Elegant Rose - Diagonal Resize 2 இஸ்லாமும் பாலியலும் ~ TAMIL ISLAM

ஞாயிறு, 6 மே, 2012

இஸ்லாமும் பாலியலும்

    mohammed zubair siraji



அன்பிற்கினிய வாசக நேயர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும். இருவரில் ஒருவர் திருப்தியடையாவிட்டாலும்கூட, அவர் தன் பாலுணர்வுகளை வேறு வழிகளில் தீர்த்துக்கொள்ள அதிகமாகத் தூண்டப்படலாம்.
பலநேரங்களில் தம்பதியரூள் ஒருவர் ஓர் உடலுறவுச் செயல்வடிவை விலக்கப்பட்டது என்று தவறுதலாக எண்ணி அதில் ஈடுபட மறுக்கக்கூடும். இதனால் அவர்களுக்கிடையில் உறவுப்பிரச்சனை ஏற்படலாம். ஆகவே, தம்பதிகள் உடலுறவு நடத்தை குறித்த இஸ்லாமிய போதனைகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும். ஏனெனில், ஆரோக்கியமான பாலியல் வாழ்வு மேற்கொள்வதுடன் தாம்பத்ய மோதலையும் தவிர்த்துவிடலாம்.
பொதுவாக பாலியல் குறித்த எந்தவொறு கலந்துரையாடலும், மார்க்க நன்னடத்தைக்கும் (அதப்), நாண உணர்வுக்கும் (ஹயா) பங்கம் ஏற்படுத்தும் செயல் என்று சிலர் கருதக்கூடும். ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பாலியலைக்குறித்து விரிவாக விளக்கியுள்ளார்கள் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.
இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாலியல் செய்திகளை எப்படியெப்படியெல்லாம் கற்பித்தார்கள் என்பதுபற்றி ஏராளமான நபிமொழிகள் (ஹதீஸ்கள்) உள்ளன.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உடலுறவு தொடர்பான கேள்விகளைக் கேட்பதிலிருந்து நபித்தோழர்கள் வெட்கி ஒதுங்கவில்லை. பிரபலமான ஒரு சம்பவத்தில், உமர் இப்னு அல்-ஃகத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ஒருவர் தம் மனைவியைப் பின்புறமிருந்து, அதாவது ஆசனவாயில் அல்லாமல், பெண்குறியில் புணர்வது அனுமதிக்கப்பட்டதா? என்பது பற்றி வினவினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர்கள் இதை அவமரியாதையான கேள்வி என்று கண்டிக்கவில்லை. மாறாக, இந்தக் கேள்வியின் பதிலை குர்ஆனிய வசனங்களாக அல்லாஹ்வே இறக்கி வைக்கும்வரை காதிருந்தார்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 2980)
இன்னும் சோல்லவேண்டுமானால், பெண்களும்கூட பாலியல் தொடர்பான கேள்விகளைத் தயக்கமோ வெட்கமோ இன்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்கத்துணிந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவ்ற்றுக்கெல்லாம் பதில் உரைப்பதிலிருந்து வெட்கி ஒதுங்கவில்லை. இத்தனைக்கும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையிலேயே நாணம் மிக்கவர்கள்.
ஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்; உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதரிடம் வந்து கூறினார்: "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண் ஈரக்கனவு கண்டபின் குளிப்பு அவள் மீது கடமையா?" அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம்! திரவம் வெளிப்பட்டிருந்தால்" என பதிலளித்தார்கள்.
ஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா தம் முகத்தை மறைத்துக்கொண்டு கேட்டார்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுக்கு(கும் கூட) திரவம் வெளிப்படுமா?" அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம்! உம் வலக்கை மண்ணைப்பற்றிக் கொள்ளட்டுமாக (இது ஒருவரின் கூற்றோடு முரண்படும்போது அவரிடம் நளினமாகக் கூறப்படும் அரபுச் சொற்றொடராகும்) பிறகு எப்படி மகன் தாயின் சாயலில் பிறக்கின்றான்?" என்றார்கள். (நூல்: புகாரி 130)
இங்கு நாம் கவனிக்கவேண்டியது அந்த ஹதீஸை மட்டுமல்ல, ஈரக்கனவு போன்ற பாலுறவுச் செய்திகளைப் பற்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்பதிலிருந்துகூட ஒரு பெண்ணுக்குத் தயக்கவுணர்வு இல்லை, அக்காலத்தில்!

"அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை" எனும் ஹளரத் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாசகத்திலிருந்து, தீன் - மார்க்க விஷயங்களைக் கற்பதில் வெட்க உணர்வு என்பது கிடையாது எனும் தெளிவான செய்தி நமக்கு கிடைக்கிறது.
உண்மையில், இறைவனின் போதனைகளிலிருந்தும், அவனுடைய தூதரின் போதனைகளிலிருந்தும் வெட்கப்பட்டு ஒதுங்கிக் கொள்வது தவறானது - அது பாலியல் விஷயங்கள் குறித்தவையாக இருப்பினும் சரியே.
முஜாஹிதிடமிருந்து இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்: "வெட்கப்பட்ட ஒரு மனிதராலும், ஆணவமுடைய ஒரு மனிதராலும் தூய அறிவை (இல்ம்) பெற்றுக்கொள்ள இயலாது" (நூல்: ஸஹீஹுல் புகாரி 1:60)
நாணம் இஸ்லாத்தின் ஓர் அடிப்படைக்கூறு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும், மார்க்க விஷயங்களைக் கற்பது என்று வரும்பொழுது அது தடைக்கல்லாக இருக்கக்கூடாது. நவீன உலகில் பாலியல் குறித்த கேள்விகள் வெளிப்படையாகக் கலந்துரையாடப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் அநாகரிகமான விதத்தில்! எனவே, பாலியல் குறித்த விஷயங்களை ஒழுக்க நாகரிகம் கொண்ட இஸ்லாமிய போதனைகளை சரியான முறையில் கற்பதில் நாம் ஏன் வெட்கப்படவேண்டும்?

இப் பகுதியில் (ஆண்-பெண் பாலியல்) வெளியாகும் கட்டுரைகள், செய்திகள் மிகவும் வெளிப்படையாக இருப்பதாக உணர்வோர், இறைவனின் சொற்களை மனதில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
"நிச்சயமாக அல்லாஹ் உண்மை(யை விளக்கும்) விஷயத்தில் வெட்கப்படுவதில்லை" (அல்குர்ஆன் 33:35)

இதையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அண்ணலாரின் தோழர்களும் எதிரொலித்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி 130, ஸுனன் இப்னு மாஜா 1924).
எனவே, தம்பதியருக்கு இடையிலுள்ள பாலியல் பிரச்சனையே மணவாழ்வின் விரிசலுக்கு காரணமாக அமைதல், நவீன காலத்தில் பாலியல் மீதான தீராத மோகத்தினால் முஸ்லிம்கள் மீது அது ஏற்படுத்தும் கடுமையான தாக்கம் ஆகியவற்றால் பாலியல் குறித்த இஸ்லாமிய வழிகாட்டுதல் முஸ்லிம்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றன.
மேலும், முஸ்லிம்களில் பலர் உடலுறவு குறித்த இஸ்லாமியச் சட்டங்களையும் ஒழுங்குகளையும் பற்றி அறவே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் புணர்வது தடுக்கப்பட்டுள்ளது என்பதுகூட சிலருக்குத் தெரியாது. மேலும் பலர், தங்கள் வாழ்வை இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர்; கற்பதற்கோ ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். ஆனால், அறிஞர்களிடம் நேரடியாகக் கேட்பதற்கு சங்கடப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்காகவும் இப்பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 







''உடலுறவும் ஓர் அறச் செயலே'' -நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
நமது எண்ணங்கள் (நிய்யத்) தான் சாதாரண செயல்களைப் பெரும் நன்மையான காரியமாக உயர்த்தி, அளப்பறிய நற்கூலியை இறைவனிடம் நமக்குப் பெற்றுத்தருகிறது.

"செயல்கள் எண்ணத்தின் (நிய்யத்தின்) அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ஒருவர் எதை நாடுகிறாரோ அதுவே அவருக்குக் கிடைக்கும்...'' அறிவிப்பவர்: உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். (இந்த நபிமொழியைத்தான் இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நபிமொழி திரட்டிலேயேயே மிகச்சிறந்த நூலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஸஹீஹுல் புகாரியின் முதல் நபிமொழியாக இடம் பெறச்செய்துள்ளார்கள்.)
இதன் மூலம், ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சரியான எண்ணம் அமைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஒருவரின் செயல் அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைவதற்கு, அதை அல்லாஹ்வின் அன்புத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிக்கேற்ப செய்வதாய் எண்ணம் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது வெறும் பழக்கச் செயலாகவே இருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, ஹளரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: "திருமணம் என் வழியை (ஸுன்னா) சார்ந்தது. எவர் என் வழியை (நிராகரிக்கும் முகமாக) பின்பற்றுவதில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர். மேலும், திருமணம் செய்யுங்கள் (மற்றும் இனவிருத்தி செய்யுங்கள்) நிச்சயமாக நான் உங்களைக் கொண்டு, பிற சமூகத்தாரை எண்ணிக்கையில் விஞ்சிவிடுவேன்..." (நூல்: ஸுனன் இப்னு மாஜா 1846)
இந்த நபிமொழியிலிருந்து, மக்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதும், சந்ததியினரைத் தேடிக்கொள்வதும் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் அனுமதிக்கப்பட்ட குறிக்கோள்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.
திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம் இயங்குவதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆக, உலகம் இயங்குவதற்கு ஒரு உன்னதமான அர்த்தத்தை வழங்குவது உடலுறவு என்று சொல்வதில் தவறேதுமில்லை.

உடலுறவு மனித வாழ்வுக்கு எந்த அளவு முக்கியமோ அது போன்று இந்த உலகம் இயங்குவதை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உரிய ஒரு செயலாகவும் இருக்கிறது. எனவே அது எந்த அளவுக்கு ஒரு புண்ணியமான செயல் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அந்த புண்ணியமான செயலை இறைவன் அனுமதித்த விதத்தில் நாம் நிறைவேற்றும்போது அது ஓர் மகத்தான இறைவணக்கமாகவே ஆகிவிடுகிறது என்பது நிச்சயம். ஆம்! அனுமதிக்கப்பட்ட உடலுறவை இஸ்லாம் ஓர் இறை வழிபாடாகவே எடுத்தோதுகிறது.
ஒருவர் தம் துணைவரோடு உடலுறவில் ஈடுபடும்போது, அனுபவித்து மகிழும், இச்சையைத் தணிக்கும் நோக்கம் கொள்வதில் தவறில்லை. அது இயற்கையானதே. உடலுறவு ஓர் அசிங்கமான செயலல்ல. மாறாக, அது எண்ணற்ற நபிமார்களும், அல்லாஹ்வின் நல்லடியார்களும் செய்துள்ள ஓர் உயர்வான செயல். எனவே, இச்செயலை சட்டத்துக்கு உட்பட்டு மகிழ்ந்து அனுபவிப்பது எவ்விதத்திலும் வெட்க உணர்வுக்கு எதிரானதல்ல, நற்பண்புக்கு முரணானதுமல்ல.
உடலுறவு அசுத்தமானது, இச்சையை பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் - மல ஜலம் கழிக்கும் தேவையைப் போலத்தான் அதை செய்ய வேண்டியுள்ளது. - என்று சிலர் காண்கின்றனர். இப்படி ஒரு தவறான எண்ணம் கொண்டிருக்கும் மனிதர்கள் தயக்கத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். அதிலிருந்து கிடைக்கும் சுக அனுபவங்கள் அனைத்தும் அவமரியாதையானது, ஒழுக்கக்கேடானது என்று கருதுகின்றனர். உண்மையில் இவர்கள் உடலுறவின் அசல் தன்மையை தவறவிட்டு விட்டவர்கள்.
அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும். எனவே அதை இயன்ற அளவு அனுபவித்து மகிழ வேண்டும். தொழுகையை ஒருவர் எவ்வாறு இறைசிந்தனையுடன் மனம் லயித்துத் தொழுகிறாரோ அவ்வாறே அவர் முழு மன ஈடுபாட்டுடன் உடலுறவு கொண்டு அனுபவிக்கும் போதுதான் அவருக்கு இயற்கையாகவே; தனக்கு சுகத்திலும் சுகமான, சுவையிலும் சுவையான ஓர் அற்புத இன்பத்தை வாரி வழங்கினானே அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்லும் எண்ணம் வரும். அந்த நிலைக்கு நம் மனதை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரியான எண்ணங்கள்; உடலுறவை ஓர் உடல் அளவிலான சுகம் என்பதிலிருந்து மாற்றி, ஓர் அளப்பரிய நற்கூலி கிடைக்கும் செயலாகவும், ஒருவகையான அறச்செயலாகவும் உயர்த்துகின்றன.
அபூதர் அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரியதாக அறிவிக்கிறார்கள்:
"...நிச்சயமாக ஒவ்வொரு தஸ்பீஹும் (ஸுப்ஹானல்லாஹ் - இறைவன் தூய்மையானவன் எனக் கூறுதல்) அறச் செயலே,
ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் எனக்கூறுதல்) ஓர் அறச் செயலே,
ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனுக்கே எனக் கூறுதல்) அறச் செயலே,
ஒவ்வொரு தஹ்லீலும் (லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை எனக் கூறுதல்) அறச் செயலே,
நன்மையை ஏவுவதும் அறம், தீயதைத் தடுப்பதும் அறம், மற்றும் உங்கள் எல்லோரின் உடலுறவுச் செயலிலும் அறம் இருக்கிறது" என்றார்கள்.
(அப்போது நபித்தோழர்கள் கேட்டார்கள்), அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் உடலுறவு ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவா அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்?"
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; "அவர் அதை (உடலுறவை) விலக்கப்பட்ட விதத்தில் செய்தால் அவர் பாவம் செய்பவராகக் கருதப்படுவதை நீங்கள் அறியவில்லையா? அதுபோலத்தான், அவர் அதை அனுமதிக்கப்பட்ட விதத்தில் செய்தால், அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்" (ஸஹீஹ் முஸ்லிம் 1006)
அல்லாஹ் தனது திருமறையாம் அல்குர்ஆனில் கூறுகின்றான்; "....மேலும், இப்போது அவர்களுடன் (உங்கள் துணைவியருடன்) உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள். (2:187)
"அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள்" எனும் வசனத்திலிருந்து அல்லாஹ் விதித்துள்ளதை தேடிக்கொள்வதற்காக வேண்டியாவது ஒவ்வொருவரும் உடலுறவு கொள்வது ஓர் இறைக்கட்டளை என்பதை விளங்கலாம். இறை கட்டளை எனும்போது அதை நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையென்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
"பெண்களுடன் உடலுறவு கொள்வதன்மூலம், உங்களுக்காக விண்ணுலக ஏட்டில் (லவ்ஹூல் மஹ்ஃபூள்) விதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை நீங்கள் தேடிக்கொள்ள வேண்டும். வெறுமனே இச்சையைத் தணித்துக் கொள்ளும் உடலுறவு மட்டும் நோக்கமாக இருப்பது உவப்பானதல்ல'' என்று தஃஸீரே உஸ்மானி (1:123) யில் எழுதுகிறார்கள்.
அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும். எனவே அதை இயன்ற அளவு அனுபவித்து மகிழ வேண்டும். தொழுகையை ஒருவர் எவ்வாறு இறைசிந்தனையுடன் மனம் லயித்துத் தொழுகிறாரோ அவ்வாறே அவர் முழு மன ஈடுபாட்டுடன் உடலுறவு கொண்டு அனுபவிக்கும்போது அவருக்கு இயற்கையாகவே தனக்கு சுகத்திலும் சுகமான, சுவையிலும் சுவையான ஓர் அற்புத இன்பத்தை வாரி வழங்கிய அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்லும் எண்ணம் வரும்படி நாம் நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒருவர் பரவசத்தின் உச்சநிலையிலும்கூட தன் தம் துணைவரோடு கொள்ளும் உயலுறவு மூலம், ஆசை நிறைவேற்றத்துக்கு அப்பால் உள்ள பல உயர் நன்னோக்கங்களை நினைவில் நிறுத்த வேண்டும். அதே சமயம் உடலுறவின்போது இறைசிந்தனை இருந்தால்தான் அது வணக்கமாக ஏற்றுக்கொள்ளப்படும் எண்று அர்த்தமல்ல. அனுமதிக்கப்பட்ட வழியில் - திருமணம் முடித்து தன் மனைவியுடன் உடலுறவு கொண்டாலே அது வணக்கமாகத்தான் ஆகிவிடுகிறது.
அனைவருமே தொழுதாலும் ஒவ்வொருவருடைய எண்ணத்திற்கும் இக்லாஸிற்கும் தகுந்தாற்போல் நன்மைகளில் வித்தியாசம் உண்டல்லவா அது போலத்தான் இதிலும் என்று கொள்ளலாம். உடலுறவின்போது இறைவனின் நினைவு இருந்தால் அதற்கு அதிக நன்மை உண்டு என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியதே.




 உடலுறவு - தம்பதியர் இருவருக்குமான உரிமை



பாலியல் திருப்தி என்பது கணவன், மனைவி இருவருக்கும் உள்ள உரிமை.
இது கணவனுக்கு மட்டுமே உள்ளது என நினைத்துக்கொள்வது தவறாகும்.
கணவனின் அளவுக்கு மனைவிக்கும் தன் பாலியல் தேவைகளின் நிறைவை எதிர்பார்க்கும் உரிமை உண்டு.
துல்லியமாக சொல்ல வெண்டுமானால், உடலுறவு என்பது தம்பதியர் இருவருக்குமான உரிமையாகும்.
ஒருவர் தம் துணைவியரின் பாலியல் பசியைத் தணிப்பது உடலுறவின், இன்னும் சொல்லப்போனால் மணவாழ்விற்கும்கூட சட்ட ஏற்புக்குறிய வழிமுறையாகும்.
இனி, உடலுறவில் கணவனின் உரிமை என்ன? மனைவியின் உரிமை என்ன? என்பதைப் பார்ப்போம்.
  கணவனின் உரிமை : 
ஓர் ஆண் உடலுறவுக்கு விரும்பும்போதெல்லாம் அவர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள உரிமை பெற்றுள்ளார். அவருக்காக தன்னை தயாராக வைத்துக்கொள்வது மனைவியின் மார்க்கக்கடமையில் ஒன்றாகும். நியாயமான காரணமின்றி இதில் தவறவிடுவது பாவச்செயலாகும்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;
"ஓர் ஆண் தன் மனைவியைத் தன் படுக்கைக்கு அழைத்து அவள் வர மறுத்துவிட்டால், அவர் கோபமான நிலையில் தூங்குவார் எனில், காலைப்பொழுது வரை வானவார்கள் அவளை சபிக்கின்றனர். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி, 3065 முஸ்லிம் 1436) இங்கு முஸ்லிமில் உள்ள சொற்களே இடம்பெற்றுள்ளன.
திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றோர் ஹதீஸ்; "எவன் கைகளில் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒருவர் தன் மனைவியைத் தன் படுக்கையின்பால் அழைத்து அவள் மறுத்துவிட்டால், அவளுடைய கணவன் அவள் மீது திருப்தியுறும்வரை அல்லாஹ் அவள் மீது கோபம் கொண்டிருக்கிறான். (நூல்: முஸ்லிம் 1436)

இதுகுறித்து இன்னுமோர் நபிமொழி; "ஓர் ஆண் தன் மனைவியைப் பாலியல் தேவை நிறைவேற்றத்துக்காக அழைத்தால், அவள் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் (அதை விட்டுவிட்டு) வரவேண்டும். (நூல்: திர்மிதீ 1160)
இவையும் இவை போன்ற பிற நபிமொழிகளில் இருந்தும் உடலுறவுக்கான கணவனின் கோருதலுக்கு மனைவி பணிவதன் முக்கியத்துவம் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இயல்புநிலையில், மனைவி கணவனின் அழைப்பை மறுப்பது கொடிய பாவமாகும். அதைவிட, அவளின் மறுப்பால் கணவன் விலக்கப்பட்ட செயலை (அதாவது வேறொரு பெண்ணை நாடி விபச்சாரம்) செய்துவிட்டால் அது மாபெரும் பாவமாகிவிடும்.
எனவே தகுந்த காரணமின்றி மனைவி தன் கணவனுக்கு உடலுறவை மறுப்பது விலக்கப்பட்ட செயல் (ஹராம்) ஆகும் என்பதை மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
இந்த கருத்தின் அடிப்படையில்தான், பெண்கள் நஃபிலான நோன்பு வைப்பதற்குமுன் தங்கள் கணவன்மார்களிடம் அனுமதி கேட்குமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்தார்கள். ஏனெனில், அவள் நோன்பு நோற்றிருக்கும்போது கணவன் தன் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்படலாம் அல்லவா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "ஒரு பெண், தன்னுடைய கணவன் அவளுடன் இருக்கும்போது அவருடைய அனுமதியின்றி (நஃபிலான) நோன்பு நோர்க்கக்கூடாது. (நூல்: புகாரி 4896)
ஆண்கள் கவனத்தில் கொள்ளவேன்டிய இரு விஷயங்கள் :
முதலாவதாக, உடலுறவு கோரும் கணவனின் உரிமை என்பதற்குப் பொருள், அவர் தம் இச்சையைத் தணித்துக்கொள்ளத் தம் மனைவியை வன்செயலால் கட்டாயப்படுத்தலாம் என்பதல்ல. கணவன் "கோப நிலையில் உறங்குவது", "அதிருப்தி கொள்வது" பற்றி ஹதீஸ்களில் (நபிமொழியில்) கூறப்படுவதிலிருந்து, கணவன் அவளுடன் பலவந்தமாக இணைவதிலிருந்தும், அவளைப் புண்படுத்துவதிலிருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் விஷயம் தெளிவுபடுகிறது.
அதுபோன்ற செயல் நியாயமாக இருப்பின், நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை கணவனுக்கு அனுமதித்திருப்பார்கள். இஸ்லாத்தின் கொள்கைகளில் பொதுவான சட்டம்; மார்க்க விஷயத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. இதுதான் சட்டம் என்று எடுத்துச் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறது. அதை பின்பற்றுதல் அல்லது பின்பற்றாமல் இருத்தல் என்பதை அவரவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறது. அதே வேளையில் சட்டத்தைப் பின்பற்றும்போது நற்கூலியும், சட்டத்தை மறுக்கும்போது தண்டனையும் நிச்சயம் உண்டு என்பதையும் இஸ்லாம் தெளிவாக எடுத்துச்சொல்கிறது.
இரண்டாவதாக, மனைவி தன்னை தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சாதாரண இயல்புநிலைகளில் பொருந்தும். இஸ்லாமியச் சட்டங்கள் (ஷரீஆ) விதித்த இடர்களோ, தகுந்த காரணமோ இருக்கும் நிலையில் அது பொருந்தாது. மனைவி தன் சுயவுரிமைகளை விட்டுத்தர வேண்டியநிலை இல்லாதவரை, அவள் தன் கணவனுக்குப் பணிய கடமைப்பட்டிருக்கிறாள். எனவே, இதுபற்றிய பல்வேறு ஹதீஸ்கள், தங்கள் கணவன்மார்களுக்கு எதிராக உடலுறவை ஆயுதமாகப் பயன்படுத்தும் பெண்களுக்கே ஓர் எச்சரிக்கையாகும்.
எனினும் மாதவிடாயில் இருந்தால்
அல்லது பேறுகால ரத்தப்போக்கு கொண்டிருந்தால்
அல்லது நோயுற்றிருந்தால்
அல்லது உடல்ரீதியாக உடலுறவு கொள்ள இயலாமல் இருந்தால்
அல்லது களைப்புற்று, உணர்வெழுச்சி குன்றியிருந்தால்
அல்லது உடலுறவுச் செயல்பாடு அவளின் நலனைப் பாதிக்கக்கூடியதாய் இருந்தால்,
தன் கணவனின் உடலுறவுக்கோருதலுக்கு அவள் இணங்கவேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, அவள் உடலுறவுக்கொள்ள இயலாமல் இருப்பதை கணவன் புரிந்துகொண்டு அவள்மீது அனுதாபம் காட்ட வேண்டும். எனினும், வெறுமனே "அதற்கான மனநிலையும் விருப்பமும் இல்லை" என்பது பெண்களின் நியாயப்பாடாக அமையாது.
அல்லாஹ் கூறுகின்றான்;
"எந்தவொரு ஆன்மாவின் மீதும் அது தாங்கவியலாத் சுமையை அல்லாஹ் சுமத்துவதில்லை." (அல்குர்ஆன் 2:286)
மனைவி கடும் நோயுற்று, உடலுறவுகொள்ள சக்திபெறாத நிலையில் இருப்பதைப் பொருட்படுத்தாது, தன் பாலியல் தேவைகளைப் பூர்த்திசெய்யுமாறு கணவன் மனைவியிடம் கோரும் பல உதாரணங்களை நாம் காண்கிறோம். சிலர், மணவிலக்கு செய்துவிடுவதாகக்கூட மனைவிமார்களை மிரட்டுகின்றனர். தங்களின் இந்த நடத்தைக்கு மேற்கூறிய ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர்! மனைவி உடலுறவில் ஈடுபடும் நிலையில் இல்லாது, அதற்காக ஓர் உண்மையான மற்றும் இஸ்லாமிய ரீதியாகத் தகுந்த காரணம் இருக்கும்பட்சத்தில், கணவன் மனைவியை நிர்பந்தித்தால், அவர் பாவம் செய்தவராகிறார். பெண்களும் மனிதப் பிறவிகளே; விரும்பும்போதெல்லாம் "ஆன்", ஆஃப்" செய்துகொள்ள அவள் இயந்ந்திரம் அல்ல என்பதையும் முஸ்லிம் கணவன்மார்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அறுதியாக, இந்த விவகாரங்களை மிகச் சிறந்தமுரையில் தீர்ப்பதற்கான வழிகளும் உண்டு. அவை; ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதல், மதிப்பு மரியாதை, அன்பு, பண்பு, பரிவு, துணைவருக்குத் தன்னைவிட முன்னிடம் அளிப்பது ஆகியவையே.
"நீங்கள் உங்களுக்கு விரும்புவதையே மற்றவர்களுக்கும் விரும்பாதவரை (உன்மையான) இறை நம்பிக்கையாளராக முடியாது" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை (நூல்: முஸ்லிம் 45) நினைவில் கொள்ள வேண்டும். இந்த கருத்தாக்கம் தாம்பத்யத்தில் மென்மேலும் கூடுதலான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
  மனைவியின் உரிமைகள் :  ஆணைப்போல், பெண்ணுக்கும் பாலியல் தேவைகள் உண்டு. எனினும், ஆணைப்போலல்லாமல், பெண் தன் பாலியல் வேட்கையின்மீது கூடுதல் கட்டுப்பாடு கொண்டவள். இந்த வித்தியாசம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவும் உடல், உணர்வெழுச்சி மற்றும் உள்ளூர இயல்புணர்ச்சி ரீதியான வேறுபாடுகளினால் தோன்றுகிறது.
பொதுவாக, பெண் தன் பாலியல் தேவைகளை நிறைவேற்றும்படி கேட்கமாட்டாள். மாறாக, அவளுக்கு இச்சை ஏற்படும்போது, தன் கணவனை வசீகரிப்பதற்காகு பல்வேறு உத்திகளைக் கைய்யாளுவள். தன்னை அலங்கரித்துக்கொள்ளுதல், ஆசையைத்தூண்டும் வகையில் கணவனிடம் பேசுதல், ஏக்கத்துடன் கணவரைப்பார்த்தல் முதலியன. மாதவிடாய் சுழற்சி முடிந்ததும் பெண்ணின் பாலுறவு விருப்பம் மிகுந்திருக்கும். என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்து. புரிந்துகொள்ளும் கணவன் இதை உணர்ந்து, தன் மனைவியின் சமிக்ஞைகளை உணர்ந்து செயல்படுவான்.
கணவன், தன் மனைவியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது மார்க்கக்கடமையாகும். ஒரு தகுந்த காரணமோ அனுமதியோ இன்றி, மனைவியின் இந்த உரிமையை கணவன் நிறைவேற்றத் தவறினால் அவர் பாவம் செய்தவராவார். எனவேதான் கணவன் தன் மனைவியுடன் சிறிது காலத்திற்கு ஒருமுறை (அடிக்கடி) உடலுறவு கொள்ள வேண்டும் எனப் பல சட்டவியலார்கள் கருதுகின்றனர்.
கணவன் தன் மனைவியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவளுடன் எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு கொள்வது என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்துவேற்பாடு உள்ளது.
இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்கள் கருத்தில், ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு இரவுகளுக்கு ஒருமுறையாவது உடலுறவு கொள்ளவது மார்க்கக்கடமை என்று கூறப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்திற்கு பின்வரும் சம்பவம் ஆதாரமாக அமைகிறது.
கதாவும் ஷஅபியும் அரிவிப்பதாக அப்துர் ரஸ்ஸாக் தம்முடைய அல்-முஸாஃபில் கூறுகிறார்;
"ஒரு பெண்மணி ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "என் கணவர் இரவில் நின்று வணங்குகிறார், பகலில் நோன்பு நோற்கிறார்" என்றாள். ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "நீர் உம் கணவரை மிகச் சிறப்பாகப் போற்றியிருக்கிறாய்" என்றார்கள். அதற்கு கஅப் இப்னு சவ்வார் அவர்கள், ''அவள் (அசலில்) புகார் செய்கிறாள்'' என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார். "எப்படி?" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்.
"அவள் தன் கணவரிடமிருந்து திருமணப் பங்கை பெறுவதில்லை எனக் கோருகிறாள் (அதாவது தன்னுடைய உரிமைகளை அவளது கணவன் நிறைவேற்றுவதில்லை)" என்றார். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "இந்த அளவுக்கு நீர் புரிந்திருந்தால் நீரே அவளுக்கு தீர்ப்பு கூறவும்" என்றார்கள். அப்போது அவர் (கஅப் இப்னு சவ்வார் கூறினார்; "அமீருல் முஃமினீன் அவர்களே! நான்கு மனைவிகளைத் திருமணம் செய்ய அல்லாஹ் அனுமதித்துள்ளான். எனவே நான்கு பகல்களில் ஒரு பகலும், நான்கு இரவுகளில் ஓர் இரவும் அவளுக்கு உரிமையுண்டு.." (நூல்: ஸுயூத்தி, தாரிக் அல்-குல்ஃபா - பக்கம் 161)
இதன் அடிப்படையில், நான்கு இரவுகளில் ஒருமுறை ஒரு மனைதர் தன் மனைவியின் பாலுணர்வுத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்களின் கருத்து. ஏனெனில், அவருக்கு நான்கு மனைவிகள் இருப்பின், அவர் மற்ற மூன்று இரவுகளை தன்னுடைய மற்ற மனைவிகளுடன் கழிப்பதற்கு அனுமதி உண்டு.
இமாம் இப்னு ஹஸமின் கருத்தில், ஒரு மனிதர் மாதத்தில் ஒருமுறையேனும் தன் மனைவியுடன் படுக்கையில் கூடுவது மார்க்கக்கடமை. அண்ணாரின் கூற்றுப்படி; மாதவிடாய்களுக்கு இடையே ஒருமுறையாவது மனைவியுடன் உடலுறவு கொள்வது கடமை. இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இதற்கு அவர்கள் எடுக்கும் ஆதாரம்; திருமறையின் வாசகம். "எனினும், அவர்கள் தூய்மையடைந்துவிட்டால், அவர்களை அல்லாஹ் கட்டளையிட்டுள்ள இடத்திலிருந்து அணுகுங்கள்: என்பதாகும். (நூல்: அல்-முஹல்லா, பக்கம் 1672)
"அவர்களை அணுகுங்கள்" என்ற அல்லாஹ்வின் சொற்களிலிருந்து இப்னு ஹஸம் தமது கருத்தைப் பெற்று, இது கடமையைக் குறிக்கும் ஒரு கட்டளை என்கிறார்கள். ஆனால் அறிஞர்கள் பலர் இதை, மாதவிடாய்க்குப்பின் உடலுறவை அனுமதிக்கும் வாசகமாகாவே கருதுகின்றனர்.
அறிஞர்கள் சிலரின் கருத்துப்படி, ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு மாதங்களில் ஒருமுறையேனும் கட்டாயம் உடலுறவு கொள்ளவேண்டும், இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இவர்கள் தங்களின் நிலைப்பாட்டிற்குப் பின்வரும் சம்பவத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்பு :
இப்னு ஜரீர் அறிவிக்கிறார்; "நான் நம்பும் ஒருவர் இந்தத் தகவலை என்னிடம் கூறினார். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோந்து வரும்பொழுது, ஒரு பெண் இவ்வாறு கூறுவதை (கவிதை பாடுவதை) செவியுற்றார்கள்.

"இரவு நீண்டு செல்கிறதே! இருள் சூழ்ந்துள்ளதே!
(ஆனால்) என்னுடன் நெருங்கியிருக்க தோழன் இல்லையே.
என் உறக்கம் தொலைந்ததே!
தனக்கு இணையில்லாத அல்லாஹ்வின் அச்சம் மட்டும் இல்லையெனில் இந்தப் படுக்கையின் இருபக்கங்கள் அங்குமிங்கும் நகர்ந்திருக்குமே!" (அதாவது இறையச்சம் மட்டும் அப்பெண்மணியை தடுத்திருக்காவிட்டால் அவள் வழிதவறிப்போயிருப்பாள் என்பதைக் கூறுகின்றது கவிதையின் இறுதி வாசகம்).
உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள், "உமக்கு என்ன நேர்ந்தது?"
அதற்கு அவள்: "நீங்கள் தான் என் கணவரை சில மாதங்களுக்குமுன் போருக்கு அனுப்பிவிட்டீர்களே! இங்கே நான் அவருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்" என்றாள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்; "உமக்கு தவறிழைக்கும் எண்ணம் இருக்கிறதா?"
அதற்கு அவள்; "அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்" என்றாள். உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்; "அப்படியென்றால் நீர் உம்மைக் கட்டுப்படுத்திக்கொள். அவருக்கு (கணவருக்கு) வெறும் ஒரு செய்தியை அனுப்பினாலே போதும். விஷயம் தீர்ந்துவிடும்" என்றார்கள்.
பின்னர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை - அப்பெண்ணின் கணவரை (திரும்ப வருமாறு) கட்டளையிட்டு செய்தி அனுப்பினார்கள். அதன்பின் தன் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹாவிடம் சென்று கேட்டார்கள்; "என் விஷயம் சம்பந்தப்பட்ட ஒன்றை நான் உன்னிடம் கேட்க விரும்புகின்றேன். அதற்கு தீர்வு கூறவும். ஒரு பெண் தன் கணவன் இன்றி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும்?"
அவர் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) வெட்கத்தில் தன் தலையைத் தாழ்த்திக்கொண்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ் உண்மையானா விஷயத்தில் வெட்கம் கொள்வதில்லை" என்றார்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆகையால், அவர்கள் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) தன் கையால் சைகை காட்டினார்கள் - மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்கள் என. எனவே, நான்கு மாதங்களுக்கு மேலாக (எவரும்) ராணுவப் பணியில் அமர்த்தப்படக் கூடாது என உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள்.'' (நூல்: தாரீஃக் அல்-குல்ஃபா. பக்கம் 161,162)
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இக்கேள்வியை தம் மனைவியிடம் கேட்காமல், தம் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டுள்ளார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இதற்கான காரணத்தை மவ்லானா அஷ்ரஃப் அலீ தானவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்; "உமர் ரளியல்லாஹு அன்ஹு தம் மகளிடமிருந்து நேரடியான விடையை எதிர்பார்த்தார்கள். தம் மனைவியைப் பொறுத்தவ்ரை, கேட்பது அவருடைய கணவன் என்பதால் மனைவியின் விடை பாரபட்சமாக அமையக்கூடிய வாய்ப்புண்டு என கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு எண்ணினார்கள். (நூல்: அல்-இஃபாதாத் அல்-கவ்மிய்யா 2:300)
எனினும், கணவனுக்காகான உடலுறவு உரிமை போலவே, தன் மனைவியின் பாலுறவுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நிபந்தனை உண்டு,.
அவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் அளவிற்கு உடல் வலிமை பெற்றிருக்க வேண்டும்.
கணவன் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தால்,

அல்லது உடலுறவில் ஈடுபட இயலாத அளவு பலவீனமாக இருந்தால்,
அல்லது தன் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் விளைவாக தாங்கவியலாத பலவீனம் ஏற்படுமானால்,
அவர் தம் மனைவியின் பாலுறவுத் தேவைகளை நிறைவேற்றவேண்டிய அவசியமில்லை. அதனால் பாவியாகவுமாட்டார்.`
அதே சமயம் இன்று...
வெளிநாடு செல்லும் பலரது இல்லத்தரசிகளின் நிலை எவ்வாறுள்ளது என்பதற்கு ஒரு சின்ன சாம்ப்பிள்...

தமிழகத்தின் கீழுள்ள ஒரு கடல்கரையுள்ள ஊரிலிருந்து ஒரு சகோதரி. (இவர் கணவர் துபாயில் பணிபுரிபவர்) அனுப்பியிருந்த கடிதத்தில்....
வெளிநாட்டில் பணி என்கிற மாயக்கவர்ச்சியில் மயங்கி, பெற்றோர் மற்றும் உற்றாரால் கணவன் திணிக்கப்பட பேருக்குத் திருமணம் முடித்துக்கொண்டு வாழும் அவர் தன் ஆற்றமையை கடிதத்தில் வரைந்துள்ளார். "ஏகப்பட்ட பணம் இருக்கிறது; ம்... என்றாலுக்கூட தாங்க ஓடிவரும் உறவினர்கள் இருக்கிறார்கள். பங்களா இருக்கிறது, கார் இருக்கிறது. கல்யாணமாகி ஒரு வாரத்தில் அவர் துபாய் போய்விட்டார். அந்த ஒரு வாரத்தில்கூட விருந்து, உறவுக்காரர்கள் வீட்டுக்கு போவதுமாக நிற்க நேரமில்லாமல் சுற்றிக்கொண்டே இருந்தோம்.
இன்று இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. நான் தனிமையில் தவிக்கின்றேன். எனது கணவர் என்று காட்டினார்களே அந்த நபரின் முகத்தைக்கூட நினைவில் வைத்துக்கொள்வதற்கு அவரின் சில புகைப்படங்கள்தான் உதவுகிறது. என்ன கேலி கூத்து இது? பொம்மை விளையாட்டைவிட மிகக்கேவலமாக இருக்கிறதே என்று அவமானமாக இருக்கிறது. இங்கு எல்லாமே வெறுத்துவிட்டது. பணம் வேண்டாம். அந்தஸ்தும் வேண்டாம். ஆடம்பரம் வேண்டாம். என்னை ஒரு பெண்ணாய் - மனைவியாய் நேசிக்கும் ஆடவனுக்காக நான் ஏங்குகிறேன்" என்று கடிதத்தை முடித்திர்ருக்கிறார் அந்த சகோதரி என்று ஒரு பெண் மருத்துவர் தெரிவிக்கிறார். இதற்கு கணவன்மார்களின் பதில் என்ன?
இதுபோன்ற ஏக்கப்பெருமூச்சுகள் ஒன்றல்ல இரண்டல்ல, தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுக்க இந்த சூடான மூச்சு காற்றில் மிதந்துகொண்டுதான் இருக்கிறது. இது யார் குற்றம்? ஆண்கள் சிந்திக்க வேண்டாமா?







எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு?  ஒரு தம்பதியர் எத்தனை நாளுக்கு ஒருமுறை அல்லது பலமுறை உடலுறவில் ஈடுபடலாம் என்பதைப்பற்றி ஒரு குறிப்பிட்ட அளவையோ வரைமுறையையோ ஷரீஅத் நிர்ணயம் செய்ய்யவில்லை. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் இயல்புணர்ச்சி, உடல்வாகு, பாலுணர்வு ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, தங்களுக்கு மிகப் பொருத்தமான அளவை தம்பதிகளே ஒருவருக்கொருவர் முடிவுசெய்துகொள்ள வேண்டியதுதான்.

எனினும், இஸ்லாம் எல்லாவற்றிர்க்கும் வழிகாட்டும் மார்க்கமல்லவா? வாழ்வின் அனைத்துக்கூறுகளிலும் சமநிலைப்பேண ஊக்குவிக்கிறது. ஏனெனில் நடுநிலைப் பாதையே மிகச்சிறந்த பாதை. இஸ்லாத்தின் அணைத்துப் போதனைகளிலும் சமநிலைப்போக்கு கலந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். அளவுக்கதிகமான உடலுறவும் சரி, உடலுறவை முற்றிலும் துறப்பதும் சரி இரண்டுமே அறிவான செயலல்ல.
அறிஞர்களில் சிலர் வாரம் ஒருமுறை உடலுறவு கொள்வதற்கு பரிந்துரை செய்கின்றனர். இது சமநிலைப்போக்கின் வட்டத்துக்குள் அமைந்திருப்பதாகக் கருதுகின்றனர். இந்த நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் மேற்கொள்ளும் ஆதாரம்:
அவ்ஸ் இப்னு அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஒரு நபிமொழி:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;"எவர் வெள்ளிக்கிழமையன்று (தன் மனைவியை) குளிக்கச் செய்துவிட்டு, தானும் குளித்துவிட்டு, (வெள்ளிக்கிழமை தொழுகை) நேரத்திலேயே புறப்பட்டு, வாகனத்தில் செல்லாமல் நடந்துசென்று, இமாமுக்கு அருகில் உள்ளதொரு இடத்தில் அமர்ந்து, கவமாக அவரை செவியேற்று, வீண் செயலில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறாரோ, அவருக்கு, அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பகரமாக, ஓராண்டு காலம் நோன்பு நோற்று இரவில் தொழுத நன்மை கிடைக்கும்" (ஆதாரம்: அபூதாவூத் 349, நஸாஈ 1381). அபூதாவூதின் சொற்களே இங்கு இடம்பெற்றுள்ளன.
இந்த நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "மன் கஸ்ஸல" எனும் சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். இதன் நேரடி மொழி பெயர்ப்பு, "இன்னொருவரைக் குளிப்பாட்டும் ஒருவர்" அல்லது "இன்னொருவரைக் குளிக்கச் செய்விக்கும் ஒருவர்". இந்த வாசகத்தை இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸுனன் அல்-நஸாஈயிற்கான தம்முடைய விரிவுரையில் இவ்வாறு விளக்குகிறார்கள்; "கஸ்ஸல (மாற்றொருவரைக் குளிப்பாட்டுதல் அல்லது குளிக்கச்செய்வித்தல்) என்பதன் (உட்)பொருள், ஒருவர் (வெள்ளிக்கிழமை) தொழுகைக்குச் செல்லுமுன் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் எனக்கூறப்படுகிறது. ஏனெனில் இது, வழியில் அவருடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்ள உதவும்..." (ஸுனன் அல்-நஸாஈ பி ஷரஹ் அல்-ஸுயூத்தி 3:95)

இதன்படி, இந்த நபிமொழியின் பொருள்களுல் ஒன்று, எவர் வெள்ளிக்கிழமையன்று தம் மனைவியுடன் உடலுறவுக் கொண்டு பின் தானும் குளித்து, தன் மனைவியையும் குளிக்கச்செய்வித்து, கூறப்பெற்றுள்ள பிற செயல்களை நடைமுறைப்படுத்துகின்றாரோ, அவருக்கு, அவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பகரமாக, ஒரு வருட காலம் நோன்பு நோற்று இரவில் தொழுத நன்மை கிடைக்கும்.
அதற்காக வாரம் ஒருநாள் தான் உடலுறவுகொள்ள வேண்டும் என்று இந்த நபிமொழி கூறுவதாக தப்பர்த்தம் கொண்டுவிட வேண்டாம். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குமுன் மனைவியுடன் உடலுறவு கொள்வது சிறந்ததது என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. அதற்கான காரணத்தையும் இமாம் ஸுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி மேலே சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
 உடலுறவுக்கான சிறந்த நேரம் எது?
பொதுவாக, உடலுறவுச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான நேரம் இதுதான் என்று ஷரீஅத் எதையும் வரையறுக்கவில்லை. தம்பதிகள் உடலுறவு கொள்வதற்கு பகலோ, இரவோ; எந்த நேரத்தை வேண்டுமானாலௌம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரவு, பகல் எனப் பல்வேறு நேரங்களில் தம் மனைவிகளுடன் உடலுறவு கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பகமான செய்தியாகும். மேலும், உடலுறவுக்கான தூண்டுதலும், தம்பதியருக்கு போதிய வீரியமும், ஓய்வும் இருந்தாலே உடலுறவுச் செயல்பாடுகள் நடக்கும் என்பதால், உடலுறவுக்கு குறிப்பிட்ட நேரத்தை விதியாகத் திணிப்பது நடைமுறைக்கு ஏற்றதாகாது.

அதே சமயம் அனுபவத்தின் அடிப்படையில் அறிஞர்கள் விரும்பத்தக்க நேரங்கள் என்று சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். இவை இங்கு ஒரு புரிதலுக்காக மட்டுமே தரப்பட்டுள்ளது. கட்டாயமானது என்றோ அல்லது நம்பத்தக்கது என்றோ கருதத்தேவையில்லை.
 விரும்பத்தக்க நேரங்கள் :
உடலுறவுக்கு ஏதுவான நேரம் - ஓய்வாக இருக்கும் வேளை, தம்பதியர் இருவரிடத்திலும் சமமான இயல்புணர்ச்சி நிலவும் வேளை ஓ.கே.! பதற்றம், கவலை அல்லது பசி, தாகம், சோகம், நோய்நொடி போன்றவை இச்சையை குன்றச்செய்துவிடலாம். இதுபோன்ற சமயத்தில் உடலுறவை தவிர்ப்பது நலம்.

சிலருக்கு ஏதுவான நேரம் இரவுதான். அறிஞர்கள் சிலர், இரவின் பிற்பகுதியே உடலுறவுக்கு மிகப் பொருத்தமான நேரம் எனக் கருதுகின்றனர். ஏனெனில், இரவின் முதற்பகுதியில் வயிறு நிறைந்திருக்கும். முழுமையாக உணவு செரிமானம் ஆனபின்பே உடலுறவு கொள்வது மிகப்பொருத்தமாக இடுக்கும். இதுவே அல்லாஹ்வின் தூதருடைய வழக்கமும் கூட! இருப்பினும் மற்ற நேரங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய மனைவிமார்களுடன் உடலுறவு கொண்டுள்ளார்கள்.
அபூ இஸ்ஹாக் அறிவிக்கிறார்கள்; "அல்லாஹ்வின் தூதருடைய (இரவு நேரத்) தொழுகை குறித்து ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் என்ன கூறினார்கள் என அல்-அஸ்வத் இப்னு யஸீதிடம் கேட்டேன். அதற்கவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இவ்வாறு கூறியிருக்கிறார்கள்;
"அவர்கள் (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவின் முதல் பகுதியில் உறங்கி, பிற்பகுதியில் (தொழுகைக்காக) எழுந்திரிப்பார்கள். அப்போது அவர்கள் தம் மனைவியுடன் தம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நாடினால், விருப்பத்தை நிறைவேற்றிவிட்டு உறங்கிவிடுவார்கள். தொழுகைக்கான முதல் அழைப்பு கொடுக்கப்பட்டதும் அவர்கள் குதித்தெழுவார்கள். (அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர்கள் குளித்தார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறவில்லை. எனினும் அவர்கள் கூறியதை நான் விளங்கிக்கொண்டேன்.) (எனினும்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் இருக்கவில்லை எனில், (வெறுமனே) தொழுகைக்கான உளூ- கைகால் கழுவி தூய்மை செய்துகொண்டு, இரு ரக் அத்துகள் (ஃபஜ்ர் தொழுகையின் ஸுன்னா) தொழுதார்கள் (நூல்: முஸ்லிம் 739)
விஞ்ஞான ரீதியாகும் ''விடியற்காலை உடலுறவு'' ஆரோக்கியமானாதே என்பதை மருத்துவ நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். காலை நேர செக்ஸ் நல்ல 'ஐடியா'தான் என்கிறார்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் ஃபிரஷ்ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர 'பாலியல் உணர்ச்சி எழுவது சகஜம்.
எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, பகலாக இருந்தாலும் சரி, மாலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே தம்பதிகளுக்கு சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.
இங்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது. வெள்ளிக்கிழமை உடலூறவைப்பற்றி சிறப்பித்துக்கூறப்பட்டுள்ளதால் வாரம் ஒருமுறை உடலுறவு போதுமானது என்று முடிவு செய்துகொள்ளாதீர்கள். அவ்வாறு எண்ணுவது தவறு. பொதுவாக உடலுறவுக்கான காலமும் சரி, நேரமும் சரி, எத்தனை முறை என்பது பற்றிய குறிப்புகளும் சரி எதையும் ஷரீ அத் பொருட்படுத்தாத நிலையில் அதை வலியுறுத்தி சொல்வது சரியானதாகாது. தெளிவாகச் சொல்லவேண்டுமானால் நேரம், காலம், இடம் இவற்றை உத்தேசித்து தம்பதிகள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ள இஸ்லாம் முழுமையாக அனுமதிக்கிறது.



பரிபூரண தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயம் உண்டு!
 உடலுறவு கொண்ட பின் குளிப்பதற்கும்கூட நன்மை
உடலுறவு கொண்டு "ஜனாபத் குளியல்" குளிப்பதில் கூட நன்மைகளை அள்ளித்தருகிறது இஸ்லாம்.
"ஜனாபத் குளியல் குளிக்கும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் தலைமுடியை நன்றாக கோதிக் கழுவிக் குளிக்கும்போது உடலில் இருந்து தெறித்துவிழும் ஒவ்வொரு துளித் தண்ணீருக்கும் ஒவ்வொரு நூறு நன்மைகள் எழுதப்படாமல் இல்லை. பேலும் அவர்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)

மற்றோர் நபிமொழியில்,
"எவரொருவர் உளூச்செய்து பின்பு (ஜனாபத்) முழுக்கு நீங்கக் குளித்தால் குழைத்த மாவிலிருக்கும் உரோமத்தை எடுப்பது போன்று அவர் பாவங்கள் களையப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)
இந்த இரு நபிமொழிகளைக் காணூம் எவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வதில் வினோதமில்லை. உடலுறவு கொள்வதும் ஒரு வணக்கமே என்பதை முதலிலேயே பார்த்தோம். இப்பொழுதோ உடலுறவுக்குப்பின் தூய்மைப்படுத்திக்கொள்ள குளிக்கும் குளியலுக்குக்கூட இவ்வளவு நன்மை என்று இஸ்லாம் சொல்கிறதே! நினைத்தாலே இனிக்கிறதல்லவா? ஆம்! அதுதான் இஸ்லாத்தின் வசீகரம்.
மனிதா! நீ, தீய வழியில் சென்று உன் இச்சையை தீர்த்துக்கொள்ளாதே! அது உன்னை நரகக்குழியில் தள்ளிவிடும் என்று எச்சரிக்கும் இஸ்லாம், ஆகுமான வழியில் இறைவன் அனுமதித்த வழியில் திருமணம் முடித்துக்கொண்டு மனைவியுடன் உடலுறவு கொண்டு இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது - அதை இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்ட, இறைக்கட்டளைக்கு கண்ணியமளித்த ஒரு செயலாக இறைவன் கருதுவதால் தனது அடியார்களுக்கு கரும்புத் திண்ணக்கூட கூலி கொடுக்கின்றான் என்றே அறியமுடிகிறது. இப்பொழுது எண்ணிப்பாருங்கள் அந்த ஏக இறைவன்; தனது படைப்புகளில் உயர்வான மனித இனத்தின்மீது மீது கொண்டிருக்கும் அன்பும் கருணையும்.
இதன்வாயிலாக இன்னொரு விஷயமும் விளங்குகிறது... உடலுறவை அலட்சியம் செய்கின்றவர்கள் "ஜனாபத்" குளியலால் கிடைக்கும் நூற்றுக்கணக்கான நன்மைகளையும் இழக்கிறார்கள். (இதை படிக்கும் வாசகர்கள், அடேங்கப்பா! இப்படியெல்லாமா இஸ்லாம் சொல்கிறது? இவ்வளவுநாளும் இது பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே, நன்மைகள் சம்பாதிக்க இப்படியொரு வழியிருக்கிறதா...? இனிமேல் இதை மிஸ்ஸ் பண்ண மாட்டோம் என்று முடிவெடுத்தீர்களானல் அதுதான் இந்த கட்டுரை எழுதியதற்கான பலன்!)

அடுத்து இஸ்லாம் அனுமதிக்கும் எந்த செயலை செய்தாலும் நன்மை நிச்சயம் உண்டு எனும் அதே வேளையில் அந்த செயலை முறையாக செய்தால் நன்மைகள் இன்னும் அதிகமுண்டு என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆம்! மனைவியுடன் உடலுறவு கொள்வதும் நன்மையான காரியம் எனும்போது அந்த உடலுறவு இருவருக்குமே நிம்மதியளிக்கும் விதத்தில் அமையும்போது இன்னும் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதில் என்ன சந்தேகம்?! இப்போது ஓரளவுக்காவது உங்களுக்குப் புரிந்திருக்கும். தம்பதிகள் தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ளும்போது தன்னுடைய சுகத்தை மட்டும் பாராமல் தனது இணைக்கும் உடலுறவின்மூலம் முழு திருப்தியை கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்போதுதான் அது இருவருக்கும் முழு நிம்மதியளிக்கக்கூடிய செயலாக அமையும்.
மனங்கள் அமைதிபெரும் பொருட்டே உங்களிலிருந்து உங்கள் மனைவிகளை படைத்திருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறானே அந்த மன நிம்மதி உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமானால் உடலுறவின்மூலம் நீங்கள் சுகத்தை அனுபவிக்கும் அதே சமயம் உங்கள் துணைவிக்கும் முழு சுகத்தைக் கொடுத்து அவளது மனமும் அமைதியடைந்தாலே அது பரிபூரணமான தாம்பத்யம். அப்படிப்பட்ட தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயமாக உண்டு. என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? இதற்கு ஆதாரத்தை உங்கள் எதார்த்தமான வாழ்க்கையிலேயே காணலாம். எப்படி என்கிறீர்களா...?
 உடலுறவில் முழு திருப்தியை பெற்றுக்கொண்ட தம்பதிகளின் நிலை :
உடலுறவில் முழு இன்பத்தையும் திருப்தியையும் பெற்றுக்கொண்ட தம்பதிகளுக்கிடையே சண்டைச் சச்சரவுகள் அதிகமிருக்காது. அவர்களுக்குள் பாசம் பொங்கிவழியும். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேர்ந்தாலும் அவைகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமாளித்துக்கொள்வார்கள். காரணம் உடலுறவின்போது அவர்களுக்குள் இருந்த ஈடுபாடு அதாவது தன்னைப்போல் தன் துணையும் முழுமையான இன்பத்தை அனுபவிக்க வேண்டும் எனும் எண்ணம்... அந்த நல்லெண்ணம் எல்லா நேரத்திலும் அவர்களிடம் தழைத்தோங்கவே செய்யும். இது திருப்தியான, நிம்மதியான உடலுறவினால் விளைந்த நன்மையல்லவா? இது இவ்வுலகில் நம் கண்முன்னே இறைவன் அவர்களுக்களித்த நற்கூலிதானே! வெறுமனே சொன்னால் எப்படி? அந்த உண்மையான தம்பதிகள் தங்களுடைய இணையின் திருப்திக்கும் முக்கியத்துவம் அளித்து நடந்து கொண்டதால் இறைவன் அவர்களுக்கு அளித்த பரிசுதானே வாழ்க்கையின் மற்ற காரியங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் நிம்மதி.

 திருப்தி கிட்டாத தம்பதிகளின் நிலை :
அவ்வாறு இல்லாமல் உடலுறவில் சரியான முறையில் பரிபூரண திருப்தியை கிடைக்கப்பெறாத தம்பதிகளைப் பாருங்கள்... என்ன நடக்கிறது? உடலுறவில் திருப்தி இல்லாத முழுமையான உச்சம் அடையாத எத்தனையோ பெண்கள் நிம்மதியிழந்து.... எல்லா வசதியும் இருந்து மனநோயாளியைப் போல இருப்பார்கள். எதையோ பரிகொடுத்ததுபோல் காட்சியளிப்பார்கள். இல்லற சுகத்தை கணவன் மூலம் முழுமையாக கிடைக்கப்பெறாதவள் தன்னை கணவனுக்காக அலங்கரித்துக்கொள்ள மாட்டாள். எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று சீறிப்பாயும் குணம் கொண்டவளாக இருப்பாள். இதன் பாதிப்பு எதுவரை செல்லும் என்றால், குழந்தைகளை திட்டுவதும், சின்ன சின்ன குற்றத்துக்காக அவர்களை அடிப்பவர்களாகக் காணமுடியும். ''சனியன்களா... இதுகளைப்பெற்றுக்கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்...? என்று கண்ணீர் வடிப்பாள்.

இப்படி உலகெங்கும் பாலியல் திருப்தி இல்லாமல் பலப்பல அநியாயங்கள், கொடுமைகள், தவறுகள் தினந்தோறும் நடப்பதை கண்முன்னால் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

 ஆண்களைக் காட்டிலும் 99 மடங்கு பெண்களுக்கு ஆசையா? :

"ஆண்களைக் காட்டிலும் 99 மடங்கு பெண்களுக்கு ஆசை அதிகப்படுத்தப்பட்டுள்ளது, என்றாலும் அவர்களுக்கு அதில் அல்லாஹ் (ஆசையை அடக்கிக்கொள்ள) அவர்கள்மீது வெட்கத்தைப் போட்டுவிட்டான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ள் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: கன்ஜுல் உம்மால்)
வெட்கம் எனும் போர்வையை பெண்ணின் மீது போர்த்தி அவளின் 99 மடங்கு இச்சையை மறைத்து வைத்துள்ளான் அல்லாஹ்! இது பெண்ணினத்திற்கே இறைவன் வழங்கிய தனிப்பட்ட பாக்கியமாகும். அந்த தனிப்பட்ட பாக்கியத்தை ஒவ்வொரு கணவனும் புரிந்து நடந்துகொண்டால் அவர்களின் இல்லங்கள் ஒவ்வொன்றுமே பூலோக சொர்க்கம்தான் என்பதை அவர்கள் உணர\முடியும், புரிந்துகொள்ள வேண்டும்.

 மனைவியின் ஆசை அடங்கவில்லையென்றால்....
இஸ்லாம் பெண்ணினத்தின் இந்த ஆசைக்கு எந்த அளவு உயர்வான மதிப்பளிக்கிறது என்பதற்கு... ''மனைவியின் ஆசை அடங்கவில்லையென்றால் அவளுக்கு ஆசை அடங்கும்வரை ஊரில் தங்கியிருந்து அவளை முழுமையாக திருப்திபடுத்திவிட்டு அதற்கப்புறமே போருக்குச் செல்ல வேண்டும்'' என்று இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. எனவே மனைவிக்கு செலுத்த வேண்டிய கடமைகளில் ஒன்றான உடலுறவு விஷயத்தில் கணவன்மார்கள் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக, தனது மனைவியிடம் உடலுறவு விஷயத்தில் அலட்சியமும், பொடுபோக்கும், வஞ்சகமும் செய்வது மாபெரும் துரோகமாகும்.
எங்களுக்கு வேலைபளு, டென்ஷன், வெளிநாடு சம்பாத்தியம், அது... இது என்று சாக்கு போக்கு சொல்லி எந்த கணவனும் மனைவிக்கு செய்ய வேண்டிய இந்த மாபெரும் பொறுப்பிலிருந்து அல்லாஹ்விடம் தப்பிக்கவே முடியாது.

 நடைமுறையில் காணப்படும் தவறான தாம்பத்யம் :
ஒரு முஸ்லிம் சகோதரர். கைநிறைய சம்பளம். வசதிக்கு குறைவில்லை. சொந்தவீடு, அழகான மனைவி எல்லாம் அவருக்கு உண்டு. ஆனால், வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் நேராக குளியலறைக்குச் சென்று நன்றாக குளித்துவிட்டு, அத்தர் போட்டுக் கொண்டு ரெடியாக இருப்பார். அந்த நேரத்தில் மனைவி சூடாக சுவையாக உணவுகளைத்தயாரித்து கொண்டு வருவாள். எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு (வயிற்றுக்குள் தான்!) அவர் எழுந்து கை கழுவிவிட்டு வரும்போது மனைவி ரெடியாக படுக்கையறைக்குள் அவருக்காக காத்திருக்க வேண்டும். உண்டுவிட்டு சிறிது நேரம் கூடத்தில் உலாத்திவிட்டு ரூமுக்குள் நுழைந்த வேகத்துக்கு அவசர அவசரமாக உடலுறவு கொண்டு முடித்துவிட்டு, திரும்பப் படுத்து தூங்கிவிடுவார்.

உடலுறவுக்கு சக்தி வேண்டும் என்பதற்காக உணர்ச்சியைத்தூண்டும் உணவுகளை வகை வகையாக சமைக்கச் சொல்லி சாப்பிடுவார். தினந்தோறும் உடலுறவு கொள்வார். ஐந்து நிமிடத்தில் அவரது முழு உடலுறவும் முடிந்துவிடும். இப்படியே பல வருடங்கள் அவர் செய்து கொண்டிருந்தார். தினமும் உடலுறவு வைத்துக் கொள்வது மனைவியை திருப்திப்படுத்தும் என்று தவறாக எண்ணிக்கொண்டு ஒரு இயந்திரத்தனமாய், மனைவியின் மனதைப் புரிந்து கொள்ளாமலேயே இருந்து வந்திருக்கிறார். அவர் தூங்கிய பின் மனைவி குளித்துவிட்டு, சமையல் அறை வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, சீரியல் பார்த்து விட்டு கணவன் அறையை எட்டிப் பார்ப்பாள், அங்கு கணவன் குறட்டை விட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார்.
இதுவா வாழ்க்கை? ஆனால், இன்று பெரும்பாலான குடும்பங்களில் இந்த நிலை அதிகமாக பரவி வருகிறது. இப்படிப்பட்ட இயந்திரத்தனமான உடலுறவை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அதை உடலுறவு என்றுகூட சொல்வதில்லை.

 உடலுறவு விஷயத்தில் முன்னோர்களின் பெரும் அக்கரை :
நமது முன்னோர்கள் உடலுறவு விஷயத்தில் பெரும் அக்கரை எடுத்துக் கொள்வார்கள். தொழுகையில் அக்கறை எடுத்துக்கொள்வது போல அக்கறை எடுத்துக்கொள்வார்கள். (மனைவிக்கு உச்சநிலையை உண்டாக்கி அவளை திருப்திபடுத்தாத உடல் உறவு, உடலுறவே அல்ல என்றும் சொன்னார்கள்.) அவ்வாறு இருந்த காரணத்தால் தான் அதிக குழந்தைகளை அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

பெண் உடலுறவில் திருப்தி அடைய அவள் மனம், உடல், குடும்ப சூழல், இடம் பொருள் போன்ற பல விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். கணவன் தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இன்று பெண்களை தூக்க மாத்திரைகள் போல பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆண்களே அதிகம். தங்களின் தூக்கத்திற்கு தாம்பத்யம் தேவை என்ற கண்ணோட்டத்தில் அவர்கள் மனைவியை அணுகுவதால் அவளது மனம், உடல், சூழ்நிலை சார்ந்த அனைத்து விஷயங்களையும் அவளே கருத்தில்கொள்ள வேண்டியவளாகிவிடுகிறாள். இது அவளது உடல் நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் மிகவும் பாதிக்கச்செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஒரு பெண் தன் கணவனிடம் அதிக அன்பையும், பாதுகாப்பையும், நம்பிக்கையையும் எதிர்பார்க்கிறாள். இவை அவளுக்கு கிடைக்கும்போது அவள் ஐஸ் கட்டியாக கணவனின் பார்வையில் உருகுகிறாள். அப்படிப்பட்ட நிலையில் அவள் தன்னை முழுமையாக, எல்லாவற்றையும் கணவனிடம் ஒப்படைக்கும்போதுதான் அங்கு அர்த்தமுள்ள உடலுறவுக்கு சாத்தியம். ஆம்! உடல் மட்டுமின்றி மனமும் ஒன்றோடொன்று சேரும்போது இரட்டை இன்பம் கிடைக்கும்போது அதன் முடிவு பன்மடங்கு சிறப்பானதாக உயர்வானதாக அமையும்.
இன்று மனிதர்கள் பணத்தின் பின்னாலேயே ஓடுவதால் தாம்பத்யமே பாழாகிப் போய், பெரும்பாலும் தம்பதிகளிடம் தாம்பத்யமே குறைந்து போய்விட்டது என்றுகூட சொல்லலாம். அந்த இடத்தை டி வி யும் சீரியலும் பிடித்துக்கொண்டுவிட்டது தான் காரணம்.
E-mail

 முன்விளையாட்டும் ஓர் சுன்னத்தே!  அலட்சியப்படுத்த வேண்டாம். 
முன் குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் பற்றி சிலருக்கு "இதெல்லாம் எழுத்தில் தேவையா?" எனும் எண்ணம் எழலாம். ஆனால் இவற்றிலுள்ள சில ஆகுமான காரியங்களை உணர்ச்சிமேலீட்டில் செய்துவிட்டு; பாவம் செய்துவிட்டோம், தவறுசெய்துவிட்டோம் என்று தவறுதலாக பலர் கருதக்கூடும். அவ்வாறு கருதுவது ஹலாலை ஹராமென்று எண்ணுவதற்குச் சமமாகும். எனவே சரியான கருத்து எதுவென்பதை எடுத்துச்சொல்ல விழையும்போது அனைத்தையும் சொல்லவேண்டிய அவசியம் கருதியே இங்கு இடம்பெறச்செய்துள்ளோம். அல்லாஹ் போதுமானவன்.

[ ''ஒரு முஸ்லிம் விளையாடும் எல்லா விளையாட்டுக்களும் வீணானவையே - அம்பெய்தல், தன் குதிரைக்குப் பயிற்சியளித்தல் மற்றும் தன் மனைவியுடன் விளையாடுதலைத் தவிர. இவை (யாவும்) போற்றுதலுக்குரிய செயல்கள்.'' (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 1637, சுனன் இப்னு மாஜா 2811, முஸ்னத் அஹ்மத் 17433).]
தம்பதியர்களுக்கிடையே தாம்பத்ய உறவுக்குமுன் முன் விளையாட்டு மிகவும் அவசியம். இதில் உடற்சேற்கைக்குமுன் நிகழும் அனைத்துப் பாலுறவுச் செயல்பாடுகளும் அடங்கும். இதில் தம்பதியர் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் அன்பு, இச்சையான ஆசை வார்த்தைகள் எல்லாம் அடங்கும்.
முன் விளையாட்டில் ஈடுபடுவது மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு மிகத் தேவையானதாகும். முன்விளையாட்டு இல்வாழ்வின் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாகவும் விளங்குகிறது. எனவே எத் தம்பதியரும் முன்விளையாட்டை அலட்சியப்படுத்த வேண்டாம்.

தம்பதியர் இருவருக்கும் முன்விளையாட்டு முக்கியமானது என்றபோதிலும், கணவன் உடலுறவுக்குமுன் தன் மனைவிக்கு கிளர்ச்சியூட்டுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள் பொதுவாக பாலியல் கிளர்ச்சியடைவதற்கு ஆண்களைவிட கூடுதல் நேரம் பிடிக்கும் என்பதால், அவள் தயாராக இல்லாதபோது கணவன் உடலுறவு கொள்வானெனில், அவனுடைய தேவை பெயருக்கு நிறைவடையலாமே தவிர, அவள் நிறைவடைய மாட்டாள். இதன் விளைவாக, மனைவிக்கு அதிருப்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டு மணவாழ்விற்கே குந்தகம் ஏற்படலாம்.

முன்விளையாட்டுக்கள் மூலம் மனைவியை கிளர்ச்சியுறச்செய்து அவளும் ஆயத்தமாகவும், தயார்நிலைக்கு வந்த பிறகுதான் உடலுறவில் ஈடுபட வேண்டும். கணவன் தன் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு, மனைவியை அதிருப்தியிலும் நிறைவின்மையிலும் விட்டுவிடுவது, அவனுடைய தன்னலத்தையும் ஆணவத்தையும் தான் காட்டும். இதுபோன்ற கணவன்மார்கள் உண்மையில் தங்கள் மனைவிமார்களை உண்மையாக நேசிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். தங்கள் இச்சையை தீர்த்துக்கொள்வதிலேயே அக்கறையுள்ளவர்களாய் இருப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முன்விளையாட்டை ஊக்குவித்துள்ளார்கள் என்பதை நபிமொழிகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. ஹளரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்; "நான் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதருடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வினவினார்கள், 'உமக்குத் திருமணமாகிவிட்டதா?' அதற்கு நான் 'ஆம்' என்றேன். '(அவள்) கன்னிப்பெண்ணா ஏற்கனவே மணமானவளா?' எனக் கேட்டார்கள். 'ஏற்கனவே மணமானவள்' என்றேன். "ஏன் கன்னிப்பெண்ணை மண முடித்திருக்கக்கூடாதா? அப்போது நீ அவளுடன் விளையாடலாம், அவள் உன்னுடன் விளையாடலாம், அல்லவா?" எனக் கூறினார்கள். (ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1991)
இமாம் திர்மிதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை செல்லும் ஒரு சுய அறிவிப்புத் தொடர் மூலம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கிறார்கள்;
"ஒரு முஸ்லிம் விளையாடும் எல்ல விளையாட்டுக்களும் வீணானவையே - அம்பெய்தல், தன் குதிரைக்குப் பயிற்சியளித்தல் மற்றும் தன் மனைவியுடன் விளையாடுதலைத் தவிர. இவை (யாவும்) போற்றுதலுக்குரிய செயல்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 1637, சுனன் இப்னு மாஜா 2811, முஸ்னத் அஹ்மத் 17433) இங்கு திர்மிதீயின் சொற்களே இடம்பெற்றுள்ளன.
பல விளையாட்டுக்களை வீணானவை என்று சொல்லும் மார்க்கம் மனைவியுடன் விளையாடுவதை அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல் அதை ஊக்குவிக்கவும் செய்கிறது என்பதை அறியும்போது தாம்பத்ய வாழ்க்கையை செழித்தோங்கச்செய்யும் அத்தனை வாசல்களையும் இஸ்லாம் திறந்து விட்டிருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ!.
புகழ்பெற்ற சட்டமேதை இமாம் இப்னு குதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடும் ஒரு வாசகத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு கூறியதாக அறிவிக்கப்படுகிறது: "நீர் அனுபவிக்கும் ஆசையை அவளும் அனுபவிக்கும் வரை புணர்ச்சியைத் தொடங்காதீர். ஏனெனில், அவளுடைய ஆசை நிறைவேறுமுன் உம்முடைய ஆசை நிறைவேறிவிடக்கூடும்." (ஆதாரம்: அல்-முக்னீ :136)
மேற்கூறிய சில அறிவிப்புகள் தம்பதியருக்கு இடையில் நிகழும் முன்விளையாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்: "புணர்ச்சிக்குமுன் முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)". (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)
முன்விளையாட்டு தொடர்பான பழக்கங்களை, சரியானவையல்ல, மார்க்க ஒழுங்குக்கு முரணானவை என்று சிலர் கருதுவது தவறாகும். அவர்கள், இச்செயலை துறப்பது இறைபக்தி என எண்ணுகின்றனர். ஆனால், இது முழுக்க முழுக்கத் தவறாகும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட இறைபக்தியும், தூய்மையும், இறையச்சமும் கொண்டவர் உண்டோ!. ஆயினும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்விளையாட்டை ஊக்குவித்தது மட்டுமின்றி, தம் மனைவியருடன் அதில் ஈடுபடவும் செய்தார்கள். எனவே இதுபோன்ற செயல்களைத் துறப்பது இறைபக்தியின் அடையாளமல்ல. ஆம், இஸ்லாத்தில் துறவறத்திற்கு வேலையில்லை. இஸ்லாம் ஓர் நடைமுறை மார்க்கம். அது தன்னைப் பின்பற்றுவோர் தங்களின் பாலியல் தேவைகளை நியாயமான முறையில் நிறைவுசெய்துகொள்ள அனுமதிக்கிறது.
முன்விளையாட்டு பல வடிவங்கள் எடுக்கலாம். ஒவ்வொரு தம்பதியரும் வேறுபட்டவர்கள் என்பதால், தங்களுக்கு எவை கிளர்ச்சியூட்டும் விதமாக உள்ளன என்பதை தம்பதியரே கண்டறிந்துகொள்ள விட்டுவிடுவதே சிறந்ததாகும்.

  முத்தத்தைக் கொண்டு முன்விளையாட்டை துவங்குங்கள் : 

முன்விளையாட்டின் துவக்கம் முத்தமாக இருக்கட்டும். ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது முன்விளையாட்டின் மிகவும் அவசியமானதும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியுமாகும்.
ஆயிரமாயிரம் தரம்
எழுதியோ - சொல்லியோ
புரிய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாஷை. .... முத்தம்!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது: "உங்களில் எவரும் மிருகத்தைப் போன்று தன் மனைவியை அணுகக்கூடாது. அவர்களுக்கு இடையில் தூது அனுப்புதல் வேண்டும். "அல்லாஹ்வின் தூதரே! (இங்கே) தூது என்பது யாது?" என வினவப்பட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முத்தமும், இன்சொற்களும் (கொண்ட முன்விளையாட்டு) என பதிலளித்தார்கள்." (ஆதாரம்: இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இத் ஹாஃப் அல்-ஸாதாத் அல்-முத்த்கீன் பிஷரஹ் இஹ்யா உலூம் அல்-தீன் 6:175)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிரார்கள்: "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவிக்கும்) உர்வா கூறுகிறார், "நான் ஆயிஷாவிடம் 'அது நீங்களாகத்தான் இருக்கும்?' என்றேன். அதற்கு அவர்கள் புன்னகைத்தார்கள்:." (ஆதாரம் ஸுனன் திர்மிதீ 86, ஸுனன் அபூதாவூத் 181, சுன்பன் அந் நஸாஈ 170)
இந்த ஹதீஸிலிருந்து, ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது விரும்பத்தக்கது என விளங்குகிறது. மேலும் அது, ஒருவர் தம் வீட்டிற்கு வரும்போதும், வெளியே போகும்போதும் தம் மனைவியை முத்தமிடுவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இது அல்லாஹ்வின் அன்புத் தூதரின் வழிமுறையாகும்.
இங்கே, இல்லறத்தம்பதிகளிடம் நாம் ஒரு வினா எழுப்ப வேண்டிய அவசியமிருக்கிறது. உங்களில் எத்தனைப் பேர் வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது தனது துணைக்கு முத்தமிட்டுச் செல்லும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள்? புதிதாக திருமணமான சில காலங்களுக்கு கணவன் வீட்டைவிட்டு வெளியில் புறப்படும்போது கதவருகில் எவரும் பக்கத்தில் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவசர அவசரமாக முத்தமிட்டு விடைபெறும் இந்த வழக்கம் மிகவும் சுவையானதுதான், இல்லறத்தின் சுவையை இன்னும் கூட்டக்கூடியதுதான். ஆனால் வெளியில் செல்வதற்கு முன்னும், வீட்டிற்கு வந்த பின்னும் தனது துணைக்கு முத்தமிடுவது சுன்னத்தான ஒரு செயல் என்பது நம்மில் எத்தனைப்பேருக்குத் தெரியும்?! இதுவும்கூட நபிவழிதான் என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டுவிட்டீர்களா? அல்ஹம்துலில்லாஹ்.
இந்த IN - OUT முத்தமிடும் சுன்னத்தை தம்பதிகள் ஃபாலோ பண்ணிக்கொண்டு வருவார்களானால் "தலாக்" தலைதெறிக்க ஓடாதா...! நபிவழி எனும்போது நன்மையைப்பற்றிக் கேட்பானேன். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? கரும்புத்திண்ணக்கூட கூலி கொடுக்கின்ற மார்க்கம் தான் இஸ்லாம். இல்வாழ்க்கையை இன்பமயமாக்கும் அத்தனை விஷயங்களுக்கும் இஸ்லாம் இனிதாக வழி காட்டுவதைக் கண்டு பூரித்துப்போகிறீர்களா? ஆம்! இவையனைத்தும் இறைவன் வழங்கியிருக்கும் அனுமதியெனும்போது; தம்பதியர்கள் தங்களுக்குள் இன்பத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கிய அல்லாஹ்வுக்கு அதிகமதிகமாக நன்றிசெலுத்தக் கடமைப்ட்டுள்ளார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். கரும்பு திண்பதற்கும் கூலி அந்த வாய்ப்பை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும்போது அதற்கும் அதிகமதிகமான கூலி... ஸுப்ஹானல்லாஹ். எவ்வளவு அற்புதமான மார்க்கத்தை அந்த ஏக இறைவன் மனித வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறான்! நன்றி செலுத்துவோம் நன்றி செலுத்துவோம், அந்த அருளாளனுக்கு நன்றி செலுத்துவோம்! கரும்பாக இனிக்கும் விஷயங்களைத் தொடர்வோம்....

  முழு அம்மணமாக இருப்பதற்கும் அனுமதியுண்டா? 

துணையின் உடலுறுப்புக்களை தடவி விடுவதும், வருடிவிடுவதும் முன்விளையாட்டின் ஒரு பகுதியே. அதுபோன்று மனைவியின் மார்பை கரங்களாலும் உதடுகளாலும், வாயாலும் விளையாடுவதும் அனுமதிக்கப்பட்டதே. மனைவியை ஒருவரையொருவர் நிர்வாணமாகப் பார்த்துக்கொள்வதுகூட தவறான செயலல்ல. இதுவும்கூட தம்பதிகளின் உணர்ச்சிகளைத்தூண்டும் முன்விளையாட்டின் ஒரு அங்கமாகக்கொள்ளலாம்.
தம்பதியர் இருவரும் முழு அம்மணமாக இருப்பதற்கும் அனுமதியுண்டு என்கின்றனர் சம கால அறிஞர்கள். அறிஞர், ஷெய்கு முஹம்மது கன்ஆன் தம்முடைய நூல், அல்-ம் ஆஷரா அல்-ஸவ்ஜிய்யாவில் எழுதுகிறார்; "இருவரும் உடையணிந்த கோலத்திலேயே கணவன் தன் மணைவியுடன் உடலுறவு கொள்வது சரியல்ல. மாறாக, உடலுறவுக்கு முன் தம்பதியர் இருவரும் - முற்றிலும்கூட அம்மணமாக இருப்பதே சிறந்தது. ஏனெனில், இது அவர்களுக்குச் சிறந்த விஷயம்..." (பக்கம் 64)
ஹனஃபி அறிஞர்களை மேற்கோள்காட்டி அல்-ஃபதாவா அல்-ஹிந்தியாவிலும் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. உடலுறவின்போது தம்பதியர் அம்மணமாக இருப்பதற்கு அனுமதியுண்டு. ஒரே நிபந்தனை, அவர்கள் அறைக்குள் இருக்க வேண்டும். (வேறு எவரும் அவர்களைப் பார்க்கும்படி இருக்கக்கூடாது) (அல்ஃபதாவா அல்-ஹிந்தியா 5:328)
வேறு சில அறிஞர்கள் ''தம்பதியர் தங்களைப் போர்வையால் மறைக்காமலே முழு அம்மணமாக இருப்பது சற்று விரும்பத்தகாதது என்ற போதிலும், அது அனுமதிக்கப்பட்டதே என்று கருத்து கொண்டுள்ளனர். எனினும் அவர்கள், தங்களை ஒரு போர்வையால் மூடிக்கொண்டால் அவர்கள் எல்லா ஆடைகளையும் சுழற்றிவிட்டாலும் அதில் எவ்விதத்தவறும் இல்லை'' என்கின்றனர். ஆனால் இது நடைமுறையில் (கணவன் மனைவி உடலுறவு கொள்ளும் அந்தரங்க வேளையில் போர்வையை போர்த்திக்கோன்டு செயல்படுவதெல்லாம்) சாத்தியமா என்பதை அவர்கள் கருத்தில் கொண்டார்களா என்று தெரியவில்லை.

  மறைவான பகுதிகளைப்பாத்தல் : 

தம்பதியர் ஒருவர் மற்றவரின் பாலுறுப்பைப் பார்க்கும் விஷயத்திலும், பெரும்பாலும் எல்லா சிந்தனாவழிகளும் அனுமதி அளிக்கின்றன.
திருமண இணைவு மூலம் கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் உடலின் பாலுறுப்புக்கள் உட்பட எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பார்ப்பதற்கு ஷரீஆ அனுமதிக்கிறது.

பஹ்ல் இப்னு ஹகீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் பாட்டனாரிடமிருந்து (முஆவியா இப்னு ஹய்தா) தம் தந்தை தம்மிடம் அறிவித்ததாகக் கூறுகிறார். நான் (முஆவியா) கேட்டேன், "அல்லாஹ்வின் தூதரே! எங்களின் மறைவு பாகங்களில் எவற்றை வெளிக்காட்டலாம், எவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?" இதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்கள் மறைவு பாகங்களை (அவ்ரா) காத்துக்கொள்ளுங்கள். உங்களின் மனைவி அல்லது அடிமைப் பெண்களைத் தவிர... " என்று கூறினார்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 2769, ஸுனன் இப்னு மாஜா 1920)
இமாம் அப்துர் ரஸ்ஸாக் அல்ஸன ஆனி ரஹ்மதுல்லாஹி அலைஹி தம் அல்-முஃஜம் அல்-கபீரிலும், ஸஅத் இப்னு மஸ் ஊத் அல்-கிந்தி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஹதீஸைப்பதிவு செய்துள்ளார்கள்.
உஸ்மான் இப்னு மஃஸூன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி என் மறைவு பாகங்களைப் பார்ப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஏன் அப்படியிருக்க(வெட்கப்பட) வேண்டும்? அல்லாஹ்தான் உங்களை அவர்களுக்கு ஆடையாகவும், அவர்களை உங்களுக்கு ஆடையாகவும் ஆக்கியுள்ளானே!..." (நூல்: அல்-முஸன்னஃப் 6:85, அல்-ம்ஃஜம் அல்-கபீர் 9:37)
ஹனஃபி சிந்தனாவழியைச்சார்ந்த இமாம் புர்ஹானுத்தீன் அவர்கள் அல்-மர்கினானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தம்முடைய நூலான அல்-ஹிதாயாவில் இவ்வாறு கூறுகிறார்கள்:
''ஒருவர் தம் மனைவியின் மறைவுப் பாகங்களைப் பார்க்கலாம். ஏனெனில், அவர் அவளுடைய முழு உடலையும் இச்சையுடனோ, இச்சையின்றியோ பார்ப்பதற்கு அனுமதியுண்டு.'' இந்தச் சட்டத்திற்கு ஆதாரமாக அவர் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகிறார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: "உங்கள் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளுங்கள், உங்கள் அடிமைப்பெண் அல்லது மனைவியைத் தவிர". மேலும் மனைவியின் மறைவுப்பாகங்களைத் தொடுதல், உடலுறவு கொள்ளுதல் இரண்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க, வெறுமனே அதைப் பார்ப்பதற்கு இன்னும் கூடுதல் அனுமதியுண்டு எனும் அடிப்படையையும் அவர் முன்வைக்கிறார்கள். (நூல்: அல்-ஹிதாயா 4:461)
அல்-ஃபதாவா அல் ஹிந்திய்யாவில் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு கூறுவதுண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. "உடலுறவின் போது கணவன் தன் மனைவியின் பாலுறுப்பை பார்ப்பது சிறந்தது. ஏனெனில், அதனால் முழு இன்பமும் நிறைவும் கிடைக்கும்.". (நூல்: அல்-ஃபதாவா அல் ஹிந்திய்யா 5:328)
அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ‘அதா’வு என்பவர் இதுபற்றி நேரடியாக கேட்டபோது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக உணர்த்தினார்கள் என்ற ஹதீஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை மேற்கொள் காட்டி ஹாபிழ் இப்னு ஹஜர் இஸ்கலானி இமாம் அவர்கள் "ஆண் தன் மனைவியின் மர்மஸ்தலங்களையும் பெண் தன் கணவனின் மர்மஸ்தலங்களையும் பார்க்கலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும் என்று குறிப்பிடுகிறார்கள். (பத்ஹுல் பாரி, பாகம்-1, பக்கம்-290)
"மறைவுப் பாகங்களைப் பார்ப்பதால் கண்கள் குருடாகிவிடும்" எனும் ஹதீஸ் பலவீனமானது அல்லது புணையப்பட்டது ஆகும் என இமாம் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் இப்னு அல்-ஜவ்ஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்ற ஹதீஸ் அறிஞர்கள் கருதியுள்ளனர். (ஆதாரம்: முக்னி அல்-முஹ்தாஜ் 3181)
முன்விளையாட்டின் ஒருபகுதியாக, முழுமையான உடலுடன் உடல் சேர்தலுக்கும் அனுமதியுண்டு. அதாவது, ஒருவர் தம் துணைவரின் உடலைத் தம் உடலோடு முழுமையாக இணைக்கலாம். இதில் கட்டியணைத்தல், மோகமாகப்பிடித்து நீவுதல், கொஞ்சுதல், ஒருவர் மீது ஒருவர் புரளுதல், துணைவரின் உடலோடு தன் உடலைத் தேய்த்தல், முற்றிலும் துணைவர் மீது ஏறிப்படுப்பது ஆகிய எல்லாம் அடங்கும். இவற்றை ஆடையுடனோ, ஆடையின்றியோ செய்வதற்கு அனுமதியுண்டு.
திருமணம் மூலம் ஒன்றுசேர்வதன் வாயிலாக தம்பதியர் ஒருவருக்கொருவர் இன்பம் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு எனும் கோட்பாட்டின்படி தம்பதியர் இருவரும் தங்கள் பாலுறுப்புகளை ஒருவர் மற்றவரின் உடல் மீது தேய்த்து பரவசநிலை அடைந்துகொள்ளவும் அனுமதியுண்டு. எனினும் அதற்கான தேவை இல்லாதிருப்பின், அதைத் தவிர்ப்பது மேன்மையானது.
அடுத்து கணவனும் மனைவியும் நெறுக்கம் பெருவதற்காகவும் முன்விளையாட்டுக்காகவும் ஒன்றுசேர்ந்து குளிப்பதும், நீராடுவதும் அனுமதிக்கப்பட்டதே. ஒன்றுசேர்ந்து நீராடுவதை அனுமதிக்கிறது எனும்பொழுது இதுபற்றிய மற்ற விஷயங்களை இன்னும் விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே கொள்ளலாம்.
  பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் 
கேள்வி - 01 :  
 என் வயது 29. சமீப காலமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அடுத்த சில நாட்களில் எனக்கு பயங்கரமான நீர்கடுப்பு உண்டாகிறது. எதனால் இப்படி? சிகிச்சை உண்டா?
பதில் :  மண்பானை செய்கிறவர்களிடம் சுத்தமான களிமன் வாங்கி அதைத் தேங்காய் ஓட்டில் போட்டு சுடுநீரில் குழைத்து இரவு படுக்கும் முன்பாக தொப்புளைச் சுற்றித் தடவிக்கொண்டு, காலையில் குளித்துவிடவும். இதை வாரம் மூன்று நாள் செய்யலாம்.
கேள்வி - 02 :  
 எனக்கு வயது 26. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. கணவருக்கு தாம்பத்ய உறவில் நாட்டமில்லை. கணவர் வீட்டார் எல்லோரும் என்னிடம் குறையிருப்பதாகச் சொல்லிக்கொண்டு, இன்னும் ஆறு மாதங்களில் கரு தங்கவில்லையென்றால், கணவருக்கு மறுமணம் செய்துவிடுவோம் என்கிறார்கள். கணவரோ மாதத்தில் ஒரு நாள் சேர்ந்தாலே கருத்தரிக்கும் என்கிறார். அது சாத்தியமா? படுக்கைக்கு வந்ததும் தூங்கிவிடுகிறார். என் கணவர் சொல்வதுபோல் மாதத்தில் ஒருநாள் உறவு கொண்டாலே குழந்தை பிறக்குமா? எத்தனை நாட்கள் உறவு கொள்ள வேண்டும்? என்ன செய்வது?
பதில் : ஒருமுறை உறவு கொண்டாலே குழந்தை பிறக்கும் என்பதற்கு உங்கள் வாழ்க்கை ஒன்றும் சினிமா இல்லை. கணவருடைய தவறான அபிப்ராயத்தை மாற்ற வேண்டும். கணவர் உங்களிடமிருந்து ஒதுங்கியிருக்க என்ன காரணம் என பாருங்கள். பேசுங்கள். மனரீதியாக அவருக்கு ஏதேனும் கோளாரா அல்லது வேறு பிரச்சனைகளா என முதலில் கண்டுபிடியுங்கள்.

அவரது அம்மா உங்களிடம் நல்ல முறையில் பழகும்பட்சத்தில் அவரது உதவியை நீங்கள் நாடலாம். மாமியாரிடம் உண்மையைச் சொல்லி விசாரிக்கச் சொல்லலாம். கணவரின் தயக்கத்துக்கு என்ன காரணம் என்பதை அவருக்கு நெருங்கிய நபர்களின் மூலமாக முதலில் கண்டுபிடித்துப் பேசச்சொல்ல வேண்டும். மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ அவருக்கு பிரச்சனைகள் இருப்பது தெரிந்தால், அதற்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
உங்களுக்கு மாதவிடாய் சரியாக இருந்தால், மாதவிடாய் ஆன முதல் நாளிலிருந்து கணக்கிட்டால் பதினான்காம் நாள் கருமுட்டை வெளியாகும். அதற்கு முன்பாக மூன்று நாட்களிலிருந்து தொடர்ந்து ஒருவாரத்திற்கு உடலுறவு வைத்துக்கொண்டால் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம். நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள். தைரியமாக இருங்கள்.
கேள்வி - 03 :   
என் வயது 64. கணவருக்கு 67. நானும் அவரும் வாரம் ஒருமுறை உடலுறவு கொள்கிறோம். இப்போதும் நானும் அவரும் உறவில் உச்சத்தை அடைகிறோம். இதனால் எங்கள் இருவருக்கும் உடல்ரீதியாக ஏதேனும் பாதிப்பு வருமா? எத்தனை வயதுவரை உடலுறவு வைத்துக்கொள்ளலாம்?
பதில் : 60 வயதைக் கடந்தும் ஆரோக்கியமான தாம்பத்ய உறவு உங்களுக்குள் இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குறிய விஷயம். பொதுவாக பெண்கள் மெனோபாஸ் கட்டத்தை அடைந்ததுமே அவர்களுக்கு ஆர்வம் குறையும். பிறப்புறுப்பு வரட்சி அதிகரிக்கும். உறவில் எரிச்சல் இருக்கும். ஆணுக்கும் பெரும்பாலும் முழுமையான உறவு சாத்தியப்படாது. ஆனால், உங்கள் விஷயத்தில் அப்படியில்லாமல் ஆரோக்கியமாகவே இருப்பதாகத் தெரிகிறது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

செக்ஸ் வைத்துக்கொள்ள வயது வரம்பெல்லாம் கிடையாது. மனசும் உடம்பும் இடம் கொடுக்கும்வரை எத்தனை வயதிலும் உடலுறவு கொள்ளலாம். அதனால் பாதிப்பு வராது.
கேள்வி - 04 :  
 எனக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. உறவில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அதற்கு என் பிறப்புறுப்பு முழுமையாக அனுமதிக்காத மாதிரி உண்ர்கிறேன். முழுமையான உறவு எனக்கு சாத்தியமா? கர்ப்பம் தரிக்குமா?

பதில்: உங்களுடைய பிரச்சனைக்கு 'Vaginismus' என்று பெயர். அதாவது இந்தப் பிரச்சனையில் உறவின்போது பிறப்புறுப்பில் மூன்றில் ஒருபாகம் உறவுக்கு ஒத்துழைக்காது. அதனால் உறவு முழுமையடையாத மாதிரி தோன்றும். இது முழுவதும் குணப்படுத்தக் கூடியதே..
உறவின்போது தேவையற்ற பயம், டென்ஷன், மன இறுக்கம் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். மனதுக்குப் பிடித்த சூழலில் அமைதியாக உறவு கொள்ளுங்கள். உறவு முழுமையடையுமா. கணவரைத் திருப்தி படுத்த முடியுமா என்கிற மாதிரியான கவலைகள் எதுவும் வேண்டாம். இதையெல்லாம் செய்தும், உங்கள் பிரச்சனை சரியாகவில்லையென்றால் மகப்பேறு மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனைப் பெறுங்கள்.
கேள்வி - 05 :   
என் வயது 30. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை. தாமதமாக திருமணம் ஆனதால் குழந்தை இல்லையா? கணவருக்கு குடிப்பழக்கமும் இருக்கிறது. அது காரணமாக இருக்குமா?
பதில் : குழந்தையின்மைக்கான காரணங்களை நீங்களே சொல்லிவிட்டீர்களே. கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்தச் சொல்லுங்கள். குடிப்பழக்கம் உள்ள ஆண்களுக்கு உறவில் உறவில் ஆர்வம் இருப்பதுபோல் வெளியில் தெரிந்தாலும் முழுமையாக ஈடுபடமுடியாமல் போகும். உறவின் தன்மையை அது நிச்சயம் பாதிக்கும்.

அடுத்து வயதும் ஒரு காரணம். இதுவே குழந்தை பெற்றுக்கொள்வதற்கான தாமதமான வயது. இனியும் காத்திருப்பது நல்லதல்ல.

கேள்வி - 06 :  
நான் ஒரு கல்லூரி மாணவி. வயது 22. நான் பூப்பெய்தி ஆறு வருடங்கள் ஆகிரது. எனக்குப் பிறப்புறுப்பு பகுதியில் ரோம வளர்ச்சியே இல்லை. இதைப்பற்றி பிறரிடம் கேட்கவும் கூச்சமாக இருக்கிறது. இதனால் பிற்காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வருமா?
பதில் : பிறப்புறுப்பு என்பது மிக மெல்லிய செல்களால் ஆனது. எனவே அங்கே அடிபடாமலிருப்பதற்காகப் பாதுகாப்புக் கவசமே ரோம வளர்ச்சி. பிறப்புறுப்பு என்றில்லை. உடலின் வேறு சில பகுதிகளில் ரோம வளர்ச்சி காணப்படுவதும் இதற்காகவே. நீங்கள் வயதுக்கு வராமலிருந்து, முடி வளர்ச்சியும் இல்லை என்றால்தான் கவலைப்பட வேண்டும். வயதுக்கு வந்துவிட்டதால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஒருசிலருக்கு திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும்கூட ரோம வளர்ச்சி வரலாம். எனவே இதற்கும் உங்கள் எதிர்கால தாம்பத்ய வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. எல்லா பெண்களைப்போல நீங்களும் திருமணத்திற்குத் தயாராகலாம்.
கேள்வி - 07 :  
 என் வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. பிறந்தது முதல் நான் ஒரு கிட்னியுடந்தான் வாழ்கிறேன். அதனால், மாதவிலக்குப் பிரச்சனைகள், கை, கால் வீக்கம், வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகின்றன. ஒரு கிட்னியுடன் உள்ள நான் கல்யாணம் பண்ணலாமா? உடலுறவிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்குமா? பிறக்கப்போகும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் தான் பிறக்குமா?
பதில் : நீங்கள் திருமணம் செய்யக்கூடாது என்றில்லை. உங்களை ஏற்றுக்கொள்ளும் நல்ல கணவர் கிடைத்தால் தாராளமாக செய்துகொள்ளலாம். ஒரு கிட்னியுடன் இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற பிரச்சனைகளுக்குச் சரியான சிகிச்சைகளின் மூலம் தீர்வு காணலாம்.

ஒரு கிட்னியுடன் இருப்பதால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்காது. ஆனால், உங்களுக்குப் பிறக்கும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க 50 சதவீதம் வாய்ப்புகள் உண்டு.
கேள்வி - 08 :   
என் வயது 18. பூப்பெய்தி நான்கு வருடங்கள் ஆகின்றன. என் மார்பகங்களின் காம்புகள் உள்ளே இழுத்தபடி உள்ளன. நாளுக்கு நாள் மார்பகங்கள் சிறுத்துக்கொண்டே போகின்றன. என்ன தீர்வு?
பதில் : இதற்கு ''இன்வர்ட்டட் நிப்பிள்ஸ்'' எனச் சொல்வார்கள். அப்படியிருப்பின் நீங்கள் திருமணமாகி, கர்ப்பம் தரிக்கும்போது மார்பகங்கள் பெரிதாகிற சமயத்தில் இந்தப் பிரச்சனை தானாக சரியாகிவிடும்.

மற்றபடி மார்பகங்களில் ஏதேனும் வீக்கம் இருக்கின்றனவா என தெரிய வேண்டும். நல்ல மகப்பேறு மருத்துவரை நேரில் கலந்தாலோசிக்கலாம். வலி இருந்தாலும் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். பிரசவத்துக்குப் பிறகு குழந்தை தாய்ப்பால் குடிக்கிறபோது இவை சரியாகும். கவலைப்பட வேண்டாம்.
கேள்வி - 09 :   
நான் ஒரு டீன்-ஏஜ் பெண். எனக்குப் பின்பக்கம் மிகவும் பெருத்துக் காணப்படுகிறது. தோழிகள் கிண்டல் செய்கிறார்கள். இத்தனைக்கும் நான் ஒருவேளைதான் சாப்பிடுகிறேன். பின்பக்கம் குறைவதாக இல்லை. செக்ஸ் அனுபவம் இருப்பவர்களூக்கும், செக்ஸில் ஆர்வம் அதிகமிருப்பவர்களுக்கும் தான் இப்படி இருக்கும் என்று கேலி செய்கிறார்கள். குறைக்க வழியே கிடையாதா?
பதில் : உங்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு உடற்பயிற்சிதான். சாப்பாட்டைத் தவிர்ப்பதால் எந்தப் பலனும் இல்லை. இடுப்பு, தொடைகள், கால்கள் போன்றவற்றுக்கான பயிற்சிகளைச் செய்தால் குணம் தெரியும். இதுவும் ஒரேநாளில் பலன் தராது. தன்னம்பிக்கையுடன் விடாமல் செய்தால் பலன் நிச்சயம்.

உங்கள் தோழில்கள் கிண்டல் செய்கிற மாதிரி பின்பக்க சதை பெருத்திருக்கவும், செக்ஸ் உணர்ச்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செக்ஸ் அனுபவம் உள்ளவர்களுக்குப் பின் பக்கம் பெருத்திருக்கும் என்பது வேண்டுமென்றே உங்களை வெறுப்பேற்ற அவர்கள் சொல்கிற விஷயங்கள். எதையும் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள்
கேள்வி - 10 :   
என் வயது 26. எனக்கு எப்போதும் மாதவிலக்கு எட்டு, ஒன்பது நாட்களுக்கு இருக்கிறது. இந்நிலையில் நான் உறவு கொண்டால் கருத்தரிக்குமா?
பதில் : மாதவிலக்கு என்பது இப்படி எட்டு, ஒன்பது நாட்களுக்கெல்லாம் வரக்கூடாது. இது ரத்தசோகையில் கொண்டுவிடும். முதலில் உங்களுக்கு ஏன் இத்தனை நாட்கள் உதிரப்போக்கு இருக்கிறது என்பதற்கு ரத்தப்பரிசோதனை செய்து பாருங்கள். பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்ட, அவர்கள் சத்துள்ள ஆகாரம் உண்ன வேண்டியது அவசியம். தினம் இரண்டு மூன்று பழங்கள் சாப்பிடவும். ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு போன்றவை நல்லது. பேரிச்சம்பழம் சாப்பிடலாம். இரண்டுவகைக் காய்களை தினம் ஒரு கப் சாப்பிட வேண்டும். இவை மாதவிலக்கின்போது உடல் இழக்கும் இரும்புச்சத்தை ஈடுகட்டும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். மருத்துவரை சந்தித்து, இப்படி நாள்கணக்கில் தொடரும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த சிகிச்சைகள் மேற்கொள்ளவும். கவனிக்காமல் விட்டால் விரைவில் நோயாளி மாதிரி ஆகிவிடுவீர்கள்.
முதலில் இப்பிரச்சனையைச் சரி செய்துகொண்டு பிறகு உறவைப்பற்றி யோசிக்கலாம். பொதுவாகவே மாதவிலக்கு நாட்களில் தொற்றுக்கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது. முதலில் உங்களைச் சரிசெய்துகொண்டு மற்றவைகளைப் பாருங்கள்.

கேள்வி - 11 :  
 என் வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல் ரோம வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மஞ்சள் உபயோகித்தும் பலன் இல்லை. வேறு என்னதான் தீர்வு இருக்கிறது இதற்கு?
பதில் : உங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஹார்மோன் கோளாறுகள் இருந்தாலும் இப்படி ரோம வளர்ச்சி இருக்கும்.

ஒரு வெற்றிலை, ஐந்து மிளகு, மூன்று பற்கள் பூண்டு சேர்த்து வாரம் ஒருமுறை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். இது உங்கள் மாதவிலக்கு சுழற்சியை சரியாக்கும். ரோம வளர்ச்சியையும் குறைக்கும். சிலருக்குத் திருமணத்துக்கு முன்புவரை இருக்கிற ரோம வளர்ச்சி, திருமணத்துக்குப் பிறகு உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாறுதல்களால் குறையும். உங்களுக்கும் அப்படி நடக்கலாம்.
பயத்தம்பருப்பு மற்றும் கஸ்தூரிமஞ்சளை அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் காயவிட்டு கழுவவும். வாரம் மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். மீதி நாட்களில் தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து திரெட்டிங் செய்து கொள்ளவும். இவையெல்லாம் ரோம வளர்ச்சியைப் படிப்படியாகக் கட்டுப்படுத்தும். கவலை வேண்டாம்.
கேள்வி - 12 :   
எனக்கு குழந்தை பிறந்த பிறகு சிறிநீரை அடக்க முடியாத நிலை உண்டாகிவிட்டது. சிரித்தால், தும்மினால், இருமினால்கூட சிறுநீர் கசிகிறது. இதற்கு என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?
பதில் : நிறைய  பெண்களுக்கு இப்பிரச்சனை இருக்கிறது. பிரதான காரணம் ரத்த சோகை. உலக அளவில் இந்தியப் பெண்கள்தான் ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சிக்குறிப்பு ஒன்று.

வெளிவேலை, வீட்டுப்பொறுப்பு என இரட்டைச்சுமை சுமக்கிற பெண்கள் பெரும்பாலும் அதற்கேற்ற சரிவிகித உணவை உட்கொள்வதில்லை. மீந்துபோன உணவு, முதல்நாள் சமைத்ததை சாப்பிடுவது என உடம்பைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். ரத்தசோகையைக் குணப்படுத்திக்கொண்டாலே இப்பிரச்சனை சரியாகும்.
''ஈஸ்னோஃபிலியா'' இருந்தாலும் இப்படி இருக்கலாம். அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை தவிர சிறுநீரத்தசை நார்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி இருக்கலாம். எனவே உங்களுக்கு எதனால் இப்படி இருக்கிறது என்பதை மருத்துவரை நேரில் சந்தித்து சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது.
கேள்வி - 13 :   
எனக்குப் பிரசவமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன. ஒரு மாதத்துக்கு முன்புதான் காப்பர்-டி போட்டுக்கொண்டேன். தாய்ப்பால் சுரப்பே இல்லை. நானும் மிகவும் மெலிந்து காணப்படுகிறேன். தாய்ப்பால் சுரக்காததற்கு இது ஒரு காரணமா?
பதில் : உடல் மெலிவுக்கும், காப்பர்-டி போட்டதற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் நீங்கள் நினைக்கின்ற மாதிரி எந்தத் தொடர்பும் இல்லை. தாய்ப்பால் சுரக்கவில்லையே என கொடுப்பதை நிறுத்தாதீர்கள். குழந்தை வாய் வைத்து உறிஞ்ச உறிஞ்சத்தான் பால்சுரப்பு அதிகரிக்கும்.

சத்தான உணவுகளை நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள். பசலைக்கீரை, பால், பூண்டு என நிறைய சாப்பிடுங்கள்.
கேள்வி - 14 :  
எனக்கு குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. தாய்ப்பால் சுரப்பு இல்லை. நான் மிகவும் ஒல்லியாக இருக்கின்றேன். மார்புகள் சிறுத்தும் உள்ளன. தாய்ப்பால் சுரப்பு குறைவுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்புண்டா?
பதில் : உடல்வாகுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒல்லியான உடல்வாகோ, சிறுத்த மார்பகங்களோ தாய்ப்பால் சுரப்பைக் குறைக்காது. தாய்ப்பால் இல்லை என்ற காரணத்தால் குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்தாதீர்கள். குழந்தை வாய் வைத்து சப்பி, உறிஞ்சிக் குடித்தால், சுரப்பு அதிகரிக்கும். நீங்கள் உணவில் கால்சியம், இரும்பும் அதிகமுள்ளவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை, பசலைக்கீரை, பூண்டு போன்றவை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
கேள்வி - 15 :  
 என் வயது 50. மாதவிலக்கு நின்று ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் உறவு கொண்டால் கர்ப்பம் தங்க வாய்ப்புண்டா?
பதில் : மாதவிலக்கு நின்றுவிட்ட (மெனோபாஸ்) அடைந்த நீங்கள் கருத்தரிக்க வாய்ப்பில்லை.
                                                                               பதில்கள்: டாக்டர் பேகம் ரஸியா
கேள்வி - 16.   
மாதவிலக்கு காலத்திற்கு பின் முட்டை வெளிப்படுகிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
பதில் :  மார்பகங்கள் கனமாக இருக்கும். அடி வயிறு வலிக்கும். லேசான ரத்தக்கசிவு ஏற்படும். உடலின் வெப்ப நிலையை அதிகாலையில் அளக்கும் பரிசோதனையை மேற் கொள்ளும்போது, கருவணு விடுபடும் வாய்ப்பு இருந்தால் வெப்பம் குறைந்து மறுநாளே கூடும்.
இவை போன்ற அறிகுறிகள் இருந்தால் கருவணு விடுபடுகிறது என யூகிக்கலாம். கருப்பை திசு சுரண்டல் பரிசோதனை போன்ற ஆய்வுகள் மூலமும் கண்டறியலாம்.
கேள்வி - 17.   
என் வயது 26. மிகவும் ஒல்லியாக இருப்பதால் திருமணம் தள்ளிப் போகிறது. உடல் இளைக்க மாத்திரைகள் இருப்பதைப்போல், குண்டாக்க ஏதேனும் சிகிச்சைகள் இருந்தால் சொல்லுங்களேன்.
பதில் :  குண்டான உடலைக் குறைப்பதுதான் இப்போது பலபெண்களுக்கும் பிரச்சினையே. குண்டாக விரும்புவோர் உணவின் மூலமே அதை சாத்தியப்படுத்தலாம். அரைக்கிலோ உடைத்த கடலை, கால் கிலோ சர்க்கரை இரண்டையும்பொடி செய்து, அதில் கால் கிலோ நெய் சேர்த்து சின்னச் சின்ன லட்டுகளாகப் பிடித்து தினம் ஆறு அல்லது ஏழு சாப்பிடவும்.
அமுக்கராக் கிழங்குசூரணம் ஒரு சிட்டிகையை நெய்யில் குழைத்து தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும். ச்யவன பிராஷ் லேகியம் தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும். தினம் சிறிது தேங்காயைப் பச்சையாக சாப்பிடவும். உணவிலும் தேங்காய் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். தினம் இரு வேளை ஐந்து பாதாம், ஒருமுட்டை சாப்பிடவும்.
தினம் நான்கு டம்ளர் பால் குடிக்கலாம். வாரம் ஒரு முறை ஆட்டிறைச்சி சேர்த்துக் கொள்ளவும். மேற்சொன்ன உணவுகள் செரிக்க தினம் ஒரு கீழா நெல்லி மாத்திரை சாப்பிடவும். காபி, டீயைக்குறைக்கவும். ராத்திரியில் கைப்பிடியளவு கொண்டைக்கடலையை மண் சட்டியில் ஊற வைத்து காலை யில் சாப்பிடலாம். இவற்றையெல்லாம் செய்து பாருங்கள், மூன்றே மாதங்களில் வியப்பான மாற்றம் காண்பீர்கள்.
கேள்வி - 18.   
நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்பம் உறுதியான நாள் முதல் ஆளாளுக்கு ஒரு ஆலோசனை சொல்லி பயமுறுத்துகிறார்கள். ரொம்பவும் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அபார்ஷன் ஆகிவிடும் என்கிறார்கள். அபார்ஷன் எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்?
பதில் :  அபார்ஷன் எனப்படுகிற கருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்கள் குறைந்திருந்து நீங்கள் கருத்தரித்திருந்தால்.- முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதல், நீண்டதூரப் பயணம் மேற்கொள்தல், அளவுக்கதிக டென்ஷன் போன்றவற்றால்.- காரமான உணவுகளை அதிகம் உண்பதால். கோழி, பப்பாளி, அன்னாசி, பலாபோன்றவற்றை முதல் 90 நாட்களுக்குத் தவிர்க்கவேண்டும்.
உணவில் காரத்தையும், புளிப்பையும் குறைத்து செயற்கை மணம்மற்றும் நிறத்தைத் தவிர்த்து உண்ணவும். இயற்கையான பழம், காய்கறிகள், ஜூஸ்சாப்பிடவும். தினம் 3 முதல் 4 டம்ளர்பால் கட்டாயம் குடிக்கவும். கர்ப்பத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லை என்ற பட்சத்தில் அடிக்கடி ஸ்கேன் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். 14-வது வாரம் ஸ்கேன் செய்தால் போதும். இப்படியெல்லாம் இருந்தாலே உங்களுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்கும். கவலைவேண்டாம்.
கேள்வி - 19.   
முதல் கருவை கலைத்துவிட்டால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையா?
பதில் :  முதல் கருவை கலைத்தால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையல்ல. கரு உண்டாவதைத் தடுக்க, மாதவிலக்கு சுழற்சியின் நடுவில் உள்ள 10 நாட்கள் பாதுகாப்பானவை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் பலருக்கு மாதவிலக்கு சுழற்சி சீராக இருப்பது இல்லை. எனவே கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது நல்லது.
கேள்வி - 20.
  எனக்குப் பதினேழு வயதில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்தநான்கு வருட காலமாக வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கிறது. இதனால் எப்போதும் தர்ம சங்கடமாகவே உணர்கிறேன். என்னதான் தீர்வு?
பதில் :  அதிக சூடுதான் வெள்ளைப்படுதலுக்குக் காரணம். உணவில் உப்பு, காரம்தவிர்க்கவும். வாரம் ஒரு முறை புளித்த கீரை சேர்த்துக் கொள்ளவும். தினம் ஒரு பெரிய நெல்லிக்காயும், கொஞ்சம் உலர்ந்த திராட்சையும் சாப்பிடவும். அடிக்கடி பொன்னாங்கண்ணிக்கீரை சேர்த்துக் கொள்ளவும். வெள்ளை முள்ளங்கியை வேக வைத்த தண்ணீரைக்குடிக்கவும். வாழைத் தண்டும், பயத்தம் பருப்பும் வேக வைத்து கூட்டுமாதிரி சமைத்து சாப்பிடவும்.
நீர்மோர் நிறைய குடிக்கவும். ஊறுகாய் பக்கமேபோகாதீர்கள். உணவில் காய் கறிகள், பழங்கள், கீரைமூன்றும் அதிக மிருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அமுக்கராக்கிழங்கு மாத்திரையை வேளைக்கு ஒன்றாக தினம் மூன்று சாப்பிடவும். மாதுளம்பழத்தின் ஓட்டைக் காய வைத்துப் பொடித்து ஒரு சிட்டிகையை தண்ணீரில் கலந்து மூன்று வேளைகள் குடிக்கவும்.
அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினம் இரண்டு வேளைகள் உள்ளாடைகளை மாற்றவும். காட்டன் உள்ளாடையையே அணியவும். மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்றுகிடைக்கும். அதில் சிட்டிகையை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யவும். போதிய அளவு ஓய்வு, சரிவிகித உணவு என எல்லாம் இருந்தும் தொடர்ச்சியாக வெள்ளைப்படுகிற பட்சத்தில் ஸ்கேன் செய்து பார்க்கலாம.

கேள்வி - 21.  
என் வயது 26. ஒரு குழந்தை உண்டு. கடந்த சில நாட்களாக எனக்கு சிறுநீரை அடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நிமிடம் கூட அடக்க முடியவில்லை. சில சமயங்களில் உடை நனைந்து தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறது. இதைக்குணப்படுத்த முடியுமா?
பதில் :  திடீரென உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பிரச்சினைகளைக் குறித்த பயம் போன்றவை இதற்குக்காரணமாக இருக்கலாம். சர்ககரை நோய்க்கான சோதனையைச் செய்து பாருங்கள். உங்களுடைய உணவு எப்படிப்பட்டது எனத் தெரியவில்லை. அதில் எல்லா வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன் மற்றும் தாதுப் பொருட்கள் இருக்கிற மாதிரிப்பார்த்துக் கொள்ளுங்கள். பருப்பும், முட்டையும் தினம் சேர்த்துக் கொள்ளவும். காய்கறி, கீரை, பழம்மூன்றும் தினசரி மெனுவில் இருக்கவேண்டும். பாலில் தண்ணீர் விடாமல் காய்ச்சி அப்படியே குடிக்கவும். ச்யவனபிராஷ் லேகியம் சாப்பிடலாம்.
மருத்துவரிடம் நேரடிப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அவரது ஆலோசனையின் பேரில் காலையிலும், மாலையிலும் அஷ்வ கந்தா மாத்திரை ஒவ்வொன்று சாப்பிடலாம். மாலை நேரத்தில் கைப்பிடியளவு பொட்டுக் கடலையும், ஒரு ஆப்பிளும் சாப்பிடவும். மனத்தை ஒரு முகப்படுத்தும் தியானப் பயிற்சி இந்தப் பிரச்சினைக்குமிக அருமையான சிகிச்சை. முடிந்தால் தினம் வாக்கிங் செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மன ஆரோக்கியம்தான் இப்பிரச்சினைக்கான முதல் சிகிச்சை. எந்தப் பிரச்சினைக்கும் டென்ஷன் ஆகாமல், தைரியமாக சந்திக்கப் பழகுங்கள். உணவே மருந்து என வாழப்பழகுங்கள், மருந்தேஉணவு என்ற நிலை ஆபத்தானது.
கேள்வி - 22.  
 எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குடும்பச்சூழல் காரணமாக நாங்கள் குழந்தையே வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம். சித்த மருத்துவத்தில் குழந்தையில்லாமல் செய்ய சிகிச்சை ஏதும் உண்டா?
பதில் :  நீங்கள் நினைக்கிற மாதிரி குழந்தையே பிறக்காமலிருக்கச்செய்ய சிறப்பு சிகிச்சைகள் ஏதும் கிடையாது. பாதுகாப்பான நாட்கள் என்று சொல்லக் கூடிய நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஒன்றுதான் இதற்கான வழி. அதாவது மாதவிலக்கான ஒன்பதாம் நாள் முதல் பதினெட்டாம் நாள் வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தைத் தள்ளிப்போட மாத்திரைகள் உண்டு. அவையெல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் சாப்பிடத்தானேதவிர, நீண்டகாலத்துக்கு எடுத்துக் கொள்கிற பட்சத்தில் பக்க விளைவுகளைஉண்டாக்கும்.
கரு உருவாகாமல் பாதுகாப்பாக இருக்கப் பாருங்கள். உண்டானபிறகு அதை அழிக்க நினைக்காதீர்கள். என் மருத்துவ அனுபவத்தில் முதல் குழந்தை வேண்டாம் என அதை அபார்ஷன் செய்தார் ஒரு பெண். அதன் பிறகு அவருக்குக்கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பத்தாண்டுகளாகியும் இன்னும் குழந்தை தங்காமல் சிகிச்சையில் இருக்கிறார். இப்போது குழந்தையே வேண்டாம் என நினைக்கிற நீங்கள் பிற்காலத்தில் மனம் மாறலாம். குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதிக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட்டால்? எனவே முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். திருமணமான ஒரே வருடத்தில் செய்யக் கூடிய முடிவில்லை இது.
கேள்வி - 23.   
என் வயது 43. கணவருக்கு 50. ஏழு மாதங்களுக்கு முன்பு அவருக்கு முதல் முறையாக மாரடைப்பு வந்தது. இந்த வயதிலும் அவருக்கு இல்லற வாழ்க்கை ஈடுபாடு குறையவில்லை. மாரடைப்பு வந்ததால் நான்தான் பயப்படுகிறேன். மாரடைப்புவந்தவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். குழப்பம் தீர்க்கவும்.

பதில் : மாரடைப்புக்கும், இல்லறவாழ்க்கை ஈடுபாட்டுக்கும் நீங்கள் பயப்படுகிற அளவுக்கு தொடர்பில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் இந்த மாதிரி தேவையற்ற பயங்களின் காரணமாக, இயல்பான உணர்வுகளைக்கூட அடக்கி வாழப் பழகுகிறார்கள். அப்படி அடக்கிக் கொள்கிறபோது அது மாரடைப்பில் கொண்டு போய்விட வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்காவது இந்த ஆர்வத்துக்கு வடிகாலாக வழிகள் உண்டு. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை.
இருதயக்கோளாறுகளால் பாதிக்கப்படுகிற பல பெண்களின் வரலாறை ஆராய்கிறபோது இப்படி இயல்பான உணர்வுகளை அடக்குவது காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. கணவன்- மனைவியான உங்களுக்குள் இந்த விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டாம்.
கணவரின் உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். நெய் மற்றும் எண்ணெயை அறவே தவிர்க்கவும். குறிப்பாக உறையும் தன்மை கொண்ட எண்ணெய்களைத் தொடவே வேண்டாம். நல்லெண்ணெய் அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி, கீரைகள் நிறைய இருக்கட்டும். பதப்படுத்திய உணவுகளை சாப்பிட வேண்டாம். ருசிக்காக சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியத்துக்காக சாப்பிடப் பழக வேண்டும். மாரடைப்பு ஒரு முறை வந்தால் மீண்டும் வந்துதானாக வேண்டும் என்றில்லை. மேற்சொன்ன விஷயங்ளில் கவனமாக இருக்கிற பட்சத்தில் அது வருவது தள்ளிப் போகவோ, வராமலே போகவோ கூடும்.
கேள்வி - 24.  
என் வயது 21. இப்போது நான் இரண்டு மாதக் கர்ப்பம். கர்ப்பமாக இருக்கிறபோது இல்லற வாழ்வில் ஈடுபட்டால் சுகப் பிரசவம் நிகழும் என்று கேள்விப்பட்டேன். அது நிஜமா? எத்தனை நாட்கள் இடைவெளியில் ஈடுபடலாம்? அதனால் குழந்தைக்குபாதிப்பிருக்குமா?
பதில் :  நீங்கள் கேள்விப்பட்ட விஷயம் ரொம்பவும் தவறானது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களில் இல்லறவாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானது. இடைப்பட்ட மாதங்களில் கர்ப்பப் பைக்கு அழுத்தம் தராத வகையில் மென்மையாக உறவு கொள்ளலாம். அதுவும் கூட பிரசவமாவதில் எந்தச்சிக்கலும் இருக்காது என சொல்லப்பட்ட பெண்களுக்கு மட்டும்தான். மற்ற பெண்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் இல்லறவாழ்வில் ஈடுபடுவதால் தொற்றுக் கிருமிகள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு. பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது இந்த நாட்களில் மிக மிக முக்கியம்.
சுகப்பிரசவத்துக்கு ஆரோக்கியமான உணவுதான் அடிப்படை. தினம் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடவும். இரவு உணவுக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு போடலாம். கமலா ஆரஞ்சும், வாழைப் பழமும் தினம் சாப்பிடலாம். முருங்கைக் கீரையும், முட்டையும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். தினம் மூன்று வேளை பால்குடிக்க வேண்டியது மிக முக்கியம்.
குதிகால் உயரமாக வைத்த ஹைஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையை மட்டும் சரியாகப் பின்பற்றுங்கள். மற்றவர்கள் சொல்கிற அனுபவங்கள், கேள்விப்படுகிற விஷயங்களை எல்லாம் காதில் வாங்காமல், பயமின்றி பிரசவத்தை எதிர் நோக்குங்கள்.
கேள்வி - 25.   
எனக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமான புதிதில் என் மேல் அன்பாக இருந்த கணவர், ஒரு குழந்தை பிறந்த பிறகு என்னை நெருங்குவதே இல்லை. உணர்ச்சிகளை அடக்க நான் சுய இன்பம் செய்ய வேண்டியிருக்கிறது. கணவருக்கு என் மேல் மீண்டும் நாட்டம் வர சிகிச்சை உண்டா?
பதில் :  பொதுவாகவே திருணமான புதிதில் செக்ஸ் வாழ்க்கையில் இருக்கிற ஈடுபாடு, காலத்துக்கும் அப்படியே இருப்பதில்லை. உங்கள் கணவருக்கு அது ஒரேயடியாகக் குறைய என்ன காரணம்என முதலில் கண்டு பிடியுங்கள். ஒரு குழந்தை பெற்ற பிறகு தன்னை அழகாக, சுத்தமாக வைத்துக் கொள்கிற எண்ணம் பெரும்பாலான பெண்களுக்குப் போய் விடுகிறது.தினம் இரண்டு வேளைகள் குளியுங்கள்.
கஸ்தூரி மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், அது கணவரை இல்லற வாழ்க்கைக்கு ஈர்க்கும். நீங்கள் அணிகிற உடைகள் மற்றும் உள்ளாடைகள் அழுக்கின்றி, வியர்வை நாற்ற மின்றி சுத்தமாக இருக்கட்டும். படுக்கையறையை சுத்தமாக வைத்திருங்கள். தினம் காலையில் கணவருக்குக் கைப்பிடியளவு பச்சைப் புதினாவை சாப்பிடக் கொடுங்கள். கருணைக் கிழங்கு மற்றும் பசலைக் கீரை அதிகம் சமைத்துக் கொடுங்கள். முருங்கைப்பூவை நெய்யில் வதக்கிக் கொடுங்கள். இரவு படுக்கும் முன்பாக வெற்றிலை, பாக்குடன், சிறிது ஜாதிக்காய் சேர்த்துக் கொடுங்கள். இதெல்லாம் கணவருக்குத் தாம்பத்திய ஈடுபாட்டை அதிகப்படுத்தும். படுக்கையறையில் வீட்டுப் பிரச்சினைகள் பேசாதீர்கள்.
                                                                                          பதில்கள்: டாக்டர் ஷர்மிளா





 கணவன் மனைவி - பாலியல் இயற்கை மருத்துவக் குறிப்புகள்
[ மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா? - வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா? - கருவுற்ற பெண்கள் வாந்தி நிற்க - பிரசவ வேதனை குறைய வேண்டுமா? - முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா? - ஆண்மை பலகீனமா? - வெள்ளை, வெட்டை – பால்வினை நோய் நீங்க - மாதவிலக்கு ஒழுங்காக வேண்டுமா? –
விதை வீக்கம் தணிய - அரைக்கரப்பான் வந்துவிட்டால் - மறைவான ரணங்கள் ஆற - உடல் அழகு பெற சிம்பிள் மெத்தேட் - கருச்சிiவு அடிக்கடி ஏற்படுகிறதா? - மசக்கை காலத்தில் வயிற்று வலியா? - மாதவிலக்குத் தள்ளிப்போக வேண்டுமா? - உற்ற வயதில் பருவமடையாவிட்டால் - ஹிஸ்டீரியா நோய் குணமாக - மார்பகங்கள் தேர்ச்சி பெற - பால் பெருக இலகு வைத்தியம் - திருமணம் நிச்சயமாகிவிட்டதா?
தேன் நிலவுக் காலங்களில் - இரத்தத்தின் தூய்மைக்கும் சுறுசுறுப்புக்கும் - துரித ஸ்கலிதத்தை நிறுத்த வேண்டுமா? - விந்து கெட்டிப்பட வேண்டுமா? - விந்து பெருக வேண்டுமா? - நரம்புத் தளர்ச்சி வந்துவிட்டதா? - கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி? - ஆண்குறி உறுதிப்பட வேண்டுமா? - ஆண்குறி பருக்க வேண்டுமா? தாது புஷ்டிக்கு - ஆண்மை பெருக - இச்சையைத் தூண்ட - இல்லற இன்பம் பெற - தளர்ச்சியைப் போக்கிக்கொள்ள.]

 மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா?
1. புங்கன் வேரைக் கொண்டுவந்து நீர்விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் உள்ளுக்குள் சாப்பிட்டால் மலட்டுப் பூச்சிகள் செத்துவிடும். மலட்டுத்தனமும் நீங்கும்.
2. வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். ஆனால், இதை தொடர்ந்தார்ப்போல் மூன்று மாதவிலக்குகளுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.
 வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா?
ஒரு கைப்பிடி முட்கா வேளை இலையும், பத்து மிளகும், ஒரு சிட்டிகை ஜீரகமும் எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சங்காய் அளவு கெட்டி எருமைத் தயிரில் கலந்து குடிக்க வேண்டும். காரம், புளி உணவில் சேர்க்கக்கூடாது. வறுத்த உப்பு சேர்த்து தயிர் சோறு சாப்பிட்டு வர வேண்டும். சில நாட்களில் சரியாகிவிடும்.
 கருவுற்ற பெண்கள் - வாந்தி நிற்க :
புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு லிட்டர் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 12 மணி நேரம் வைத்திருந்து தோலை எடுத்து விட்டு பத்து நிமிடம் காய்ச்சி, கொதிக்கும் பொழுது ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து ஷர்பத் செய்து வைத்துக்கொள்ளவும். வேளை ஒன்றுக்கு 1 ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களின் வாந்தி நின்றுவிடும்.
 பிரசவ வேதனை குறைய வேண்டுமா?
மாலதி மலர்ச்செடியின் வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, கட்டி மோருடன் கலந்து உபயோகித்தால் பிரசவ வேதனை குறையும், சுகப்பிரசவமாகும்.
 முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா?
பசும்பாலைக் காய்ச்சினால் மேலே ஏடு படியும். இதை எடுத்து முகத்தின் மீது தடவி வரலாம். இவ்விதம் சில நாட்கள் தடவி ஊற வைத்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
 ஆண்மை பலகீனமா?
திடீரென்று ஒரு குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனதில் உள்ள ஒருவித பயம். தகாத எண்ணம். வாதம் போன்ற நோய்களுக்கு தாளகம், மனோசிலை போன்ற சுத்தம் செய்யாத மருந்துகளை அருந்துவதுதான் காரணமாகும்.
 வெள்ளை, வெட்டை – பால்வினை நோய் நீங்க :
ஆனை நெருஞ்சியிலை தழையைச் சுத்தம் செய்து நீராகாரத்தில் தேய்க்க வழுவழுப்பான பொருள் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை நீங்கும்.
 மாதவிலக்கு ஒழுங்காக வேண்டுமா?
வெங்காயப் பூவை நன்றாக உலரவைத்து, இடித்துத் தூள் செய்து தினசரி ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக ஆகும். ஒரு வாரமாவது குடித்து வர வேண்டும்.
 விதை வீக்கம் தணிய :
1. பலாப்பூவை நசுக்கி, சற்று வேக வைத்து விதை வீக்கமுள்ள இடத்தில் பற்றிட்டு வந்தால் விதை வீக்கம் தணியும்.
2. பவழமல்லிப் பூவைக் கொண்டு வந்து வதக்கி வைத்துக் கட்டினால் விi வீக்கம் குறைந்து வரும். சீக்கிரத்தில் சரியாகிவிடும்.
 அரைக்கரப்பான் வந்துவிட்டால் :
தொடையின் இடுக்குகளில் மர்மஸ்தானங்களைப் பற்றிக்கொண்டு உண்டாகும் ஒருவகை சொரிப்புண் இது. இது நீர் சம்பந்தமாக ஏற்படக்கூடியது. கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள் - வகைக்கு ஒரு கிராம் எடுத்து பொடித்து தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அடுப்பில் ஏற்ற வேண்டும். தண்ணீர் சுண்டி எண்ணெய்ப் பதம் வந்ததும் இறக்கி ஆற வைத்து அரைக்கரப்பான் மீது தடவி வந்தால் சீக்கிரத்தில் புண் ஆறிவிடும்.
 மறைவான ரணங்கள் ஆற :
ஆண்குறி, பெண்குறி, ஆசனவாய் இங்கெல்லாம் ரணம் ஏற்பட்டிருந்தால் குங்குமப்பூவில் தேனை விட்டு நன்றாக அரைத்து சாந்து போல் ஆக்கி ரணம் ஏற்பட்டுள்ள பாகங்களில் நன்றாகப் பூசி வந்தால் சில நாட்களில் சரியாகிவிடும்.
 உடல் அழகு பெற சிம்பிள் மெத்தோட் :
1. இரவில் படுக்கப்போகும் முன் பசும்பாலில் தேனும், மஞ்சள் பெடியும், குங்குமப்பூவும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் மினுமினுப்பு தோன்றும்.
2. பொன்னாங்கண்ணி கீரையை அவ்வப்பொழுது தனியாகவோ அல்லது பருப்புடனோ கலந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும். இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் உடல் இரும்பாகும்.
 கருச்சிiவு அடிக்கடி ஏற்படுகிறதா?
மாதுளை வேர்ப்பட்டை, அசோக மரப்பட்டை, மாதுளம் பழத்தோல் இவைகளை சம அளவு எடுத்து உளர்த்தி தூள் செய்து, ஒரு நாளைக்கு இரண்டுவேளை ஒரு சிட்டிகையளவு சாப்பிட்டு வந்தால் போதும். அதன்பிறகு கருச்சிதைவு ஏற்படாது. கர்ப்பம் தங்கும்.
 மசக்கை காலத்தில் வயிற்று வலியா?
மசக்கை காலத்தில் சிலருக்கு இலேசான வயிற்று வலி ஏற்படுவதுண்டு. அதற்கு ஆம்பல் பூவுடன் விளாமிச்சை வேரையும் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி, சிறிது சர்க்கரை கலந்து சாப்பிடவும்.
 மாதவிலக்குத் தள்ளிப்போக வேண்டுமா?
பயணங்களிலோ அல்லது விசேஷ காலங்களிலோ மாதவிலக்கு தள்ளி வரவேண்டும் என்று விரும்பும் பெண்கள் தினசரி காலையில் பொட்டுக் கடலையை (உடைத்த கடலையை) வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மாதவிடாய் சற்றுத் தள்ளி வெளிப்படும். எவ்வளவு நாள் வரவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அத்தனை நாட்கள் உடைத்த கடலையை சாப்பிடலாம். உடம்புக்கு கெடுதல் இதனால் ஒன்றுமில்லை. ஆனால், இதற்குள்ள மாத்திரையை சாப்பிடுவதூன் கெடுதல்.
 மாதவிலக்கு நின்ற சிரமப்பட்டால் :
நாட்டு வைத்தியக் கடையில் அன்னபேதி, கரியபோளம் இலை கிடைக்கும். 20 கிராம் அன்னபெதி, 10 கிராம் கரியபோளம், லவங்கப்பட்டைத் தூள் 10 கிராம் சேர்த்து இடித்து, தேன் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி, வேளைக்கு இரண்டாக நிலவேம்பு கஷாயத்துடன் சாப்பிட்டு வந்தால் அந்த சிரமம் எல்லாம் தீர்ந்துவிடும். ஆனால் கருவுற்ற பெண்கள் இதைச் சாப்பிடக்கூடாது.
 உற்ற வயதில் பருவமடையாவிட்டால் :
செம்பரத்தைக்கு ருது உண்டாகக்கூடிய குணம் உண்டு. அதனால் செம்பருத்திப் பூவை எந்த வகையினாலாவது உள்ளுக்குச் சாப்பிட கொடுத்து வரவும். சில நாட்களில் அந்தப்பெண் ருதுவாகிவிடுவாள்.
 ஹிஸ்டீரியா நோய் குணமாக :
இது, நரம்பு பலவீனமான பெண்களுக்குத்தான் ஏற்படும். இதை ‘பேய் பிடித்து’ ஆடுவதாகக் கூறுவார்கள். பொன்னாவரை இலை, வேர், பூ இவைகளை வகைக்கு 40 கிராம் கொண்டு வந்து இலேசாகத்தட்டி ஒரு லிட்டர் நீரில் இட்டு, அரை லிட்டராக காய்ச்சி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வரவேண்டும். இதனால் ஹிஸ்டீரியா நோய் குணமாகும்.
 மார்பகங்கள் தேர்ச்சி பெற :
மாதுளம் தோளைத் தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து காய்ச்சி, மேல் பூச்சாக பூசி வந்தால், மார்பகங்கள் இரண்டு வாரத்திற்குள் நன்கு பூரித்து விம்மி புடைத்துக்கொள்ளும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதனால்; மார்பகங்கள் செழித்து வளரும்.
 பால் பெருக இலகு வைத்தியம் :
சில தாய்மார்கள், குழந்தைக்குப் போதுமான பால் பெருகாமல் சிரமப்படுவார்கள். ஒரு தோலா ஜீரகத்தையும், ஒரு தோலா வெல்லத்தையும் சேர்த்து நசுக்கி உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே நன்கு பால் பெருகும்.
இனிமேல் தினசரி திராட்சை, மாதுளை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏதேனுமொன்றை சாப்பிட்டு வரவேண்டும். இரத்த உற்பத்தியும் புத்துணர்ச்சியம் ஏற்படும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் மார்பகங்கள் செழித்து வளரும்.
 தேன் நிலவுக் காலங்களில் :
குஷாலாக தேன் நிலவுக்குச் சென்று உயர்ந்த ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்கியிருப்பவர்கள் இரவுக்காலங்களில் உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும். எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும். அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும். இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி எல்லாத் தம்பதிகளுக்குமே பொருந்தும்.
 இரத்தத்தின் தூய்மைக்கும் சுறுசுறுப்புக்கும் :
ஒரு பிடி கொத்துக் கடலையை முந்தின இரவே ஊற வைத்து விடுங்கள். சீமை அத்திப்பழம் இரண்டையும் அதில் கிளரிப்போட்டு ஊற வையுங்கள். காலையில் அப்படியே வேக வைத்து வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து சாப்பிடவும். மிகவும் சுவையாக இருக்கும். இந்த அத்திப்பழச் சுவைநீர் இரத்தத்தை தூய்மைப்படுத்துவதுடன் உடம்பிற்கு சுறுசுறுப்பையும் கொடுக்கும்.
 துரித ஸ்கலிதத்தை நிறுத்த வேண்டுமா?
சிலருக்கு சீக்கிரத்தில் விந்து வெளியேறிவிடும். இதைத் தடுத்து நிறுத்த தாழம் பூவின் உள்ளே இருக்கும் பட்டு போன்ற பொடியை எடுத்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து இழைத்து ஆண்குறியின் மீது பூசிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் விந்து விரைவில் வெளியேறாது.
 விந்து கெட்டிப்பட வேண்டுமா?
பொரித்து எடுத்த படிகாரத்தை பொடியாக்கி 15 கிராம் எடுத்து அதில் கற்கண்டுத் தூள் 50 கிராம் சேர்த்துக் கலந்து வைத்துக் கொண்டு, பத்து சம பாகமாகப் பொட்டலம் கட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு ஒரு பொட்டலம் வீதம் பத்து நாட்கள் காய்ச்சிய பசும் பாலுடன் சாப்பிட்டு வரவும். நீற்றுப்போன விந்து கெட்டியாகிவிடும்.
 விந்து பெருக வேண்டுமா?
ஆளி விதையைப் பாலில் வேக வைத்து சர்க்கரை அல்லது வெல்லம் போதுமான அளவு சேர்த்து லேகியம் பொல் கிளறி காலை - மாலை, சுண்டைக் காயளவு உட்கொண்டு வந்தால் உடல் பலகீனம் நீங்குவதுடன் விந்தும் பெருகும்.
 நரம்புத் தளர்ச்சி வந்துவிட்டதா?
1. நரம்புத்தளர்ச்சியை நீடிக்கவிடக் கூடாது. ஜடா மஞ்சரி வேரின் தூள் 5 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும். அந்த நீரில் 1 அவுன்ஸ் வீதம் மூன்று வேளை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
2. கருவேலன் பிசினை எடுத்து காய வைத்து அத்துடன் கற்கண்டையும் சேர்த்து நன்றாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் அரை ஸ்பூன் அளவு பாலில் போட்டு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகிவிடும்.
 கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி?
ஒருவருக்கு எப்பொழுதாவது கனவில் விந்து வெளியேறினால் அது ஆரோக்கிமே! அதேசமயம் அடிக்கடி தொடர்ந்து கனவில் விந்து வெளியேறினால் அது உடலை பலகீனமாக்கிவிடும். இதற்குத் தீர்வு – துளசி வேரை இடித்துப் பொடியாக்கி அதை வெற்றிலையில் வைத்து சாப்பிட வேண்டும். மூன்று நாட்களிலேயே ‘சொப்பன ஸ்கலிதம்’ (கனவில் விந்து வெளியாவது) நின்றுவிடும்.
 ஆண்குறி உறுதிப்பட வேண்டுமா?
தனது ஆண்குறி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத ஆண்கள் உண்டா? அல்லது தனது கணவனின் ஆண்குறி வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெண்கள் தான் உண்டா?! இதோ அவர்கள் ஆசைக்கு அருமருந்து:
வசம்பு, அமுக்கராங் கிழங்கு, எட்டிக்கொட்டை இவைகள் சம அளவில் எடுத்து, பசும்பால் விட்டு அரைத்து ஆண்குறியின் மீது பூசி வந்தால் ஆண்குறி நன்கு உறுதிப்பட்டு மிகுந்த வலிவுகொண்டு ‘துடிப்புடன்;’ என்று எழுந்து நிற்கும். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பூசி வர வேண்டும்.
 ஆண்குறி பருக்க வேண்டுமா?
சிலருக்கு ஆண்குறி வயதிற்குத் தகுந்த பருமன் இருக்காது. அவர்கள் 15 சங்கம்பழம் கொண்டு வந்து பிழிந்து சாறு எடுத்து ஒரு கோப்பையில் வைத்துக்கொள்ளவும். அரை கிராம் அளவு பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில் எடுத்து வைத்து, அந்தப் பழச்சாற்றை தேவையான அளவு விட்டு நன்கு நசித்து ஆண்குறியின் மீது தடவி வர வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது தடவி வர வேண்டும். அதற்குள் ஆண்குறி நன்கு பருத்து ‘திண்’ணென்று ஆகிவிடும்.
 தாது புஷ்டிக்கு - ஆண்மை பெருக :
1. தாது புஷ்டிக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால் போதும், தாது புஷ்டியடையும். இரவில் படுக்கும் பொழுது இதைச் சாப்பிட வேண்டும்.
2. கருவேலன் பிசினை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட்கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தியடையும். பேடித்தன்மை அழியும்.
3. மாம்பழச் சாற்றில் சர்க்கரையைப் போட்டு பாகு பதமாய் வந்ததும், அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித்திப்லி, பரங்கிப்பட்டை, நிலப் பனைக்கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு இவைகளில் சூரணத்தைப் போட்டு நெய்விட்டு களிரி, தேனையும் சேர்த்து லேகிய பதமாய் ஜாடியில் எடுத்து வைக்கவும். இதற்கு ஆனந்த லேகியம் என்று பெயர். இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கட்டுப்படும் போக சக்தி பெருகும்.
4. காலை உணவுக்கப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். இரவு உணவுக்குப் பின் 12 பேரிச்சம் பழங்களை உண்டு பசும்பால் அருந்தவும். இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் கணசமான ஆண்மை பெருகும். இரவு உணவுக்குப்பின் உடனே ‘டூ பாத் ரூம்’ போகக்கூடாது. ஆண்மைக்குறைவு ஏற்படும்.
 இச்சையைத் தூண்ட :
ஜாதிக்காய்க்கு போக இச்சையைத் தூண்டக்கூடிய குணமுண்டு. ஆண்மைக்குறையுள்ளவர்களுக்கும் ஜாதிக்காய் பயனுள்ளதாகும். குறைபாடில்லாதவர்கள் அதிபோகம் விரும்பி இதை உபயொகித்து வந்தால் - பிறகு இது செயற்கை தூண்டியாக அமைந்து நிர்பந்தமாக உபயோகிக்கும் வழக்கத்தை உண்டுபண்ணி விடும். எனவே, குறையுள்ளவர்கள் சாப்பிடுவதே நல்லது.
 இல்லற இன்பம் பெற :
பேரிச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து இரவில் தினமும் மூன்று சாப்பிட்டு உறவு கொள்ளலாம். அல்லது அமுக்கிராங் கிழங்கைப் பாலில் வேக வைத்து, உலர்த்தி இடித்து, கற்கண்டு சேர்த்து பசும்பாலில் காய்ச்சிக் கலந்து சாப்பிடலாம்.
 அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ள :
கல்யாணப் பூசணிக்காயின் (சாம்பல் பூசணி) சாற்றை ஒரு அவுன்சுக்கும் குறையாமல் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது கற்கண்டோ சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ளலாம்.
(இதில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை மருந்துகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கலாம்.)
                                         - ரதிப்ரியா ‘தாம்பத்திய வழிகாட்டி’ நூலாசிரியை.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்:

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates