறப்பின் நாஸ் ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும் அவன் சகல பலாய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுவான். பின்பு "சலாம்" என்று சொல்லப்படுகின்ற திருக்குர்ஆன் வசனங்களை பன்னீர், கஸ்தூரி, குங்குமம் கொண்டு பீங்கானில் எழுதிக்குடிக்கவும் வேண்டும்.
 பழாயிறுஷ் ஷுஹூரில் ஹிஜ்ரிய்யஹ் – பக்கம் – 33 ,34 


من بشرني بخروج صفر ابشره بالجنة

சபர் மாதம் முடிந்து விட்டதென்று என்னிடம் சுபச்செய்தி சொல்பவனுக்கு சுவர்கத்தைக் கொண்டு நான் சுபச்செய்தி சொல்வேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் "ஹயாதுல் ஹயவான்" என்ற நூல் முதலாம் பாகம் 120 ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

"இஆனதுத் தாலிபீன்" என்ற சட்டக்கலை நூலை எழுதியவரும்மக்காவில் பிறந்து மதீனாவில் சமாதி கொண்டுள்ளவருமான அஸ்ஸெய்யித் முஹம்மத் ஷதா அத்திம்யாதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் "நிஹாயதுல் அமல்" என்ற சட்ட நூலில் 208 ம் பக்கத்தில் ஒடுக்கத்துப் புதன் பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய், கஷ்டங்கள், சோதனைகள், "லவ்ஹுல் மஹ்பூல்" பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்துக்கு சபர் மாத இறுதிப் புதனன்று இறக்கப்படுகின்றன. ஆகையால் கீழ் காணும் திருவசனங்களைப்

 سلام قولا من رب الرحيم

سلام على عباد الذين اصطفى

سلام على نوح في العلمين سلام على ابراهيم

سلام على موسى وهارون

سلام على الياسين

سلام هي حتى مطلع الفجر


 பாத்திரங்களில் எழுதி அதைத் தண்ணீரால் கரைத்து குடிப்பவர்களுக்கு குறித்த சோதனைகள் ஏற்படமாட்டாது என்று கூறியுள்ளார்கள். 
மக்காவில் பிறந்த இந்த நூலாசிரியர்கள் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது விதண்டாவாதம் செய்வோர் ஒடுக்கத்துப் புதன் பற்றி சொல்லும் கதை மூடத்தனமானது என்பது தெளிவாகிறது.
ஒவ்வொரு மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் குறிப்பாக 'சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் "நஹ்ஸ்" மிடிமைக்குரிய நாட்கள் என்பதற்கான மேற்கண்ட ஆதாரங்கள் கொண்டும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரண வருத்தம் "சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமை ஆரம்பமானதை கருத்திற் கொண்டும் அன்றைய தினம் திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது வேறு பாத்திரங்களிலோ எழுதி நோய், மிடிமை, கஷ்டம், போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்குடன் குடிப்பதை இஸ்லாமிய மூத்த அறிஞர்கள் நல்ல காரியமெனக் கூறியுள்ளதால் இவ்வழக்கம் எந்த வகையிலும் "ஹறாம்" ஆகவோ "பித்அத்" ஆகவோ "ஷிர்க்" ஆகவோமாட்டாது. 

எனவே "சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமை திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ காகிதத்திலோ எழுதிக் கரைத்துக்  குடிப்பதும், உடலில் தேய்த்துக் குளிப்பது "முபாஹ்" ஆகுமாக்கப்பட்ட காரியமே அன்றி அது எந்த வகையிலும் மார்கத்துக்கு முரணாகி விடாது. அதனால் ஏதோ ஒரு வகையில் பயன்தான் கிடைக்குமேயன்றி பாவம் வந்துவிடாது. இது தொடர்பாக வந்துள்ள நபி மொழிகளில் பலம் குறைந்தவை என்று வைத்துக் கொண்டாலும் கூட பலம் குறைந்த நபி மொழிகளை ஆதாரமாக கொண்டு செயல்பட முடியுமென்பதை அவர்கள் தெரிந்து கொள்ளல் வேண்டும். இவ்வழக்கம் "ஹறாம்" என்பதற்கோ "ஷிர்க்" என்பதற்கோ ஆதாரம் இல்லாதிருப்பதாலும், ஆனால் "முபாஹ்" ஆஹும் என்பதற்கு ஆதாரம் இருப்பதாலும் இதை தடுப்பது கூடாது என்பதே தெளிவான முடிவு.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "ஒடுக்கத்துப் புதன்"

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates