Elegant Rose - Diagonal Resize 2 ஏப்ரல் 2012 ~ TAMIL ISLAM

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

வங்கி மைனஸ் வட்டி

  நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக உங்களுக்கு
முருகனைத் தெரிந்திருக்கும். வங்கியியல் வல்லுநராக ஒரு புதிய அறிமுகத்தை
இப்போது செய்துகொள்ளுங்கள். உலகெங்கும் இன்று பிரபலமாகப் பேசப்படும்
இஸ்லாமிக் பேங்கிங்கை இக்குறுந்தொடரில் அறிமுகப்படுத்துகிறார் இரா.
முருகன்.


                           வங்கி மைனஸ் வட்டி

அமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் கவர்மெண்ட்
செலவில் தேசிய அளவு பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய
சமூகத்தைக் குறித்துத்தான்.

கான், ஹசன், முஸ்தபா இப்படிப் பெயரை பாஸ்போர்ட்டில் பார்த்தாலே மேற்படி
நாடுகளில் ஏர்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளின் பிளட் பிரஷர்
எகிறிப்போகிறது. காது மடல் சிவக்க பாஸ்போர்ட்டை விரித்து பெஸ்ட் செல்லர்
லிஸ்ட் புத்தகம்போல் ஒரு பக்கம் விடாமல், ஒரு வரி விடாமல்
படிக்கிறார்கள்.

பல சந்தர்ப்பங்களில் உள்ளே தனியறையில் மணிக்கணக்காக விசாரணை செய்து பின்
லேடனுக்கு ஒண்ணு விட்ட, எட்டு, எண்பது விட்ட தம்பிக்கு மச்சினன்
சம்சாரத்துக்கு மாமா பிள்ளை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கடனே
என்று கதவைத் திறக்கிறார்கள்.

ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த
நாடுகள் கூட, ‘இஸ்லாமிய வங்கி’ என்றால் இருகரம் நீட்டி வரவேற்று ‘வாங்க,
கோக் சாப்பிடுங்க’ என்று உபசரிக்கின்றன.

அப்படி என்ன மந்திரச் சொல் இந்த இஸ்லாமிய வங்கியியல் (Islamic Banking) என்பது?

இட்லிக் கடை வைப்பதுபோல், இம்பாலா கார் கம்பெனி நடத்துவதுபோல்,
வங்கித்தொழிலும் லாபத்தைக் குறிக்கோளாக வைத்துத்தான் நடத்தப்படுவது.
நேர்மையாக, தெய்வத்துக்கு, மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல்
வங்கித்தொழிலை சமூக நோக்கில் நடத்த வழி சொல்வது இஸ்லாமிய வங்கியியல்.
லாபத்தையும் இழப்பையும் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் ஒரு சமுதாயவியல்
அது.

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் கௌதம புத்தர். வட்டியே வங்கித்
துறையில் நேர்மையின்மைக்குக் காரணம் என்கிறது இஸ்லாமிய வங்கியியல். ஆக,
இஸ்லாமிக் பேங்கிங்கின் ஆத்திசூடி ‘வட்டி வாங்காதே வழங்காதே’ என்று
தொடங்குகிறது. இந்த அரிச்சுவடியை எட்டாம் நூற்றாண்டிலேயே
எழுதிவிட்டார்கள் என்பது விசேஷம். ஆமா சார், இஸ்லாமிய வங்கியியல் உலகம்
முழுக்கக் கடைப்பிடிக்கப்படுகிற ஐரோப்பிய பேங்கிங்குக்கு மிக மிக
மூத்தது.

இஸ்லாமிய வங்கியியலின் ஆதார சுருதி ஷரியா. அல்-ஷரியா என்று புனிதச்
சட்டமாகப் போற்றப்படுவது இது.

மனிதன் எப்படி நடக்கவேண்டும் என்ற இறைவனின் விருப்பம்தான் ஷரியா.  பல
கோடி இஸ்லாமியர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள். காசு கொடுத்து வாங்கும்
வங்கித் தொழிலா, கையில் ஆயுதம் எடுத்து யுத்தம் புரியும் போர்த் தொழிலா,
சுற்றுச் சூழலா, சமுதாய முன்னேற்றமா, ஷரியா தொடாத துறையே இல்லை.

ஷரியாவில் காணப்படும் வர்த்தகம் பற்றிய விதிகள் இஸ்லாமிய வங்கியியலில்
முழுமையாகக் கையாளப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள் ஃபிக் அல்-முவாமலத் (Fiqh al-Muamalat) அதாவது,
கொடுக்கல் வாங்கல் பற்றிய இஸ்லாம் மார்க்க விதிகள் என்று அழைக்கப்படும்.
இந்த விதிகளில் ஏதாவது ஒண்ணு ரெண்டை சாய்ஸில் விட்டாலும் அது இஸ்லாமிக்
பேங்கிங் இல்லை, இல்லை இல்லவே இல்லை.

சரி, ஷரியா எங்கே இருந்து வந்தது?

இஸ்லாமிய மதநூல் புனித குரான் ஷரியாவுக்கு ஊற்றுக்கண். ஷரியாவின் இன்னொரு
கண்ணாக விளங்குவது நபிகள் நாயகம் அவர்களின் முழு வாழ்க்கையுமேதான். அவர்
பேசியது, போதித்தது, வாழ்ந்து காட்டியது இவை எல்லாவற்றையும்
சித்திரிக்கும் ஹடித் (Hadith) என்ற வாழ்க்கைக் குறிப்புகள் இவை.

ஷரியா என்றால், ‘தாகம் தீர்க்கும் குளிர்நீர் ஊற்றுக்கு இட்டுச் செல்லும்
பாதை’ என்று வெண்தாடியைத் தடவிக்கொண்டு நீண்ட சொல் விளக்கம் தருவார்கள்
மார்க்க அறிஞர்கள். மரபு சார்ந்த… என்ன மரபு சார்ந்த வேண்டிக் கிடக்கு…
ஐரோப்பிய தொழில் தர்மம்தான் நம் மரபாச்சே, ஐரோப்பிய  வங்கியியல் அண்மைக்
காலத்தில், அதாவது கி.பி. 2008-ல் உலக அளவிலே பொருளாதார நெருக்கடிக்கு
மூல காரணமாக இருந்தபோது, எத்தைத் தின்னால் பித்தம் தீரும், இந்த நிதிநிலை
முடக்குவாதம் குணப்படும் என்று உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத்
தாகத்தோடு அலைந்தார்கள். அப்போது அவர்களுக்குக் ‘குளிர்நீர் ஊற்றாக’
தட்டுப்பட்டது ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும்தான். நெஞ்சில் கையை
வைத்துச் சொல்லச் சொன்னால் ஜார்ஜ் புஷ்கூட இதை மறுக்காமல், மறக்காமல்
சொல்வார். எதுக்கும் இங்கிலீஷில் கேட்டுப் பார்க்கவும்.

ஷரியாவை நாம் புரிந்துகொள்ளும் சௌகரியத்துக்காக ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1)    மதம் சார்ந்த வழிபாட்டு நெரிமுறைகள் பற்றிய இபாதா (ibadah)

2)    (ஏற்கனவே பார்த்த) முவாமலத் – கொடுக்கல் வாங்கல் விதிகள் (mu’amalat)

3)    நீதி, பண்பாடு பற்றிச் சொல்லும் ஆதாப் (adab)

4)    நம்பிக்கைகள் பற்றிய லிதிகாதத் (i’tiqadat)

5)    ஷரியாவைக் கடைப்பிடிக்காவிட்டால் விதிக்கப்படவேண்டிய தண்டனைகள்
பற்றிய உகுபத் (uqubat)

ஒரு நொடியில் இருந்து ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து முடித்து அடங்குகிறது
வரையான காலத்துக்குத் தேவையான சகல விதிமுறைகளும் ஷரியாவில் உண்டு. இதில்
சொல்லப்படாத ஏதாவது சம்பந்தமாக வழிகாட்டுதல் வேண்டியிருந்தால் இஸ்லாம்
மூன்று விதங்களில் அதற்குத் தீர்வு காணலாம் என்று வகுத்திருக்கிறது.

1)    அறிஞர்கள் கூடி ஆலோசித்து வழங்கும் பெரும்பான்மைத் தீர்வு

2)    ஒற்றை இஸ்லாமியப் பேரறிஞர் அலசி ஆராய்ந்து வழங்கும் தீர்ப்பு

3)    பழக்க வழக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வு

தீர்வு வழங்கும்போது ஒன்றே ஒன்றை மனத்தில் இருத்திக்கொண்டால் போதும் –
புனித குரானில் சொல்லியிருப்பதற்கு மாறாக அது இருக்கக்கூடாது.

ஷரியாவில் இருந்து பெறப்பட்ட இஸ்லாமிய வங்கியியல் விதிமுறைகள் பற்றி சிறு
குறிப்பு வரைக என்றால் அடுத்த ஆறு பாராவையும் கனகம்பீரமாகச் சொல்லலாம்.

பணத்தைக் கொடுத்து வாங்கி, அதாவது ‘வாடகைக்கு விடும்போது’ (renting of
money) அதற்குக் கூலி வாங்குவது பாவம். அந்தக் கூலிதான் வட்டி. இஸ்லாம்
மொழிநடையில் வட்டி என்பது ‘ரிபா’ (Riba). பாவம் என்பது ‘ஹராம்’ (Haram).

ரிபா …சாரி’பா, அது ஹராம் நெம்பர் ஒன்.

ஷரியா தடைவிதித்த தொழில்களில் பணத்தை முடக்குவதும், அவற்றை எடுத்து
நடத்தி லாபம் பார்ப்பதும்கூட ஹராம். போதைப் பொருள்கள், மது, சூது இப்படி
எத்தனையோ இந்த ஹராம் பட்டியலில் உண்டு. அரசியல் இல்லை.

புனித குரான் சொல்கிறது, ‘இறைவன் வணிகம் நடத்த அனுமதித்துள்ளான். ஆனால்
ரிபாவுக்குத் தடை விதித்திருக்கிறான்.’

சவாலைச் சமாளிக்காமல் சம்பாத்தியம் இல்லை (There is no reward without
taking any risk) – இதுவும் இஸ்லாமிய வங்கியியலின் இன்னொரு அம்சம்தான்.

இந்தச் சவாலும் சம்பாத்தியமும் உழைப்பு, முதலீடு ரெண்டுக்கும்
பொருந்தும். உழைத்து, உழைப்பின் வெற்றியை அடைகிற சவாலைச் சந்திக்கும்
தொழிலாளியும், நேர்மையாக முதலீடு செய்து லாபம் ஈட்டும் முதலாளியும்
ஷரியாவின் கண்களில்  ஒரேபோல!

பாகம் 2

வட்டி (ரிபா) பற்றிய இஸ்லாமிய நோக்கை இன்னும் கொஞ்சம் விரிவாகப்
பார்க்கலாம். கோடி கோடியாகப் பணம் புரளும் சர்வதேச வங்கித் துறையையே
புரட்டிப் போடும் கோட்பாடு அது. மாற்றம் நல்லதுக்குத்தான் வழிவகுக்கும்.

பணம் என்பது ஒரு சொத்து என்று நினைத்தால் மகா தப்பு. அது ஒரு
மதிப்பீடுதான் (value). வீடு, நிலம், நகை, படி அரிசி என்று உலகத்தில்
விற்பனைக்குக் கிடைக்கிற எத்தனையோ பொருட்களை மதிப்பிடப் பணம் ஓர்
அளவுகோல்.

ஒரு பவுன் தங்கத்தின் விலை மதிப்பு (இதை எழுதும்போதே இன்னும் கொஞ்சம்
எகிறி இருக்கும்) நிச்சயம் ஒரு பிளேட் இட்லி சாம்பாரின் விலை மதிப்புக்கு
ஈடாக இருக்காது.

ஒரு நானோ காரின் மதிப்பு பணமாகச் சொன்னால் ஒண்ணே கால் லட்சம் ரூபாய். ஒரு
முர்ரா எருமையின் பண மதிப்பும் அவ்வளவே. முர்ரா எருமை முப்பது லிட்டர்
பால் தரும். நானோ லிட்டருக்கு பதினைந்து கிலோமீட்டர் ஓடும்.  ஒரே பண
மதிப்புள்ள ரெண்டு பொருட்களின் சாதக பாதகங்களை ஒப்பு நோக்கி, காரா,
எருமையா என்று தீர்மானிப்பது உங்க வீட்டுக்காரம்மா விருப்பம்.

உங்களிடம் ஒரு  கார் இருந்தால் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அதே
மதிப்பில் (சரி, எருமை வேண்டாம்) எது வாங்கலாம் என்று தீர்மானிக்க
பணமதிப்பு வழி செய்கிறது. பொருட்களைப் பரிமாறிக் கொள்ள (exchange)
உதவுகிறது.

ஆக உருண்டோடிடும் பணம் காசென்னும் உருவமான பொருளுக்கு என்று தனியாக ஒரு
மதிப்பு கிடையாது. அமிதாப் பச்சனை ஆறடி என்று இஞ்ச் டேப்பில் அளக்கலாம்.
அதனால் இஞ்ச் டேப்புக்கு என்று தனி மதிப்பு கிடைக்குமா என்ன?

பணத்துக்கே சொந்த மதிப்பு இல்லாதபோது, அதைக் கடன் கொடுத்து அதுக்குக்
கூலியாக வட்டி வாங்கினால், அந்த ரிபாவுக்கு மதிப்பு? ஒரு சுக்கும் இல்லை.
அது மட்டுமா? வட்டி சுரண்டலுக்கும் சமூக ஏற்றத்தாழ்வுக்கும்கூட வழி
வகுக்கிறது. வியாபாரம் செய்தால் பொருட்கள் கை மாறும். மதிப்பில்லாத
பணத்தை வட்டிக்கு விட்டால் ஹராம்தான் (பாவம்) உருவாகும். ரிபா
விலக்கப்பட்டது. ஏனெனில் அது அநியாயமானது (ஸுல்ம் – Zulm) என்று
சொல்கிறது திருக்குரான் (வசனம் 2:279).

‘நிதி சால சுகமா’ என்று கல்யாணி ராகத்தில் கேட்டார் தியாக ப்ரம்மம். லேது
என்கிறது ஷரியா. நிதியைவிட முக்கியமானவை மனித உழைப்பு, முனைந்து
செயல்படுதல் (initiative), செய்யும் தொழிலில் சவால்களைச் சமாளித்து
வெற்றிக்கு வழி வகுத்தல்  (risk management) ஆகிய மூன்றும். ஷரியா தரும்
விளக்கம் இது.

‘அது சரி, சும்மா நிதியை வச்சு அழகு பார்த்துக்கிட்டு இருந்தா அது, தானே
உதயநிதி, தயாநிதி, கலாநிதின்னு வளருமா? கைமாற்று கொடுத்து, வட்டிக்கு
விட்டு சம்பாதிச்சாத்தானே அது பெருகும்?’ன்னு கேட்டால், ஒற்றை
வாக்கியத்தில் பதில் – ‘இஸ்லாமில் கடன் கொடுப்பது என்ற ஒரு வழக்கமே
கிடையாது!’

‘இங்கே கடன் கொடுக்கப்படும்’ என்று நியான் விளக்கு போட்டு நிதி நிறுவனம்
எதையும் ஷரியாவின்படி திறக்க முடியாது. நீங்கள் பண உதவி செய்யுங்கள்.
வேண்டாம் என்று சொல்லவில்லை. நண்பரின் தொழிலிலே பணம் முடக்கி
இருக்கிறீர்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். சரிதான்.

ஆக, உழைப்பை முதலீடு செய்யும் உங்கள் நண்பரும், பணத்தை முதலீடு செய்யும்
நீங்களும் பங்காளிகள். லாபத்தில் பங்கு பெறத் தகுதி உள்ளவர்கள். உங்கள்
முதலீடு ஈட்டித் தரும் லாபம் விலக்கப்பட்டது இல்லை. அதை ஷரியாவும்
இஸ்லாமிய வங்கியியலும் முழுமையாக ஆமோதித்து வரவேற்கின்றன.

வட்டி வாங்குவதையும், சமுதாயத்துக்குத் தீமை ஏற்படுத்தும் தொழில்களில்
நிதி முதலீடு செய்வதையும் ஷரியா தடை செய்திருக்கிறது என்பதை ஏற்கெனவே
பார்த்தோம். இவை மட்டுமில்லை, முழுக்க முழுக்க நிச்சயமில்லாத விளைவுகள்
கொண்ட தொழில், வியாபாரத்தில் (கரார் – garar) ஈடுபடுவது,  பந்தயங்களில்
முதலீடு (மைசீர் –Maysir) இதெல்லாம் கூட ஹராம்தான்.

சரி, வாங்க, வங்கிக்குப் போகலாம். இது நம்ம ஊர் வங்கி.

‘என்ன வேணும்?’ சிரத்தை இல்லாமல் கேட்கிறார் அதிகாரி. நாலு கிளார்க்
லீவு. அத்தனை வேலையும் அண்ணாத்தை தலையில் கட்டிவிட்டு மேனேஜர் ரீஜனல்
ஆபீசுக்கு பெர்பார்மென்ஸ் ரிவ்யூ மீட்டிங்குன்னு எஸ்கேப் ஆகிட்டார்.
அங்கே அவரை, செயல்பாடு போதாதுன்னு மேலதிகாரிகள் லாடம் கட்டிட்டு
இருப்பாங்க என்பது வேறு விஷயம்.

‘சார், லோன் வேணும்’.

‘என்ன லோன்?’

‘சிறு தொழில் கடன்’.

‘என்ன வேணும்?’  என்ன-வில் ஒரு சின்ன அழுத்தம்.

‘ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி லோன்’ என்று ஈசியான தமிழில் சொல்கிறோம்.
ஆபீசர் சார் நிமிர்ந்து உட்கார்கிறார்.

ரிசர்வ் பேங்க்காரனும் ரீஜனல் மேனேஜர் தாதாவும் உயிரை எடுக்கறாங்க.
பேங்க் பிராஞ்ச் கொடுக்கற மொத்தக் கடனில் நாற்பது சதவிகிதம் அதி
முக்கியமான துறைகளுக்கு (priority sector) கொடுத்தாகணும். சிறு தொழில்,
விவசாயம், கல்விக் கடன் இதெல்லாம் ப்ரியாரிட்டி செக்டர்லே வர்ற சமாசாரம்.

ஆக, கடன் விண்ணப்பக் காகிதம் கைமாறுகிறது. அதைப் பூர்த்தி செய்ய உங்க
பெயர், முகவரி, வயது, கல்வித் தகுதி, செய்யற தொழில் விவரம், உங்ககிட்ட
இருக்கப்பட்ட அசையும் பொருள், அசையாப் பொருள் (அதாங்க, movabale
property, immovable property) சொத்து விவரம் எல்லாம் பொறுமையா
எழுதறீங்க.

நான் அதிகாரியாக இருந்த ஒரு பேங்க் பிராஞ்சில் லோன் அப்ளிகேஷன் இப்படி
இருந்தது. சொத்து விவரம் : அசையும் பொருள் – கணவரிடம் உள்ளது. அந்தம்மாவை
விசாரிக்க, வீட்டுக்காரரின் பஜாஜ் ஸ்கூட்டரைக் காட்டினார்.

சொத்து பத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை. யாராவது கியாரண்டி
கொடுப்பாங்களா? அதாவது நீங்க கடனைத் திருப்பிக் கட்டுவீங்கன்னு
உத்திரவாதம்?

விவரம் கொடுக்கறீங்க. நடையா நடந்து ஒரு வழியா லோன் சாங்ஷன் ஆகுது.

‘இருபத்து நாலு மாசத்திலே பணத்தைத் திருப்பிக் கட்டணும். பிரதி மாதம்
அடைக்க வேண்டிய தொகை இது. தவிர மூணு மாசத்துக்கு ஒரு தடவை வட்டி
கட்டணும். எட்டரை சதவிகிதம் கூட்டு வட்டி’ – இதுக்கெல்லாம் சம்மதிச்சுக்
கையெழுத்து போடறீங்க. தொழில் நல்லா நடந்தா கட்டாம இருப்போமா என்ன?

ஒரு வருஷம் ஒழுங்காப் போகுது எல்லாம். திடீர்னு ரெண்டு மாசம் தொழிலைக்
கவனிக்க முடியாதபடி உடம்பு சுகவீனம். ஆஸ்பத்திரி, அலைச்சல். செலவு.

‘சார், இன்ஸ்டால்மெண்ட், வட்டி ரெண்டையும் கட்ட முடியலே இந்த ரெண்டு
மாசமாக. கொஞ்சம் பொறுத்துக்க முடியுமா?’

அதிகாரி நரசிம்மாவதாரம் எடுக்கிறார்.

‘உங்க தொழில்லே, ஆரோக்கியத்துலே, குடும்பத்துலே பிரச்சனைன்னா அதை
பேங்குக்கு சொல்லிப் புண்ணியம் இல்லை. பணத்தைக் கட்டலேன்னா என்.பி.ஏ
ஆக்கிடுவோம். அப்புறம் எங்களைக் குத்தம் சொல்லாதீங்க.’

அவர் பேங்குமொழி பேசுகிறார். அதாவது உங்க கடனை வராக் கடன் (Non
Performing Asset – NPA) முத்திரை குத்தி மேல் நடவடிக்கை எடுப்பாராம்.
இதுவே தனியார் வங்கியாக இருந்தால், வராக் கடனை வசூலிக்க வீட்டு வாசலுக்கு
ஆட்டோகூட வரலாம்.

ஆக, மேலே சொன்னதில் இருந்து பெறப்படும் செய்தி யாதெனில்

   வழமையான வங்கித் தொழிலிலோ, தனியார் கொடுக்கல் வாங்கலிலோ, பணத்தை
வழங்குகிறவருக்கு (lender) கடன் வாங்கியவர் (borrower) வாங்கிய
பணத்தையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டவர்.
   வழங்குகிறவருக்கு, வாங்குகிறவர் அந்தப் பணத்தை வைத்துச் செய்யும்
தொழில்மீது ஈடுபாடு இல்லை. அவர் பணத்தை திருப்பித் தருவாரா, தராவிட்டால்
என்ன செய்யலாம் என்பதில்தான் அக்கறை.
   தொழில் கையைக் கடித்தாலோ, ஷட்டரை இழுத்து மூடவேண்டி வந்தாலோ,
வழங்குகிறவருக்கு ‘முடியே போச்சு போய்யா’. சட்டம் இருக்கு. கையெழுத்து
வாங்கின டாக்குமெண்ட் இருக்கு. வீட்டை அடமானம் வச்சு லோன் எடுத்துக்
கட்டலையா? வீட்டையே ஜப்தி செய்யலாம். சட்டம் வழி செஞ்சிருக்கு.

நேர்மையாக இருந்தாலும், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கட்டவேணும் என்று
பொறுப்பு உணர்ச்சி இருந்தாலும், அதைச் செய்ய முடியாமல் போனால், கடன்
கொடுத்த வங்கிக்குக் கரிசனம் வேண்டியதில்லை. வங்கித் தொழிலில் கருணை,
கரிசனம் இதுக்கெல்லாம் இடம் இல்லை. இதுதான் நாம் பார்க்கிற வங்கி.

இஸ்லாமிய வங்கி?

‘வாங்க, முதரபா (Mudarabah) தரோம்’ என்கிறது.

கடனில்லை. உங்க மேல் அக்கறை உள்ள, சுக துக்கத்திலே பங்கு எடுத்துக்கற,
சமூக நோக்கு கொண்ட உதவி.

முதரபா அப்படின்னா?

பாகம் 3

முதரபா (Mudarabah) என்பது கடன் இல்லை, சமூக நோக்கு கொண்ட உதவி என்று
சொன்னோமே, அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

எந்த நேர்மையான தொழிலுக்கும் நிதியும் உழைப்பும் அவசியம். நிதியை
மேல்படியில் மெத்தை போட்டு உட்கார்த்தி, உழைப்பை வாசலில் கூனிக் குறுகி
நிற்கவைப்பது அநீதி. ஆக, ஒருவர் தொழில் திறமையையும் உழைப்பையும்
மூலதனமாகப் போட, இன்னொருவர் பணத்தை மூலதனமாக முடக்கவேண்டும்.

நஷ்டம் வரலாம் என்ற சவாலை எதிர்பார்த்து உழைப்பாளரின் திறமையில்
நம்பிக்கை வைத்து பண முதலீடு செய்வதாலேயே முதலாளிக்கு லாபத்தில் பங்குபெற
கன கம்பீரமான உரிமை ஏற்படுகிறது.

உழைப்பு சரிவர இருந்தும், லாபம் வராமல் போனால், உழைப்பாளி பண
நஷ்டத்துக்குப்  பொறுப்பாக மாட்டார். முதலாளி தொழிலில் முதலீடு செய்த
பணம் நஷ்டத் தொகையின் அளவுக்குக் குறைக்கப்படும். உழைப்பாளி பெற உரிமை
உள்ள, ஆனால் கிடைக்காமல் போன உழைப்பின் ஊதியம் இந்தப் பண நஷ்டத்துக்கு
ஈடாகும்.

ஏன் வழமையான கடன் வழங்குதல்–வாங்குதல் உறவை விட முதரபா மேலானது என்பதற்கு
மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

1)    தொழில் தொடங்கும் முன்பே முதலாளியும் உழைப்பாளியும் லாபம்
வரும்போது எந்த விகிதத்தில் அதைப் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று முடிவு
செய்து ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். இந்த லாபப் பிரிவினை, பண முதல்
தரும் வருமானத்தை (return on capital) அடிப்படையாகக் கொண்டதில்லை.
முழுக்க முழுக்கத் தொழிலில் கிட்டும் லாபத்தைச் சார்ந்தது (profit
sharing agreement).

‘நான் இவ்வளவு பணம் தருவேன். நீங்கள் இவ்வளவு உழைப்பீர்கள்.
நிர்வகிப்பீர்கள். தொழில் முன்னேற்றம், பிரச்சனைகள் பற்றி என்னோடு தகவல்
பகிர்ந்து கொள்வீர்கள். நான் அதிகம் பணம் உதவவேண்டி வந்தாலோ, நீங்கள்
இன்னும் திறமையாக, இன்னும் கடுமையாக உழைக்கவேண்டி வந்தாலோ, மனமுவந்து
அதைச் செய்வோம்’ என்று அந்த ஒப்பந்தம் தெளிவாக்கும்.

முதலீடு செய்பவருக்கு நிர்வாகத்தில் குறுக்கிட உரிமை இல்லை. அதேபோல்
தேவையில்லாமல், பணம் கொடுங்க என்று விடாப்பிடியாக அதிக நிதி கேட்டு
நச்சரிக்க மற்றவருக்கு உரிமை இல்லை.

2)    இப்படி ஒருவருக்கு ஒருவர் இணக்கமான அக்கறையோடும் முழு முனைப்போடும்
தேவையான நிதி அடிப்படையோடும் நடக்கும் தொழிலில் நஷ்டம் வந்தால் இருவருமே
பாகுபாடு இன்றி வெவ்வேறு வடிவத்தில் அந்த இழப்பைத் தாங்கிக்
கொள்கிறார்கள். இழப்பையும் கடந்து முன்சென்று ஒப்பந்தப்படி வெற்றி கண்டு
லாபத்தைப் பங்கு வைப்பது என்ற லட்சியம் தொடர சாத்தியக்கூறுகள் நிறைய
உள்ளன.

நேர்மையான உழைப்புக்கும், பொறுப்பான நிதியுதவிக்கும், திறமையான
நிர்வாகத்துக்கும், தர்ம நியாயத்துக்கு உட்பட்ட தொழில் நடப்புக்கும்
கிடைக்கும் வெகுமதியே லாபம். அந்த லாபத்துக்கு வானமே எல்லை. அதைப் பங்கு
வைக்கும் விகிதத்தையும் ஷரியா இவ்வளவு என்று கட்டுப்படுத்தவில்லை.

3)    முதரபா ஒப்பந்தத்தை இருவரில் எவர் மீறினாலும்,  இஸ்லாமிய வங்கிச்
சட்டத்தின் கண்களில் ஒரே மாதிரி நடத்தப்படுகிறார். அவர் மற்றவருக்குத்
தரவேண்டிய நஷ்ட ஈடு விவரமும் ஒப்பந்தத்தில் இருக்கும்.

உழைக்கவேண்டியவர் உழைக்காமல் அல்லது தவறாகச் செயல்பட்டு நஷ்டத்தை
உண்டாக்கினால், முதல் போட்டவருக்கு அவர் முடக்கிய தொகையை கேள்வி
கேட்காமல் இவர் கொடுத்துவிடவேண்டும்.

முதலாளி திடீரென்று பண உதவியை நிறுத்தினாலோ, ஒப்பந்ததுக்கு மாறாக, போட்ட
பணத்தை உடனே திரும்பக் கேட்டாலோ, அல்லது ஒப்பந்தப்படி பணம் தர மறுத்தாலோ
நஷ்டம் ஏற்படலாம். அப்போது அந்த உழைப்பாளி இதே தொழிலை வேறு யாருடனாவது
ஒப்பந்தம் செய்துகொண்டு வெற்றிகரமாக நடத்தி இருந்தால் குறைந்தபட்சமாக
என்ன லாபம் பெற்றிருப்பாரோ அதை நிதியாளர் கட்டாயம் செலுத்தியாகவேண்டும்.

நிதியை முதலீடு செய்பவர் ராப்-உல்-மால் ( rabb-ul-maal.) என்று
அழைக்கப்படுவார். உழைப்பை முதலீடு செய்கிறவர் முதரிப் (mudarib)
எனப்படுகிறார்.

முதரபாவில் இரண்டு வகை உண்டு. நிதி கொடுக்கிற தொழில் பங்காளியான
ராப்-உல்-மால், அந்த நிதியைப் பயன்படுத்தி எந்தத் தொழில் செய்யவேண்டும்
என்று நிபந்தனை விதிக்கலாம். உழைக்கும் பங்காளி முதரிப் இந்த
நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். நிபந்தனையோடு கூடிய முதரபா என்ற
பொருள் தரும் ‘அல்-முதரபா அல்-முகய்யதா’ (al-mudarabah al-muqayyadah)
எனப்படும் இது.

நிதியாளர் எந்தத் தொழில் என்று நிபந்தனை விதிக்காதபோது, உழைக்கும்
பங்காளி அந்த முதலை நிதி மூலதனமாக வைத்து விரும்பிய தொழிலில் ஈடுபடலாம்.
இது நிபந்தனையற்ற முதரபா – ‘அல்-முதரபா அல்-முதலகா’ (al-mudarabah
al-mutalaqah) எனப்படும்.

இரண்டு பங்காளிகளில் யார் விரும்பினாலும் மேலே தொடராமல் முதரபாவை
விலக்கிக்கொள்ளலாம். ஒப்பந்த முறிவுக்கான முன்னறிவிப்புக் காலம், வழிமுறை
இரண்டும் ஒப்பந்தத்திலேயே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். அதைக்
கடைப்பிடித்து முதரபாவிலிருந்து விலகிக்கொள்ளத் தடை ஏதும் இல்லை.

எத்தனை வருடம் முதரபா செயல்படலாம் என்று ஒப்பந்தத்திலேயே இருப்பதும்
உண்டு. அதற்குப்பிறகு தானாகவே ஒப்பந்தம் ரத்தாகிவிடும். இது ஒரு பிரிவு
இஸ்லாமிய வங்கியியல் அறிஞர்களின் கருத்து. அப்படி அதிக பட்சக் காலத்தை
நிர்ணயிக்க முடியாது என்று இன்னொரு பகுதியினர் கருதுகிறார்கள். இருவரும்
ஒன்றுபடுவது ஒரு விஷயத்தில் – முதரபாவுக்கு குறைந்தபட்ச நடப்புக் காலம்
என்று எதையும் நிர்ணயம் செய்ய முடியாது.

இஸ்லாமிய வங்கியியலில் முதரபா இரண்டு கட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக, வங்கியில் பணம் போடுகிற வாடிக்கையாளர்கள் (depositor
customers) செலுத்திய பணம் வங்கியின் முதலீட்டுக் கணக்கில் (Investment
Account) வரவாகிறது. இந்த முதலீடு ஈட்டும் லாபத்தில் பங்குபெற அந்த
வாடிக்கையாளர்கள் உடன்படுகிறார்கள். முதலீட்டு நிதியைத் திறமையாக
நிர்வகிக்கும் ஒரு நிர்வாகியாக (Manager of funds) வங்கி செயல்படுகிறது.

முதரபாவின் இரண்டாவது கட்டம் வங்கியின் தொழில்முனைவர்களான
வாடிக்கையாளர்கள் (Entrepreneurial customers) பங்குபெறுவது. தொழில்
தெரியாமல் ஆர்வக் கோளாறு காரணமாக வெற்று உற்சாகத்தோடு
இப்படியானவர்களில் சிலர் நிதி உதவிக்காக வந்து நிற்கலாம். வங்கி, இவர்களை
ஜாக்கிரதையாக அலசி ஆராய்ந்து, வேண்டுமென்றால் நிராகரித்து, ‘தொழில்
கத்துக்கிட்டு வாங்கப்பா’ என்று அனுப்பி விடும்.

நிதித்துறை பரிபாஷையில் வட்டியை மூலதனத்தின் விலை (cost of capital)
என்பார்கள். இந்த வட்டி சர்வதேச, உள்நாட்டுப் பணச்சந்தை (money market)
நிலவரங்களால் தீர்மானிக்கப்படுகிறது.

வழமையான தொழில் கடன் வழங்கும் வங்கி, அந்தத் தொழிலில் என்ன லாபம்
வந்தாலும் இப்படிச் சந்தை நிர்ணயித்த அடிப்படையில் வட்டியை வசூலித்து
வருமானம் ஈட்டுகிறது. பெரும்பாலும் அது நிலையான வட்டி விகிதத்தில் (fixed
interest rate) இருக்கும். ‘மிதக்கும் வட்டி’யை (floating interest rate)
சாவகாசமாகப் பார்ப்போம்.

வட்டியை விலக்கிய இஸ்லாமிய வங்கியோ, முதரபா ஒப்பந்தம்மூலம் தகுதியான
தொழில் முனைவர்களுக்கு நிதி உதவி செய்து, லாபத்தில் கணிசமான பங்கை
அவர்களின் முழு ஒப்புதலோடு பெற்றுக்கொள்கிறது. வட்டி மூலம் பெறக்கூடிய
வருமானத்தைவிட இது அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

முதரபா போல் முக்கியமான இன்னொரு நிதி, உழைப்பு முதலீட்டு முறையான முஷாரகா
(Musharakah). இது என்ன என்று அடுத்து அறிமுகப்படுத்திக் கொள்வோம், இன்ஷா
அல்லாஹ்.


பாகம் 4

முஷாரகா  (Musharakah) என்னன்னு கேட்கறீங்களா? நிதி முதலீடு செஞ்சு
தொழில் நடத்தி லாபத்தைப் பங்கு பிரிச்சுக்கறது.

அட போப்பா, இதான் முதரபான்னு முன்னாடி சொன்னியே.

இல்லீங்க. ஒரு வித்தியாசம் இருக்குது. முதரபாவிலே, பேங்குக்காரங்க தான்
முழுசு முச்சூடும் காசு முதலீடு செய்வாங்க. நீங்க உங்க தெறமையை, ஒழைப்பை
முதலீடு செய்வீங்க. ரெண்டு பேரும் பங்காளி.

சரி முஷாரகாவிலே?

முஷாரகாவிலே ரெண்டுக்கு மேல்பட்ட பங்குதாரங்க இருக்கலாம்.
ஒவ்வொருத்தரும் ஆளுக்குக் கொஞ்சம் காசு கொண்டாந்து தொழில்லே
முடக்கணும்.

இது நாம இங்கனக்குள்ள செய்யறதுதானே.

கொஞ்சம் பொறுமையாத்தான் கேளுங்களேன். தொழில் தொடங்க முந்தி,  முதரபா
மாதிரியே, முஷாரகாவிலேயும் லாபத்தை என்ன விகிதத்திலே பங்கு
பிரிச்சுக்கலாம்கிறதை பங்காளிங்க முடிவு செய்வாங்க. இங்கே கவனிக்க
வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு.

‘என்ன பெரிசா சொல்லப்போறே. நானு ஒரு லட்சம் ரூபாய் முதல்
போட்டிருக்கேன். நீ  ஐம்பதாயிரம் போட்டிருக்கே. தம்பி இன்னொரு
ஐம்பதாயிரம் போட்டிருக்காரு. ஆக, என் பங்கு 50%, உன் பங்கு 25%, தம்பி
இன்னொரு 25%. லாபம் வந்துச்சுன்னா, வராம விட்டுடுவோமா என்ன, வந்துடும்
மாப்ளே.. வந்ததும் இதே விகிதத்திலே அதை பங்கு பிரிச்சுக்குவோம்,
சரிதானே?’

சரிதான் ஆனா சரியில்லை.

என்னத்தக் கன்னையா மாதிரி சொல்றியேப்பா.

லாபம் வந்துச்சுன்னா அதை என்ன விகிதத்தில் பங்கு போட்டுக்கலாம்
என்கிறதுக்கு முதலீட்டு விகிதம் அடிப்படையா இருக்கணும்னு கட்டாயம் இல்லே.
அது வேறே விகிதத்திலே கூட இருக்கலாம்.

சரி வேணாம் மாப்ளே, அமோகமாத் தொழில் நடத்தி, எனக்கு மாசா மாசம்
ஐயாயிரம் ரூபா கொடுத்திடு. அதுக்கு மேலே ஒரு காசு வேணாம்.

இது சரியில்லே. இம்புட்டுப் பணம் எனக்குத் திருப்பி வரணும்னு
முன்கூட்டியே முடிவு பண்ணி ஒப்பந்தம் போட்டுக்க முடியாது. அதான்
சொன்னேனே, வர்ற லாபத்தை வச்சுத்தான் பங்கு பிரிச்சுக்கறது அமையணும்.
மத்த எதுவும் சரிப்படாது.

லாபம் சரி, நஷ்டம் வந்துச்சுன்னா? போகுது போ. லாபத்தை பங்கு வைச்சுக்க
என்ன விகிதமோ அதே படிக்கு நட்டத்தையும் சுமந்துப்போம். ஆண்டவன்
கைவிட்டுடுவாரா என்ன?

நிச்சயம் மாட்டார். இது ஷரியா படி சரிதான்.

ஏம்பா, என்னாலே காசு தரமுடியும். ஆனா, நானும் உன் கூட வந்து ஒர்க்
ஷாப்புலே ஸ்பானர் பிடிச்சு வேலை பார்க்கணும்னா முடியாதே. குத்த வச்சா
வவுத்துலே வலிக்குது எளவு. வாயுப் பிடிப்பு.

முடக்கத்தான் கீரை கறி வெச்சுச் சாப்பிடுங்க, வாயுப் பிடிப்பு எல்லாம்
துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடிடும். இல்லாட்டாலும் முஷாரகாவிலே
எல்லா பங்காளிங்களும் தொழில்லே ஈடுபடணும்னு கட்டாயம் ஒண்ணும் இல்லே.
நிதியை மட்டும் முதலீடு செஞ்சுட்டு அக்கடான்னு இருக்கலாம். sleeping
partner. என்ன, லாபத்தில் குறைந்த பட்ச விகிதம் தான் அப்போ உங்களுக்கு
வரும். நிச்சயம் உங்க முதலீட்டு விகிதத்துக்கு குறைஞ்சதா இருக்காது அது.

சரி, முஷாரகாவிலே பேங்குக்காரங்க எப்படி உள்ளாற புகுந்தாங்க?

ஏழெட்டு பங்காளியிலே அவங்களும் ஒரு பங்காளி. அம்புட்டுத்தான்.
பேங்குக்காரங்க மொத்தமா இருக்கப்பட்ட நிதியை நாலஞ்சு முதரபாவிலே
முடக்காம, சின்னதும் பெரிசுமா நூறு முஷாரகாவிலே முடக்கினா நிறையப் பேர்
முன்னேறி வர முடியுமில்லியா?

முஷாரகா கூட்டணி எம்புட்டு நாள் வச்ச்சிருக்கலாம்னு ஷரியாவிலே ஏதாச்சும்
சொல்லி இருக்கா?

அப்படி கால அளவுல்லாம் கிடையாதுங்க. வருஷக் கணக்கா நிதானமா நடத்தி
லாபத்துக்கு மேலே லாபம் பார்க்கிற ஸ்டடியான முஷாரகா – permanent
musharakah ஒரு வகை. வருஷா வருஷம் லாபத்தோட கூட, முதலீட்டிலே இருந்தும்
லாபத்தைப் பொறுத்து திரும்ப வாங்கிக்கிட்டு சீக்கிரம் கூட்டணியை கலாஸ்
பண்ணிக்கற diminishing musharakah இன்னொரு வகை.

நாலு பேர் கூட்டு முயற்சியிலே முஷாரகா ஏற்படுத்தி ரெண்டு வருஷம்
நடக்குது. அஞ்சாவதா ஒருத்தர் நானும் புதுசா கூட்டு சேரட்டுமான்னு
கேட்கறார். ஷரியா என்ன சொல்லுது? அவரையும் ஆட்டத்துலே சேர்த்துக்கலாமா?

தாராளமா சேர்த்துக்கலாம். இருக்கப்பட்ட எல்லா பங்குதாரங்களும் முழு
மனசோடு ஒப்புக்கிட்டா போதும்.

லாபத்தை பங்கு போடறது பத்தி சொன்னே. அதெல்லாம் சரிதான். நாலுலே ஒரு
பாகஸ்தர் நாள் முச்சூடும் உழைக்கறார். மத்தவங்க அப்பப்ப கௌரவ நடிகர்
மாதிரி வந்து போறாங்க. மெயின் ஆக்டருக்கு எக்ஸ்ட்ராவா சம்பளம்,
பேட்டான்னு ஏதாச்சும் அதிக வருமானம் வருமா?

கிடைக்க வழி இருக்கு. முஷாரகா ஒப்பந்தம் போடும்போதே இந்த விஷயத்தையும்
அதில் போட்டு வச்சுக்கணும். அவ்வளவுதான்.

எல்லா முஷாரகா ஒப்பந்தமும் எந்திரன் கடைசியிலே  ஏகப்பட்ட  ரஜனி வருவாரே,
அது மாதிரி அச்சு அசலா ஒரே போலதானே?

இங்கே மூணு விதம் இருக்குங்க. நாம் இதுவரை சொல்லிட்டு வந்தோமே, பொதுவா
நடப்பிலே இருக்கற இதை ஷிர்கத் உல் அம்வல் முஷாரகா Shirkat-ul-amwal
அப்படீன்னு சொல்வாங்க. நாலஞ்சு பேர் முதலீடு செஞ்சு கம்ப்யூட்டர், டிவி,
வாஷிங் மிஷின் ரிப்பேர் செய்யற சர்வீசிங் தொழில் நடத்தறாங்கன்னு
வச்சுக்குங்க. ஒவ்வொரு முறை இப்படி சர்வீஸ் செஞ்சு கிடைக்கற ஃபீஸை
ஒப்பந்த விகிதத்துலே பங்கு பிரிச்சுக்கறது ஷிர்கத் உல் அமல் முஷாரகா
Shirkat-ul-Amal . நிதி முதலீடு இல்லாம வேறே யாரோ உற்பத்தி செஞ்ச
பொருளை வித்துக் கொடுக்கற கமிஷன் ஏஜன்சி நடத்தி, வரவை பங்கு போடறது
ஷிர்கத் உல் ஊஜா Shirkat-ul-wujooh.

முஷாரகா கூட்டணியிலே இருந்து வெளியே வரணும்னா?

ஏங்க, இதென்ன தேர்தல் கூட்டணியா, நினைச்ச போது வெளியே வர்றதுக்கும்
உள்ளே போறதுக்கும். முன்னறிவிப்போட, மத்த பார்ட்னர்களுக்குப் போதுமான
அவகாசம் கொடுத்து அப்புறம் வெளியே வர வழி இருக்கு. வெளியே வர்றவரோட
பங்கை அவர் போட்ட முதலுக்கு மேலே கொடுத்தோ குறைச்சுக் கொடுத்தோ
மத்தவங்க வாங்கிக்கலாம். இல்லே, முஷாரகாவையே முடிவுக்குக் கொண்டு
வரலாம். பொதுவா கோடி கோடியா நிதி முடக்கி தொடங்கின தொழில்லே
திடீர்னு ஒருத்தர் அம்போன்னு விட்டுட்டுப் போனா கஷ்டமாச்சே. அதுக்காக
ஒப்பந்தம் போடற போதே இதைப் பத்தி யோசிச்சு, விலகறது எப்படீன்னு
பதிஞ்சு வச்சுக்கிட்டா பிரச்சனை இல்லே.

யாராவது ஒரு பாகஸ்தர் திடீர்னு மூச்சு விட மறந்து போய்ட்டார்னா?

இதுவும் பிரச்சனை இல்லே. அவரோட வாரிசுகள் கூட்டணியை தொடரலாம். இல்லே
அவங்களுக்கு உண்டான தொகையை வாங்கிக்கிட்டு வெளியே வரலாம்.

மத்தபடிக்கு முஷாரகா அதும்பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும் போல.

ஆமா. ஒரு சின்ன விஷயம். யாராவது ஒரு பார்ட்னர் திடீர்னு மனநோய் கண்டு
சுத்தி இருக்கறது, நடக்கறது யார் என்னன்னே தெரியாத அளவு பரிதாபமா
ஆகிட்டார்னா, முஷாரகா நின்னு போயிடும்.

இன்ஷா அல்லாஹ், நமக்கு அப்படி எதுவும் நடக்காது. வாங்க, காய்கறி, கடல்
வாழைக்காய் ஹோல்சேல் பிசினஸ் நடத்த ஒரு முஷாரகா ஆரம்பிக்கலாம்.

இருப்பா. வீட்டுலே காய்வெட்டா ரெண்டு கிலோ தக்காளி வாங்கிட்டு வரச்
சொன்னா. வாங்கிக் கொடுத்துட்டு மீதிக் காசு தேறிச்சுன்னா வரேன்.

அத்தியாயம் 5

முஷாரகா, முதரபா இப்படி இஸ்லாமிய வங்கியியல் படியான ரெண்டு நிதியளிப்பு
பற்றிப் பார்த்தோம். இந்த ரெண்டும் முதலீட்டு அடிப்படை (equity
financing). இதோட கூட  கொள்முதல் செஞ்சு கொடுத்து சம்பாதிக்கறது (debt
financing)  பற்றியும் தெரிஞ்சுக்கறது அவசியம்னேன்.

இது இஸ்லாமிய பேங்கு சம்பந்தப்பட்டதுதானே.

ஏம்ப்பா, நல்லவன் வாழ்வான்னு சினிமா வந்துச்சுன்னா, திரையிலே பத்து
நிமிசத்துக்கு ஒருமுறை யாராச்சும் டைட்டிலைச் சொல்லிக்கிட்டு குறுக்கும்
நெடுக்கும் போகணும்னு எதிர்பார்ப்பியா என்ன? நான் இம்புட்டு நேரம்
உன்னியக் கூப்பிட்டு வச்சுச் சொல்லிட்டு இருக்கறது எல்லாம் இஸ்லாமிய
வங்கி பற்றித்தான்.

முறுக்கிக்காதீங்க மாப்ளே. நமக்குக் கொஞ்சம் ஆர்வக் கோளாறு. ஆமா, என்ன
சொன்னீங்க, சரக்கு கொள்முதல் செஞ்சு வித்து காசு பாக்கறதுன்னுதானே. அதான்
எனக்குத் தெரியுமே. நம்மூர் மயிலஞ்சந்தையிலே மண்டிக்கடை  பெரியப்பு
செய்வாகளே. ப்பூ இம்புட்டுத்தானா இஸ்லாம் பேங்கு? சரி மேலே சொல்லுங்க.

அதான் உனக்குத் தெரியும்னே. அப்புறம் என்ன ம-வுக்கு மேலே சொல்றதாம்?

சும்மா கேட்டுக்கிட்டே திண்ணையிலே உக்காந்து குரல் விடலாம் இல்லே.
இஸ்லாம்னு யாராச்சும் ஆரம்பிச்சாலே கசாப்பையும் பின் லாடனையும்
நினைச்சுக்கணும். சடசடன்னு உதார் விடணும். அதானே சபையிலே எடுபடும்?

போவுது. நான் ஆரம்பிச்சா முடிச்சுட்டுத்தான் நிறுத்துவேன். என்ன
சொல்லிட்டு இருந்தேன்?

கொள்முதல்னு ஆரம்பிச்சீங்க.

கவனிச்சுக் கேளு. கொள்முதல் மூலம் பேங்கு கொடுக்கற நிதி உதவிக்கு முராபஹா
(Murabahah)ன்னு  பேரு. சந்தைச் சரக்கு முராபஹா (commodity
murabahah)ம்பாக இதைப் பொதுவா. ஆமா, மண்டிக்கடை பெரியப்புவை இளுத்தியே,
அவுககிட்டே உன் யாவாரம் எப்படி?

முழு முத்தலா ரெண்டு மூடை கத்தரிக்காயைக் கொள்முதல் செஞ்சு வச்சுப்பாரு.
நம்ம தலை தட்டுப்பட்டதும் வெள்ளச்சி மவனே வாடா, உனக்காக ரேட்டுப் படிய
வச்சு பச்சு பச்சுன்னு சாளூர் பிஞ்சுக் கத்தரிக்கா வாங்கி
வச்சிருக்கேண்டா. எடுத்துப் போய் நல்ல லாபம் வச்சு வித்துட்டு இன்னிக்கு
ஆயிரம் நாளைக்கு மிச்ச ஆயிரம் கட்டு. நான் உன் கிட்டே தண்ட வட்டி எல்லாம்
கேட்கலே. பெரியப்புவாச்சேன்னு இக்பால் கடையிலே பரோட்டா சால்னா வாங்கிக்
கொடுக்க மாட்டியா என்ன? அப்படியே நூத்துக்கு பத்து ரூபா, வேணாம் ஒம்பது
வட்டி கொடுத்திடணும்.  இதான் அவுக போடற கண்டீசனு.

அரமணை வாசல் இக்பால் கடையிலே பரோட்டா திங்கற போதாவது அவுக என்ன விலைக்கு
வாங்கினாகன்னு பெரியப்பு சொல்லுவாகளா உங்கிட்டே?

அதெப்படி மாப்ளே. அது தொழில் ரகசியம் ஆச்சே.

முராபஹாவிலே இதுக்கு நேர் மாறு. இன்ன விலைக்கு வாங்கினேன்’பா. இம்புட்டு
அதிகம் வச்சு விக்கறேன் உங்கிட்டே. உடனே  தரவேணாம். தவணை முறையிலே
கொடுத்தாலும் சரிதான்னு முதல்லேயே தொறந்து ஓப்பனா சொல்லிடணும்.

அட, இது புதுசா இல்லே இருக்கு.

அதான் உனக்குத் தெரிஞ்ச விசயம்தானே.

நக்கல் பண்ணாதீக மாப்ளே. ஆமா, என்ன பேரு சொன்னீக, இஞ்சி முரப்பாவா?

முராபஹா. இஸ்லாமிய பேங்குகள் உலக முச்சூடும் பெரிய அளவிலே பயன்படுத்தற
கடன் வழங்கு முறை இது. டெலிவிஷன் பெட்டி வாங்க பேங்கு கடன் வேணுமா?
கம்ப்யூட்டர் வாங்கணுமா?

என்ன உலகத்துலே இருக்கீக மாப்ளே. டெலிவிஷன் பெட்டி எல்லாம் இலவசமா
சர்க்கார் இல்லே தரணும். கம்ப்யூட்டரும் வேணாம். எலக்-ஷன் வந்துட்டு
இருக்கே.

சரி, ஏற்றுமதி   வர்த்தகம் பண்றீங்கன்னு வச்சுக்கலாம்.

தமிழ்லே சொல்லுங்க மாப்ளே.

எக்ஸ்போர்ட். தால்சா எக்ஸ்போர்ட். ரெண்டு மாசம் டப்பாவிலே அடைச்சு
வச்சாலும் கெட்டுப் போகாம, மைக்ரோ அவன்லே சூடாக்கினதும் கமகமன்னு மசாலா
மணத்துக்கிட்டு பசியைக் கிளறி விடற பருப்பு-மட்டன் சோறு.

நம்ம கூத்தாநல்லூர் சாபு அண்ணன் கிட்டே தால்சா ரெசிபி வாங்கி தூள்
கிளப்பிடலாம். ஆமா, எக்ஸ்போர்ட் தொழில்னு ஆரம்பிச்சா அதை உற்பத்தி செய்ய
மூலப்பொருள் வேணுமே. நம்ம கேசிலே பருப்பு, நல்ல மட்டன், பட்ட மொளகா, நயம்
நெய், எண்ணெய் எல்லாம் அப்பப்ப வாங்கணும். காசு வேண்டி வரும் அதுக்கு.

பேங்குலே எக்ஸ்போர்ட் கடன் வாங்கிக்கலாம். மேல்நாட்டு ஆர்டர் கைமேல்
இருந்தா, ஏற்றுமதி முன்கடன் அதான் Pre-shipment loan தருவாங்க.

அது சரி, நம்ம பேங்குலே போய் நின்னு.

வேணாம். சர்க்காரையும் சர்க்கார் பேங்கையும் பழிக்காதே. தேசத்
துரோகின்னுடுவாங்க. யாரையும் ஒப்பிடாம பேசினோமா போனோமான்னு இருக்கலாம்.
என்ன சொல்ல வந்தேன், எக்ஸ்போர்ட் ப்ரீ ஷிப்மெண்ட் கிரடிட்.  முராபஹாவிலே
இதை எப்படிச் கையாளறது தெரியுமா?

சொன்னாத்தானே தெரியும்?

முராபஹாவிலே இதைச் செய்யணும்னா, பேங்குலே போய் நீ யார் யார் கிட்டே
உனக்கான கச்சாப் பொருளை வாங்கினா நல்லா இருக்கும், என்ன விலை நிலவரம்னு
தகவல் கொடுத்துடுவே. பேங்கும் உன் சார்பிலே தேடிக் கண்டுபிடிக்கலாம்.
வேண்டியதை எல்லாம் அவங்க கொள்முதல் செஞ்சிடுவாங்க.

பொறகு?

உன்னை ஒரு நடை வந்துட்டுப் போகச் சொல்வாக பேங்குக்காரவுக. என்ன விலைக்கு
எதை வாங்கினதுங்கற விவரத்தை பொறுமையாச் சொல்லிட்டு, இந்த விலைக்கு
வாங்கினது, இதைக் கொள்முதல் செய்ய, லாரியிலே கொண்டு வர, பனிக்கட்டியிலே
பத்திரமா வைக்க இன்னின்ன செலவு, உங்க கிட்டே நான் இதுக்குக் கூடுதலா
இந்தத் தொகையை வாங்கிக்கப் போறேன். ஆகக்கூடி என் லாபம் இதான்னு பேங்கு
உங்க கிட்டே சொல்லிடும். அடக்க விலையை நேர்மையா அறிவிச்சு (honest
declaration of cost price), இதுலே லாபமா இவ்வளவு வைக்கப் போறேன்னு
அறிவிக்கற  கடமை முராபஹாவிலே உண்டு.

ஓஹோ.  இது மட்டும் இஸ்லாமிய வங்கி இல்லேன்னா அட்டகாசமா ஆஹா’ங்கலாம்.

கடனை அடச்சு முடியற வரை கொள்முதல் செய்து கொடுத்த மூலப் பொருள்களோட உரிமை
பேங்குக்கு இருக்கும். இது  உன் சார்பிலே பொருளை வாங்கிப் பாதுகாப்பா
உனக்கு விற்கறது. பயு-அல்-அமனா bayu-al-amanah (fiduciary sale).
வாங்கின விலைக்கே வித்துச்சுன்னா அது தவ்லியா tawliyah (sale at cost).
வாங்கின விலைக்குக் குறைவா வித்தா, அது வடியா wadiah (sale at specified
loss).  தவ்லியாவும், வடியாவும் வங்கித் தொழில்லே அபூர்வம்தான்.

புரியுது மாப்ளே. பேங்கும் வியாபாரத்துலே நாலு காசு பார்க்க வேணாமா?

முதரபா, முஷாரகா மாதிரி இங்கே பேங்க் ரிஸ்க் எடுக்கறதுக்கு, அதாம்பா,
தொழில் சக்சஸ் ஆகுமாங்கிற சவாலை சந்திக்கற தேவை எல்லாம் இல்லை. அங்கே
அந்த ரிஸ்க் இருந்தும் முதலீடு செஞ்சதாலே லாபத்திலே இத்தனை சதவிகிதம்
எனக்குன்னு உரிமையோட ஒப்பந்தம் போட்டுக்கலாம். முராபஹாவிலே ரிஸ்க்
கிடையாது. கொள்முதல் விலைக்கு மேலே இம்புட்டு ஏத்தி வச்சிருக்கு,
தர்றீங்களான்னு கேட்டு ஒப்பந்தம் போடணும். அதுக்கும் மேலே ஏகப்பட்ட லாபம்
கொட்டோ கொட்டோன்னு கொட்டினாலும், கஸ்டமருக்குத்தான் ஆதாயம். பேங்குக்கு
ஒப்பந்தப்படியான ஒரே தொகைதான் கிடைக்கும் (fixed income). ஆனா அது
தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும் (steady stream of income).

சரி மாப்ளே, பேங்கு வாங்கி எனக்கு வித்துடுது. நான் மாசாமாசம் பணம் கட்ட
கொஞ்சம் சுணங்கிடுத்துன்னா? வீட்டுக்குப் போனாத்தான் ஆயிரத்தெட்டு செலவு
தலைமுடியை சிடுக்கு வாரிக்கிட்டு எப்படா வருவான்னு காத்துக் கிடக்கே?

தாமதமா தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்தினா அபராதத் தொகை வாங்க
பேங்குக்கு அதிகாரம் உண்டு. அட போய்யா, நம்ம ஊரு தண்ட வட்டி தானேன்னு
உடனே ஆரம்பிச்சுடாதே. இது கொஞ்சம் வித்தியாசம். அபராதத் தொகையை பேங்கு
தன்னோட லாபக் கணக்குலே சேர்த்துக்க முடியாது. ஏதாவது நல்ல காரியத்துக்கு
செலவழிச்சே ஆகணும்னு ஷரியா சொல்லுது. அபராதத் தொகையை பேங்குலே
செலுத்தக்கூட வேணாம். கஸ்டமரே அங்கீகரிக்கப்ப்பட்ட தான தர்மத்துக்கு மொய்
எழுதிட்டு ரசீதைக் கொணாந்து காண்பிச்சா போதும்.

முராபஹாவிலே முக்கியமான அம்சம்னு வேறே எதைச் சொல்வீக மாப்ளே?

முக்கியம்னா, அச்சு அசலா பொருளை கொள்முதல் செஞ்சு அதில் லாபம் வச்சு
விக்கற காரியத்தை பேங்க் செய்யணும். பொருளே இல்லாம வெறும் கையை முழம்
போட்டு காசு காரியத்தைக் கணக்குப் பண்ணி யாவாரம் செய்ய முடியாது. சில
இஸ்லாமிய பேங்குகள்   பிசினஸ் பிடிக்கறதுக்காக இப்படி டம்மி முராபஹா
செய்யறது உண்டு. அந்தந்த அரசாங்கத்துலே, இல்லேன்னா, கவனமா இருக்கற
கஸ்டமர்களாலே இது கண்டு பிடிக்கப்பட்டு சீர்திருத்தப்படறதும் உண்டு.
எங்கேயோ ஒண்ணு ரெண்டு இந்த மாதிரி போலியான கணக்கு வழக்கு நடந்துச்சுன்னு
சொன்னா, முழு இஸ்லாமிய வங்கியும் இப்படித்தான் ப்ராடு பசங்கன்னு
சொல்லிட்டு மகாமேதை போல போறவங்களும் உண்டுதான்.

அவங்க எங்கேயும் தான் இருப்பாங்க மாப்ளே. ஆமா, ஒரு சந்தேகம். வீடு கட்ட,
கட்டின வீட்டை வாங்க இப்படியான உருப்படியான காரியத்துக்கு, இங்கே எல்லாம்
வாங்கற வீட்டையே அடமானம் வச்சு ஹவுசிங் லோன் போடுவோமே. இஸ்லாமிய பேங்குலே
அதுல்லாம் உண்டா?

இஸ்லாமிய பேங்குலே அடமானம் (mortgage) கிடையாது. பதிலா எல்ஜாரா (EIjara
wa Eiqtin). பேங்கு வீட்டைத் தன் பெயர்லே வாங்கி, அப்புறம் உனக்குக்
குடிபோகக் கொடுத்து, தவணை முறையிலே நீ கடன் அடச்சு முடிச்சதும் வீட்டை
உன் பெயருக்கு மாத்தும். இப்படி, ரெண்டு தடவை வீட்டோட உரிமையை மாற்ற
டாக்குமெண்ட் போட்டு, ரெண்டு தடவை ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டிப் போகும்.
அதுக்குக் கொஞ்சம் செலவு பிடிக்கும் தான்.

வேறே எதுக்கெல்லாம் எல்ஜாரா பிரயோஜனப்படும்னு சொல்லுங்க மாப்ளே.

எல்ஜாரா மோட்டார் பைக், கார் வாங்க,   பொருள் வாங்கி உபயோகிச்சுட்டு
அப்புறம் இஷ்டப்பட்டா அதை அப்போதைக்கு கிடைக்கக்கூடிய விலை கொடுத்து
வாங்க, வேணாம்னா திரும்ப எடுத்துட்டுப் போகச் சொல்றதுக்கு வசதி.

லீஸ் அக்ரிமெண்ட் போடறதா மாப்ளே?

ஆமா, இதுக்கும் எல்ஜாரா தான் பொதுவா உபயோகிக்கறது. சரி, பாய் சலாம்.

சலாம் பாய். போய்ட்டு அப்புறம் வாங்கிறீங்களா? வீட்டுலே தால்சா
செஞ்சிருக்காகளா தங்கச்சி?

அது இல்லேப்பா, இதுவும் இஸ்லாமிய வங்கியியல்லே வர்ற சங்கதிதான். Bai
Salam.  என்னன்னு அப்புறமா பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

அத்தியாயம் 6

என்ன மாப்ளே ஏகத்துக்கு ரோசனையோட நடந்து போய்ட்டு இருக்கீக? ஒண்ணே
முக்கால் லட்சம் கோடிக்கு எத்தனை முட்டை  வாங்கி ஆப்பாயில் போடலாம்னா?

அட ஏன்’பா, வகுத்தெரிச்சலைக் கிளப்பறே. நம்மளைத்தான் கூமுட்டை
ஆக்கிட்டானுகளே அம்புட்டு மகராசாக்களும் சேர்ந்து. போகுது போ. எந்தக் கதை
கந்தலானா என்ன, நம்ம கதையைக் கவனிப்போம். பாய் சலாம் பத்திச் சொன்னேனே,
நியாபகம் வச்சிருக்கியா?

எங்கே சொன்னீக? சொல்ல ஆரம்பிச்சபோது வவுத்துலே மணி அடிச்சுடுத்து.
ஏறக்கட்டி வச்சுட்டு பெறகு சொல்றேன்னு எறங்கி இல்லே போய்ட்டீக. சரி, இப்ப
வேளை வந்திருக்காப்பல. எடுத்து விடறது.

பாய் சலாம், சரியாச் சொன்னா பே-அல்-சலாம் (bay al-salam)  இருக்குதே,
சமாசாரம் இதான்னு கோடி காட்டலாம்தான். நீ உடனே பேங்குக்குக்கும்
இதுக்கும் என்னய்யா சம்பந்தம்னு சாடுவே. சந்தைக்கடை யாவாரத்துலே ரெகுலரா
செய்யறதை பேங்குக்குள்ளாற நொளச்சு என்னாத்துக்கு லோல்படணும்னு தோணும்.
இதுக்கு கொஞ்சம் போல முராபஹா சாயலும் உண்டு.

தாடியை ஒட்டி வாத்தியார் படத்துலே டபுள் ஆக்ட் கொடுத்த மாதிரி
முராபஹாவுக்கு அங்கே இங்கே டச் அப் பண்ணி விட்டா பே-அல்-சலாம், சரியா?

அப்படி இல்லே. முராபஹாவுலே அட்வான்ஸ் எல்லாம் கட்ட வேணாம். வாங்கற விலை,
விக்கற விலை, லாபக் கணக்கை சொல்லணும். பே சலாம்லே இது கிடையாது. இங்கே
பொருளை வாங்கப் போறவர் விற்கப் போறவரோட முன் கூட்டியே ஒப்பந்தம்
போட்டுப்பார். அதிலே தெளிவா என்ன பொருள், தரம் எப்படி இருக்கணும்,
என்னிக்குக் கையிலே வரணும், எங்கே வச்சு டெலிவரி தரணும் இப்படி எல்லா
விவரமும், அதோட கூட ஒப்பந்தத் தொகையும் குறிச்சிருக்கும். பொருளோட
மதிப்பையும் வாங்கறவர் முன் கூட்டியே முழுசாக் கொடுத்துடணும்.

ஒண்ணும் புரியலே மாப்ளே.

சரி, நீ  கோழி முட்டை சப்ளையர். எனக்கு பெரிய அளவுலே முட்டை கொள்முதல்
செய்ய வேண்டி வந்திருக்கு. நான் உங்கிட்டே சொல்றேன் – பத்தாயிரம் முட்டை,
அதிலே அஞ்சாயிரம் ஒயிட் லெக்கான், மீதி நாட்டுக் கோழி முட்டை. சந்தடி
சாக்குலே வாத்து முட்டையை கலந்துடக் கூடாது. புதுசா இட்டதா, கெட்டுப்போன
முட்டை குறைஞ்சதா இருக்கணும். நீயா முட்டை போடறியோ, அட ஒரு பேச்சுக்குச்
சொன்னேம்பா. நீயா கோழி வளர்த்து முட்டை போட வச்சுத் தர்றியோ, இல்லே
வெளியிலே வாங்கித் தர்றியோ, எனக்குப் பிரச்சனை இல்லை. அப்படியே வெளியே
வாங்கித் தந்தாலும் இந்த விலைக்கு வாங்கறேன்னு எல்லாம் என்கிட்டே நீ
விவரம் சொல்ல வேணாம். அடுத்த மாசம் பத்தாம் தேதி காலையிலே அத்தனை
முட்டையும் என் வீட்டுலே டெலிவரி கொடுத்துடணும். நாள் தவறக் கூடாது.
பத்தாயிரம் கோழி முட்டைக்கான முழுத் தொகையா முப்பதாயிரம் ரூபாய்,  உனக்கு
இப்பவே அட்வான்ஸா கொடுக்க ரெடி. சம்மதமா? ஸ்டாம்ப் பேப்பரை கொண்டு வா.
அக்ரிமெண்ட் போட்டுப்போம்.  இல்லியா? நடையைக் கட்டு.

பிரியுது மாப்ளே. சாதாரண யாபார நடைமுறையிலே பே சலாம் எங்கிட்டு உபயோகமாகுது?

பொருளை கொள்முதல் செய்யறது தவிர வீடு கட்டறது, கிணறு வெட்டறது இப்படி
சர்வீஸ்   காண்ட்ராக்ட் போடவும் இது முக்கியமா பிரயோஜனப்படும்.
பே-அல்-சலாம்லே பேங்கு எப்படி வர்றதுன்னு அடுத்தாப்பலே கேப்பியே?

பின்னே, கேட்காம இருப்பேனா?

சீவல்பட்டி கிழக்காலே, முத்துப்பட்டி மேற்காலே, ராகினிப்பட்டி
வடக்காலேன்னு நீ கைக்குட்டை சைசுக்கு எட்டுப் பட்டியிலும் நிலம் வாங்கிப்
போட்டு சாகுபடி செஞ்சு வச்சிருக்கியே. அந்த அறுவடையை எல்லாம் அரசாங்கம்
கொள்முதல் செய்யப் போறதுன்னு வச்சுக்க. உன் கிட்டே இருந்து மட்டும்
இல்லை. நம்ம புஞ்சைக்காட்டு விவசாயிங்க அத்தனை பேர் கிட்டே இருந்தும்
மொத்தக் கொள்முதல்.

செஞ்சா, அடுத்த எலக்சன்லே காசே வாங்காம இவுகளுக்கே ஓட்டு போட்டுடுவமில்லே.

அப்ப இத்தனை நாளா வாங்கிட்டா ஓட்டு போடறே?

ரெண்டு மூணு பேர் வந்து வற்புறுத்திக்  கொடுத்தா ஒரு மரியாதைக்கு வாங்கி
வச்சுக்கறதுதான். நமக்கு வேலை வைக்காம ஓட்டை வேறே  யாராவது போடறதுதான்.
நாம எலக்சன் அன்னிக்கு கேபிள் டிவியிலே நாலு படம் பார்த்துட்டு ஆறுமுகம்
கடை அல்வா வாங்கித் தின்னுட்டுத் தூங்கறதுதான்.

திருத்தவே முடியாதுய்யா உன்னிய. தொலையுது. என்ன சொல்லிட்டு வந்தேன்?

ஒயிட் லக்கான் முட்டை.

அதைக் கடந்து வரமாட்டே பாத்தியா. விவசாயக் கொள்முதல் பத்தி இல்லே
பேசிட்டு இருந்தோம்.

ஆமா மாப்ளே. ஆனா, அரசாங்கம் விவசாயிகளுக்கு விதை வாங்கறது, உரம்
வாங்கறது, நாத்து நடற கூலி இப்படி எல்லாத்துக்கும் ஆளுக்கு, பயிருக்குத்
தகுந்த மாதிரி அட்வான்ஸ் தொகை கொடுத்தா இல்லே விவசாய வேலை மளமளன்னு
நடக்கும்?

அரசாங்கம் தயார்தான். ஆனா, இதையெல்லாம் செய்ய அவுக கிட்டே ஆள் அம்பு இல்லையே.

ஆமாமா, கெசெட்டட் ஆபீசர்னு போர்ட் வைச்சுக்கிட்டு இருக்கறவகளுக்கு
எல்லாம் எம்.எல்.ஏ, மினிஸ்டர் பின்னாடி ஜீப்பைப் போட்டுக்கிட்டு ஓடவே
நேரம் சரியா இருக்கு. சரியா ஒண்ணுக்கிருக்கக் கூட நேரம்
கிடைக்கறதில்லியாமே.

ஜிப்பைப் போட்டுக்கிட்டு ஓடறாகளோ, ஜீப்பைப் போட்டுக்கிட்டு ஓடறாகளோ,
அவுகளை விடு. பேங்குக்கு வா. பேங்குலே நீ, நான், நம்ம அத்தாச்சி மகன்,
அவனுக்கு அடுத்த வீட்டுக்காரன் இப்படி அத்தனை பயபுள்ளைகளும் கணக்கு
வச்சிருக்கோமே. சர்க்காருக்கு இது சவுகரியம் இல்லியா?

எப்படி மாப்ளே?

அரசாங்கம் பேங்கோடு ஒரு பே சலாம் ஒப்பந்தம் போட்டுக்கும். இத்தனை
க்விண்டால் இந்தப் பயிர், இந்த ஈரப்பதத்துலே இன்ன தேதிக்கு சர்க்கார்
கோடவுண்லே இங்கன கொணாந்து சேர்த்திடணும்னு. பணத்தை மொத்தமா அட்வான்சா
பேங்குலே அடச்சுடும்.

பேங்கு என்னிய மாதிரி விவசாயிகளோடு தனித்தனிய பே சலாம் போட்டுக்கிட்டு
பணத்தைப் பட்டுவாடா பண்ணிடும். அறுவடையான உடனே மகசூலை நேரே அரசாங்க
கோடவுணுக்கு அனுப்பிட்டா கதை மங்களமா முடிஞ்சிடும். அதானே?

தேறிட்டே போ நீ. உனக்கு இனிமே பாடம் சொல்ல அவசியமே இல்லே.

ஏதோ கொஞ்சம் புரிய ஆரம்பிச்சிருக்கு மாப்ளே.  ஆமா, பே சலாம்லே முழுத்
தொகையையும் கஸ்டமர் அட்வான்சாக் கட்டிடணும்னு சொன்னீங்களே. பொருளை
வாங்கிட்டு, மாசத் தவணையிலே பணம் கட்ட முடியாதா?

ஷரியா படிக்கு, அது பே சலாம் ஆகாது. முழு அட்வான்ஸ், சொன்ன தரத்துலே,
சொன்ன இடத்துலே சொன்ன தேதிக்கு டெலிவரி (future delivery). இது தான் பே
சலாமுக்கு அடிப்படை. ஆகவே, தவணை முறையிலே கஸ்டமர் பணம் கட்டணும்னா,
பொருளை உற்பத்தி செய்யற சப்ளையரோடு பேங்க் ஒரு பே-சலாம் காண்ட்ராக்ட்
போட்டுக்கும். வாங்கற கஸ்டமரோடு ஒரு முராபஹா போட்டுக்கும். பிரச்சனை
தீர்ந்தது.

எல்லாப் பொருளையும் விற்க, வாங்க நிதி உதவி செய்ய பே சலாம் போட்டுக்கலாமா?

தங்கம், வெள்ளி, வைரம் இப்படி விலையுயர்ந்த, உடனே டெலிவரி செய்யக் கூடிய
பொருட்களுக்கு (spot delivery) பே சலாம் போட முடியாது. நாணய
மாற்றும்பாங்களே currency exchange. அதான்பா, அமெரிக்க டாலரைக்
கொடுத்திட்டு பிரிட்டீஷ் பவுண்டு வாங்கறது போல காண்ட்ராக்ட். இதுக்கும்
பே சலாம் வராது.

லீஸ் அக்ரீமெண்ட், அடமானம் இப்படியான சமாச்சாரத்துக்கு பிரயோஜனப்படுற
காண்ட்ராக்ட் இருக்குன்னு சொன்னீங்களே. பேரு என்ன?

மறந்துட்டே பாத்தியா, எல்ஜாரா.

மாப்ளே, அடமானத்துக்கு இப்போ எல்லாம் பேங்குக்குப் போனா, மிதக்கற
வட்டிங்கறாங்களே அது என்ன? இஸ்லாமிய பேங்குலே இல்லேதான்.  பொதுவா நாட்டு
நடப்பாச்சே. அதான் கேட்டேன்.

வீட்டுக் கடனுக்கு ஒரே வட்டி விகிதம் வைக்காம (fixed interest rate),
ரிசர்வ் பேங்க் ஆகக் குறைஞ்ச பட்சக் கடன் விகிதமா அவ்வப்போது அறிவிக்கற
ரேட், பேங்க் ஆஃப் இங்கிலாந்து அப்போதைக்கு அப்போது வெளியிடற பேங்க் ரேட்
(LIBOR – London Inter Bank Offer Rate) இதை அடிப்படையா வச்சு வீட்டுக்
கடன் வட்டி விகிதம் மாறிக்கிட்டே இருக்கும். இந்த அடிப்படை ரேட்
எகிறிச்சுன்னா பேங்குக்கு அதிக லாபம். குறைஞ்சா கஸ்டமருக்கு யோகம்.

இஸ்லாமிய பேங்குலே இந்த சவுகரியம் கிடையாதே மாப்ளே.

இருக்கே. முஷாரகா அல்-முடனகிசா Musharaka al-Mutanaqisa. நீ வீடு
வாங்கணுமா. பேங்க் உன்னோடு ஒரு முஷாரகா போட்டுக்கும். பேங்க் 80% பணம்
முடக்கும்னு வச்சுக்க. நீ பாக்கி 20% முடக்குவே. வீட்டை வாங்கி நீ குடி
போனதும், பேங்குக்கு குடக்கூலி கொடுப்பே.  பேங்க் முடக்கின தொகைக்குக்
கிடைக்க வேண்டிய வருமானத்தோட அடிப்படையிலே குடக்கூலி இருக்கும். அப்பப்ப,
மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து, இது கூடலாம், குறையலாம். மாசா மாசமோ
வருசத்துக்கு ரெண்டு, நாலு தடவையோ பணம் கட்டி, பேங்கு போட்ட முதலீட்டை நீ
கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கலாம். உன் முதலீடு ஏறி, பேங்க் முதலீடு குறையக்
குறைய குடக்கூலியும் குறையும். முழுக்க உன் வீடு ஆனதும் கடனும் லேது,
குடக்கூலியும் லேது.

நல்லாத்தான் இருக்கு. அதே மாதிரி ஹையர் பர்ச்சேஸுக்கு, அதான் மாப்ளே,
மடேடார் வேனை ஹயர் பர்ச்சேஸ்லே எடுத்து மாசா மாசம் வாடகை கொடுத்திட்டு,
அப்...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "வங்கி மைனஸ் வட்டி"

சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்

நமது நாடு சுதந்திரம் பெற்று 59 ஆண்டுகளாகி விட்டது.... என்னத்தைச் சாதித்தோம்... எதை இழந்தோம் என்று சிந்தித்துப் பார்த்தால் மகிழ்ச்சி, அதிர்ச்சி, கோபம், பெருமிதம் எல்லாமே ஏற்படுகிறது... இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சில துறைகளின் வளர்ச்சியின்மை குறித்து இந்தியா டுடே பத்திரிகை விரிவான கட்டுரை எழுதியிருக்கிறது... சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு....

- 2004 கணக்கீட்டின் படி இந்தியாவில் மொத்தம் 671 மில்லியன் வாக்காளர்கள்... அதில் 322 மில்லியன் பேர் பெண்கள்....

- மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கை 4,663... பிரிட்டனில் மொத்தமே 643 பேர் தான்....

- இதுவரை இந்தியாவில் 283 சட்டமன்றத் தேர்தல்களும், 14 பொதுத்தேர்தல்களும் நடைபெற்றிருக்கின்றன....

- 14வது மக்களவையில் 8 சதம் பேர் பெண்கள்... பஞ்சாயத்து உறுப்பினர்களில் 34 சதம் பேர் பெண்கள்....

- இந்தியாவிலேயே பெரிய மக்களவைத் தொகுதியான லடாக்கின் பரப்பளவு 1,73,000 ச.கி.மீ... உலகின் பெரிய தொகுதியான கல்கூர்லியின் பரப்பு 22,55,000 ச.கி.மீ....

- 2004 தேர்தலில் வாக்களித்தவர்களின் சதவிகிதம் 58.07% .... 2004 அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் 64%....

- 14வது மக்களவையில் சுயேச்சை எம்.பி.க்களின் எண்ணிக்கை 2

- காங்கிரசிலும், ஜனதாதளத்திலும் இதுவரை ஆறு முறை பிளவு ஏற்பட்டிருக்கிறது.... கம்யூனிஸ்டு இயக்கம் இருமுறை மட்டுமே பிளவுப் பட்டு இருக்கிறது....

- 3.37 மில்லியன் வாக்காளர்கள் அவுட்டர் தில்லியில் இருக்கிறார்கள்... உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி இதுதான்...

- இதுவரை 93 முறை அரசியல் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது.... அமெரிக்காவில் 27 முறை மட்டுமே திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது....

- 14வது மக்களவையில் 25 - 40 வயதுக்குட்பட்ட எம்.பி.க்கள் 12.83 சதவிகிதம் மட்டுமே.... முதல் மக்களவையில் 25.85% பேர் இந்த வயில் இருந்தனர்...

- 14வது மக்களவையில் 136 எம்.பி.க்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்...

- 14வது மக்களவையில் 147 பேர் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள்....

- 553 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய்க்குச் சமமான எரிசக்தியை 2003ல் இந்தியா பயன்படுத்தியிருக்கிறது... சீனாவின் அளவு 1,410 மில்லியன் மெட்ரிக் டன்....

- 100 மில்லியன் பேர் இந்தியாவில் செல்போன் பயன்படுத்துகிறார்கள்.... அமெரிக்காவில் 194.5 மில்லியன் பேர்....

- 2004ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு கிடைத்த அன்னிய நேரடி முதலீடு ரூ. 1,81,000 கோடி.... சீனாவுக்கு ரூ. 11,39,000 கோடி....

- 71 நாட்களும், 11 வழிமுறைகளும் இந்தியாவில் பிசினஸ் ஆரம்பிக்கத் தேவைப்படுகிறது.... அமெரிக்காவில் 5 நாட்கள் 5 வழிமுறைகளே போதும்....

- 2003ல் 583 மாவட்டங்களில் உள்ள இந்திய வீடுகளின் மொத்த வாங்கும் சக்தி ரூ. 14,862,000 கோடி... 1999ல் இது ரூ. 7,634,000 கோடியாகத் தான் இருந்தது...

- இந்தியாவின் அன்னியச் செலாவனி மற்றும் தங்கத்தின் இருப்பு மதிப்பு ரூ. 7,85,000 கோடி...

- இந்தியாவில் சுமார் 2% கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படுகிறது.... சீனாவில் 20%

- 576 பில்லியன் கிலோமீட்டரை இந்திய ரயில்வெ கடக்கிறது... சீனாவில் 571 பில்லியன்...

- இந்திய நிறுவனம் ஒன்று தன் வரியைச் செலுத்த சுமார் 276 மணி நேரம் செலவிடுகிறது.... அமெரிக்காவில் 325 மணி நேரம்...

- இந்தியாவின் கினி குறியீட்டு எண் 33.... இது வருவாய் சமமின்மையைக் குறிக்கிறது... அமெரிக்காவில் இன்னும் அதிகம்... 41

- இந்திய பங்குச் சந்தையில் 2005 திரட்டப்பட்ட முதலீடு ரூ. 25,60,000 கோடி.... சீனாவில் ரூ. 36,30,000

- 670 மில்லியன் பங்கு பரிவர்த்தனைகள் தினமும் மும்பையிலும், தில்லியிலும் நடைபெறுகிறது....

- ரூ. 1,86,000 கோடி - 2004ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் சேவை ஏற்றுமதியின் மதிப்பு.... 1990ல் இது ரூ. 21,400 கோடி மதிப்புள்ளதாக இருந்தது... சுமார் 14 ஆண்டுகளில் 870 சதவிகித அபார வளர்ச்சி...

- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் மொத்த கடன் சதவீதம் 65.8%

- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நுகர்வின் சதவீதம் 64%... ஜப்பானில் 55% தான்....

- 260 மில்லியன் இந்தியர்கள் இன்னமும் ரூ. 50க்கு குறைவாகத் தான் செலவிடுகிறார்கள்....

- இந்தியாவில் ஒரு கி.மீ. சாலைக்கு 3 வாகனங்கள் இருக்கின்றன....

- இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 334.... அமெரிக்காவில் 14,883.....

- 5,58,000 ச.கி.மீ நிலம் இந்தியாவின் பாசனத்திற்குட்பட்டு இருக்கிறது....

- 17,189 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருக்கிறது.... அமெரிக்காவில் 4,182 மட்டுமே....

- 93,000 துவக்கப் பள்ளிகள் இந்தியாவில் கம்ப்யூட்டர் வசதியுடன் இருக்கின்றன.... அமெரிக்காவில் 1,10,000

- 19% துவக்கப்பள்ளிகள் இந்தியாவில் ஒரே ஆசிரியரால் மட்டுமே நடத்தப்படுகிறது....

- 75% துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குடிதண்ணீர் வசதி இருக்கிறது....

- 25% பள்ளிகள் மட்டுமே இந்தியாவில் மின்வசதியோடு இருக்கிறது....

- 87% பள்ளிகள் கிராமங்களில் தான் இருக்கிறது....

- 2004ல் இந்தியாவில் மொத்தப் பள்ளிகள் 9,00,000

- 70% பள்ளிகள் பக்காவான கட்டிடத்தில் இயங்குகிறது....

- 5,00,000 பேர் இந்தியாவில் ஆண்டு தோறும் டாக்டர்கள் ஆகிறார்கள்... சீனாவில் 15 லட்சம் பேர்....

- 9,070 டாக்டர் பட்டங்கள் 2005ல் வழங்கப்பட்டிருக்கிறது... இது அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் 42,700 குறைவு... சீனாவோடு ஒப்பிட்டால் 6,000 அதிகம்....

- 400 மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் உள்ளன. அமெரிக்காவில் 125 கல்லூரிகள்....

- 5.7 மில்லியன் பள்ளி ஆசிரியகள் இந்தியாவில் இருக்கிறார்கள்....சீனாவில் 2.2 மில்லியன் மட்டுமே....

- 3,50,000 என்ஜினியர்கள் இந்தியாவில் ஆண்டு தோறும் உருவாகிறார்கள்.... சீனாவில் 6,00,000 பேர்....

- 8,00,000 பேர் எம்.பி.ஏ. முடிக்கிறார்கள்.... அமெரிக்காவில் 2,00,000 பேர் தான்....

- ஒரு ஆசிரியருக்கு 41 மாணவ-மாணவிகள் என்பது இந்தியாவில் இருக்கும் விகிதம்.... சீனாவில் ஒரு ஆசிரியருக்கு 21 மாணவ-மாணவிகள் மட்டுமே....

- 73% இந்திய ஆண்கள் எழுத்தறிவு மிக்கவர்கள்... சீனாவில் ஆண்களின் எழுத்தறிவு 95%... இந்தியாவில் பெண்களில் 47.8% பேருக்கு மட்டுமே எழுத்தறிவு இருக்கிறது... சீனாவில் 86.5 சதவிகிதம்....

- 13 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் பள்ளி செல்வதில்லை...

- 2,00,000 அறிவியல் பட்டங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.... சீனாவில் 6,00,000....

- 10,500 மாணவர்கள் கி.மு. 700ல் உலகின் முதல் பல்கலைக்கழகமான தக்ஷீலாவில் படித்தார்கள்....

- 9.9 மில்லியன் மாணவர்கல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்...

- 16 சதவிகிதம் 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கிராமத்து தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்....

- 25% அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வருடந்தோறும் தங்கள் பணிகளுக்கு வராமல் இருக்கிறார்கள்....

- உலக அளவில் 2001-05க்கு இடையில் ஏவப்பட்ட 55 செயற்கைக்கோள்களில் இந்தியாவின் பங்கு 2% மட்டுமே.... சீனாவின் பங்கு 9%....

- இந்தியாவின் வெற்றிகரமான விண் ஏவல்களின் எண்ணிக்கை 13 மட்டுமே... அமெரிக்கா 424, சீனா 52

- பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சிக்கு ஒதுக்கியிருக்கும் தொகை ரூ. 13,250 கோடி.... நாசா இந்த வருட அமெரிக்க பட்ஜெட்டில் மட்டும் 9,52,718 கோடியைப் பெற்றிருக்கிறது....

- இந்தியாவில் மொத்தம் 125 பார்ச்சூன் 500 கம்பெனிகள் தளம் அமைத்திருக்கிறது....

- 1995-2003ல் இந்தியாவில் பெறப்பட்ட பயோடெக் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,378

- 1000 பேரில் 32 பேர் இணையம் வைத்திருப்பவர் எண்ணிக்கை.... சீனாவில் இது 73 பேர்..... பிராட்பேண்டு கனெக்சன் சீனாவில் 100க்கு 16.5 பேர்.... இந்தியாவில் 0.6 பேர் மட்டுமே....

- 28.3% பேர் இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தில் பெண்கள்... இவர்களில் 36.1 சதவிகிதம் பேர் 15-64 வயதுக்குட்பட்டவர்கள்....

- இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 133 மில்லியன்.... பாகிஸ்தானி 125.4 மில்லியன் மட்டுமே...

- 51.6% இந்திய அமெரிக்கர்கள் உயர்ந்த வேலைகளில் இருக்கிறார்கள்.... வெள்ளையர்களில் 21.4% பேரே உயர்வேலையில் இருக்கிறார்கள்....

- 2004ல் இந்தியாவில் நடந்த கொலைகள் எண்ணிக்கை 33,608... அதே வருடம் அமெரிக்காவில் 16,137 கொலைகள் தான் நடந்திருக்கின்றன....

- 2003ல் ஒரு இந்தியருக்கான சுகாதாரச் செலவு ரூ. 1,215... சுவிட்சர்லாந்து இதே விஷயத்துக்காக ரூ. 4,815 செலவழிக்கிறது...

- அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 1.88 மில்லியன்.... சீனாவுக்கு அடுத்து இந்தியர்களே அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறார்கள்....

- 308 மில்லியன் பேர் நகரங்களில் வசிக்கிறார்கள்... மக்கள் தொகையில் இது 29%. அமெரிக்காவில் 80% பேர் நகரங்களில் தான் வசிக்கிறார்கள்....

- இந்தியக் குடும்பங்களிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கை சராசரியாக 5.3.... அமெரிக்காவில் 2.62 பேர் மட்டுமே....

- 1991-2001ல் அதிகரித்த மக்கள் தொகை மட்டும் 181 மில்லியன்... இது பிரேசிலின் மொத்த மக்கள் தொகைக்குச் சமம்....

- 86% இந்தியர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கிறது..... சீனாவில் 77% பேர்தான் சுத்தமான குடிநீர் பெறுகிறார்கள்....

- 43% பிரசவங்கள் மட்டுமே தேர்ச்சி பெற்ற மருத்துவர்களால் செய்யப்படுகிறது....

- 5.7 மில்லியன் பேர் இந்தியாவில் எச்.ஐ.வி. / எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள�
�.... இது உலகில் மிக மிக அதிகம் என எச்சரிக்கிறது WHO

- 40% டாக்டர்கள் அரசு மருத்துவ மையங்களுக்கு எப்போதுமே வருவதில்லை....

- 80,466 இந்திய மாணவர்கள் 2005ல் அமெரிக்காவில் படித்தார்கள்... சீனர்கள் 62,523 பேர் மட்டுமே....

- அமெரிக்க இந்தியன் ஒருவனின் சராசரி தனிநபர் வருவாய் ரூ. 12 லட்சம்... வெள்ளை அமெரிக்கர்களுக்கு ரூ. 10.98 லட்சம்.... சீன அமெரிக்கர்களுக்கு ரூ. 9.30 லட்சம்....

- இந்தியர்களின் சராசரி ஆயுள் 64.71 ஆண்டுகள்.... சீனர்களுக்கு 72.58

- 2.5% ஜி.டி.பி ராணுவத்தை பராமரிக்க செலவிடப் படுகிறது... இது சீனாவில் 4.3%... அமெரிக்காவில் 4.06%

- 86% காச நோயாளிகலை இந்தியாவில் குணப்படுத்தி விடுகிறார்கள்.... அமெரிக்காவில் 70% தான்...

- 5 வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 85.... சீனாவில் இது 31 மட்டுமே....

- 94.1% எழுத்தறிவு பெற்ற ஜெயின்கள் இந்தியாவில் முன்னணியில் இருக்கிறார்கள்.... 59.1% எழுத்தறிவு கொண்ட முஸ்லிம் சமூகம் தான் இந்தியாவில் கடைநிலையில் இருக்கிறது....

- 5,00,000 ஜவான்கள் வடக்கு, வடகிழக்கு இந்தியாவை பாதுகாக்கிறார்கள்.... இது ஒட்டுமொத்த அமெரிக்க ராணுவத்துக்கு இணையானது...

- 12,500 ஒற்றை திரையரங்குகளும் 250 மல்டிபிளக்ஸ் அரங்குகளும் இந்தியாவில் இருக்கிறது... அமெரிக்காவில் இது முறையே 1,629 - 1,523
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்"

அவ்லியாக்களின் மிருகங்களுக்கு கப்ர் கட்டலாமா?


கேள்வி: எங்கள் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் முன்னோர்களில் ஒருவர் காட்டுபாவா வலியுல்லாஹ் அவர்களுக்கு பாத்திஹா ஓதி உணவு சமைப்பதற்காக ஒரு சேவலை நேர்ச்சை செய்து வளர்த்து வந்தார். நேர்ச்சை செய்ததற்கு மாற்றமாக அந்த சேவலை அறுத்துவிட்டார். அறுபட்ட அந்த சேவல் எழுந்து கொஞ்ச தூரம் ஓடிச் சென்று ஓர் இடத்தில் மையத்து போல படுத்து மரணித்துவிட்டது.
பின்னர் எங்கள் முன்னோர்கள் அந்த இடத்தில் சேவலை அடக்கம் செய்துவிட்டு கப்ரை எழுப்பி அங்கு பல ஆண்டுகளாக பாத்திஹா, கந்தூரி, ராத்திபு போன்ற விசேசங்கள் நடத்தி வருகிறார்கள். மேற்படி சேவலுக்கு கப்ரு எழுப்பலாமா? ஃபாத்திஹா போன்ற விசேசங்கள் நடத்தலாமா? தெளிவான விளக்கங்களுக்கு எங்கள் ஜமாஅத்தினர் சார்பாய் வேண்டுகிறோம்.
-  எம். செய்யது முஹம்மது யூசுப், தலைவர்: முஸ்லிம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி வாசல், கோவில் பாளையம், பொள்ளாச்சி தாலுகா. 20-07-2011
பதில்: நமது மார்க்கம் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஜ்,  என்ற நான்கு அடிப்படை ஆதாரங்களைக் கொண்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. சட்ட மாமேதைகளான இமாம்களும், இந்த நான்கைக் கொண்டே மார்க்கத்தை சீர்பபடுத்தியுள்ளனர். தங்களுடைய கேள்விக்கு இதன் அடிப்படையிலேயே பதில் கூறுகிறோம்.
விலங்குகளுக்கு கப்ரு கட்டலாமா? என்று பார்க்கும்போது குர்ஆன் ஆம் என்றே பதில் கூறுகிறது.
குர்ஆன் ஆதாரம் :1:
இன்னும் அவர்களுடைய நாய், குகை வாசலில் தன்னுடைய இரு முன்னங்கால்களையும் விரித்துப் (படுத்துக்) கொண்டிருக்கிறது. (சூரத்துல் கஃப் 18)
சூரத்துல் கஃப் எனும் அத்தியாயத்தில் கஹ்புவாசிகள் எனும் அவுலியாக்களைப் பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது அப்புனிதர்களோடு ஒரு நாயும் இருப்பதாக திருக்குர்ஆனில் கூறுகிறான்.
அப்புனிதர்களோடு அந்த நாயும் இருந்ததால் அதுவும் சுவனம் செல்லக் கூடிய பாக்கியம் பெற்றதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். (திர்மிதி ஷரீப்)
அதையே அல்லாமா ஷைகு ஸஅதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது குலிஸ்தான் என்னும் கிரந்தத்தில் மிக அழகாக பதிவு செய்துள்ளார்கள்.
 
1960களில் ஷாஹுல் ஹமீது பிரஸ் வெளியிட்ட தமிழ் தர்ஜமாவில் குகையில் கோபுரம் என்ற தலைப்பின் கீழ் இவ்வசனத்திற்கு விளக்கம் தரும்போது கஃஹ்ப் வாசிகள் இருந்த குகையின் மீதே தர்காவும் தொழுகைப் பள்ளியும் கட்டப்பட்டதாக கூறியுள்ளார்கள். இத்தப்ஸீரைக் கொண்டு விளங்குவது அப்புனிதர்களுடன் நாய்க்கும் சேர்த்தே தர்கா கட்டப்பட்டது என்பது வெளள்ளிடைமலை.
குர்ஆன் ஆதாரம் 2:
பின்னர் பூமியைத் தோண்டக் கூடிய ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். அவருடைய சகோதரரின் பிரேதத்தை எவ்'வாறு மறைப்பது என்பதை அவருக்கு காண்பிப்பதற்காக. (சூரத்துல் மாயிதா 31)
ஆதம் நபியவர்களின் பிள்ளைகளான ஹாபிலும், காபிலும் கருத்து வேறுபாட்டால் ஹாபிலை காபில் கொலை செய்து விட்டார். மையத்தை எப்படி அடக்கம் செய்வது? என்று யோசித்த சமயத்தில் இரண்டு காகங்களை அவர் முன்னால் அல்லாஹ் அனுப்பி  சண்டையிட வைத்து ஒரு காகம் இறந்தபின் மற்றொரு காகம் தன் அலகால் மண்ணைத் தோண்டி புதைக்குமாறு செய்தான். இதைப் பார்த்த காபில் தன் சகோதரரை அ வ்வாறே  அடக்கம் செய்தார்.
ஆதாரம்: பெரிய கஸஸுல் அன்பியா.
என்பதாக மேற்கண்ட ஆயத்திற்கு தப்ஸீர் விரிவுரை பறைசாற்றுகிறது. இதனால் அந்த காகத்திற்கு கப்ரு கட்டப்பட்ட வரலாறு பதியப்பட்டது. இந்தியாவில் நமது தமிழகத்தில் இந்த கப்ரை ராமேஸ்வரம் ரயிலடிக்கு எதிர் புறத்தில் ஹாபில் காபில் கப்ருகளுக்கு அருகாமையில் உள்ளதை நேரடியாகச் சென்று பார்க்கலாம்.
குர்ஆன் ஆதாரம் 3:
என்னுடைய சமூகத்தினரே! இது அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகம்- உங்களுடைய அத்தாட்சியாக (அருளப்பட்டுள்ளது). எனவே அல்லாஹ்வுடைய பூமியில் அது (மேய்ந்து) திண்ண அதனை நீங்கள் விட்டு விடுங்கள். எவ்விதத் தீங்கைக் கொண்டும் அதனை நீங்கள் தொடாதீர்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால்) அப்போது விரைவான தண்டனை உங்களைப் பிடித்துக் கொள்ளும் என்றும் கூறினார். – ஸூரத்துல் ஹூத் 64)
நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம்' அவர்களுக்கு முஃஜிஸாவாக மலையில் இருந்து ஒரு ஒட்டகத்தை வெளிப்படுத்திக் காட்டியதை குர்ஆன் இயம்புகிறது.
அந்த ஒட்டகத்திற்கென சிறப்பு சட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவ்ஒட்டகம் புனிதப்படுத்தப்பட்டிருந்தது. அரேபிய தேசத்தில் ஒன்றான ஓமான் நாட்டில் சலாலா என்ற ஊரில் அவ் ஒட்டகத்தின் காலடி சுவடுகள் பதிந்துள்ள பாறைகளை மக்கள் புனிதப்படுத்தி ஜியாரத்து செய்து வருகின்றனர். அந்த புகைப்படத்தை எங்கள் தர்கா இதழ் அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

இப்படி குர்ஆன் வலிமார்களுடன், நபிமார்களுடன் சம்பந்தப்பட்ட விலங்குகளை புனிதப்படுத்துகிறது.
இனி யாராவது இது முன்சென்ற சமூக நபிமார்களின் நிலை. அச்சட்டம் நமக்குப் பொருந்தாது என்று விதண்டாகிவாதம் செய்வார்களேயானால் அதற்கும் நாம் பதில் சொல்வோம்.
முன்சென்ற நபிமார்கள் சமூகத்தில் நடந்த சுன்னத்தான செயல்கள் நமக்கும் ஆகுமானவையே என்று நமது அகீதா கொள்கை வகுத்துத் தந்த இமாம் மாதுரீதி ஹனஃபி அவர்களும், அஷ்அரி ஷாஃபியீ ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களும் எடுத்துரைக்கிறார்கள். அதையே நமது ஷரீஅத் சட்ட மேதைகளான இமாம் ஹனபி, ஷாபி, மாலிகி, ஹன்பலி ரலியல்லாஹு அன்ஹும் அபிப்பிராய பேதமின்றி இது போன்ற புனிதர்களோடு தொடர்புடைய இடங்களை ஜியாரத்து செய்வது கூடும் என்று கூறியதோடு ஜியாரத்தும் செய்து வந்துள்ளார்கள் என்று ஏராளமான சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.
பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் செய்த கோவேறு கழுதையை குப்பார்கள் குறை கூறிய போது அதை எதிர்த்து சஹாபாக்கள் அக்கோவேறு கழுதையை சங்கை செய்ததும் ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஹ்லெ பைத் எனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கிளைக் கொழுந்தான இமாம் மூஸல் ரிழா அவர்கள் அழைப்பின் பேரில் நேஷாபூர் நகருக்கு கோவேறு கழுதையில் சவாரி செய்தவர்களாக வருகை தந்த போது 20000 முகத்திஸீன்களான – ஹதீது கலை வல்லுனர்களும் லட்சக்கணக்கான பொதுமக்களும் அவர்களை வரவேற்று புனிதப்படுத்திய போது அன்னவர்களின் திருமுகத்தின், அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நூரே முஹம்மதிய்யா திருக்காட்சியை கண்டு லயித்து போன கூட்டத்தார் அவர்கள் ஏறி வந்த கோவேறுக் கழுதையைப் புனிதப்படுத்தி அதன் திருப்பாதத்தை முத்தமிட்ட வரலாறு அஸீஹுல் மதாலிப் ஃபீ அததி மனாகிபி அலீ இப்னு அபூ தாலிப் என்ற ஹதீ:து கிரந்தத்தில் பக்கம் 463 ல் பதியப்பட்டுள்ளது.
காதிரிய்யா தரீகாவின் கிளைப் பிரிவுகளின் முக்கிய பரிவான கான்வாதயே பிர்தௌஸிய்யாவின் மூலர்களில் ஒருவரான ஹஜ்ரதஜ் நஜ்முத்தீன் குப்ரா வலியுல்லாஹ் காலத்தில் வலியுல்லாஹ் அவர்கள் ஷரீஅத் சட்டத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவராய் இருந்த காரணத்தினால் (ஹிஜ்ரி 540-618) பாதுஷா அவர்களை தமது அரசாங்க காஜியாக நியமித்தார். அதாவது இன்றைய சுப்ரீம் கோர்ட் சீப் ஜஸ்டிஸ்க்கு சமமான பதவி வழங்கினார். சில ஆண்டுகளிலேயே பதவியை உதறித் தள்ளிவிட்டு இறைவேட்கையில் ஞான குருநாதரைத் தேடி அலைந்து அபுல் முஜன்னாப் அஹ்மது நஜ்முல் ஹக்கி வத்தீன் நஜ்முத்தீன் குப்ரா என பட்டங்கள் பல பெற்று அல்லாஹ்வின் லிகா என்னும் திவ்விய தரிசனம் பெற்ற காதிரிய்யா தரீகாவின் கிளையாகப் பிரிந்த பிர்தௌஸிய்யா கான்வாதாவின் மூலரானார்கள். இவர்களின் ஷெய்கான அம்மார் யாஸிரின் மூலம் நபிகள் கோமானின் திவ்விய தரிசனம் கிட்டடியது. உலகை விட்டு ஒதுங்கிய ஸூபியத்தான தனது தைக்காவில் அல்லாஹ்வின் நாட்டத்தை நாடியவர்களாக இருந்து வந்தார்கள்.
ஒரு நாள் அவர்களின் தைக்காலுக்கு வந்த ஷைக் அஸதுத்தீன் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் இன்றைய காலகட்டத்தில்
ஒரே ஒரு கடைக்கண் கடாட்சத்தால் விதிவசங்களிலிருந்து மாற்றிவிடும் (அல்லாஹ்வின்) நேசர்கள் இக்காலத்திலும் உள்ளார்களா? என்று பொருள்படும்படி வினவினார்கள்.
அதைக் கேட்டு ஜத்பு என்ற நிலைக்கு வந்த ஹஜ்ரத் நஜ்முத்தீன் குப்ரா அவர்களின் பார்வை அவ்வழியா சென்ற ஒரு நாயின் மீதுபட்ட கணத்திலேயே கடைக்கண் போரொளி பிரகாச பார்வைபட்ட நாய் கவுரமும், கம்பீரமும் பெற்று விட்டது. அதன் அடையாளமாக அவ்வூரில் இருந்த நாய்களெல்லாம் அதைச் சுற்றி ஓர் சபை அமர்வதைப் போல் அமர்ந்து அந்த நாய்க்கு சங்கை செய்தன. அதற்கு மரியாதை செய்து சென்றபின் வேறொரு நாயின் கூட்டம் வந்து அதற்கு மரியாதை செய்தது. இது போன்று நடந்து வந்த சில நாட்களில் அந்த நாய் மரணித்தபோது ஹஜ்ரத் நஜ்முத்தீன் குப்ரா அந்த நாயை அடக்கம் செய்து கப்ரு கட்டும்படி பணித்தார்கள்.
இன்றும் அந்த நாயின் கப்ரு மாவராவுன் நஹர் என்ற ஊரில் உள்ளது. மக்கள் ஜியாரத்து செய்கிறார்கள். இன்'றைய ரஷ்யா பிராந்தியத்தின் சுதந்திர நாடான நேஷாபூர் ஆஜர்பைஜான் நாட்டில் உள்ளது. ஆதாரம்: கஸ்ரே ஆரீஃபான்.
மேலும் அஜ்மீர் ஷரீஃபின் தாராகட் மலையிலே ஷஹீதானவர்களின் குதி;ரைகளும் ஷஹீதாகி அடக்கப்பட்டுள்ளன.
அக்பர் தி கிரேட் பத்தேஹ்பூர் சிக்ரி கோட்டையில் சலீம் சிஷ்தி வலியுல்லாஹ்வின் பாதர்கா வளாகத்தில் அவர்களின் புதல்வர் பாலேமியான் கப்ருக்கு அருகில் அவர் வளர்த்த கிளியின் கப்ரும் உள்ளது.
1016 வது உரூஸ்….
அவ்வளவு ஏன்?  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் திருச்சிக்கு வந்த தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தோஹ்ல் சமந்தர் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தபோது சோழ மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதபோது அரசனுக்கு வலியுல்லாஹ்வின் துஆ பரக்கத்தால் பிறந்த குழந்தையை ஷரத்துப் படி ஹஜ்ரத் அவர்களிடம் ஒப்படைத்து அக்குழந்தையை வளர்த்து மாமா ஜிக்னி என்று பெயர் வைத்து ஹஜ்ரத் கையால் எழுதிய குர்ஆன் ஷரீபை படிக்க வைத்து மனனம் செய்ய வைத்த போது மாமா ஜிக்னி அவர்கள் ஆசையாய் வளர்த்து வந்த கிளியும் முழு குர்ஆனை ஓதி ஹாபிழ், அதை இன்றும் மக்கள் ஜியாரத்து செய்து வருவதையும் திருச்சிக்கு நேரில் சென்று பார்க்கலாம்.
ஆதாரம் உருது நூல்: தாஸ்தானே தப்லே ஆலம், தமிழில்: தப்லே ஆலம் பாதுஷா வலியுல்லாஹ் வரலாறு மற்றும் ஆயிரமாவது ஆண்டு மலர்.
தமிழகத்து பாதுஷாவாம் நாகூர் ஆண்டவர்வலியுல்லாஹ் அவர்களின் குருநாதர் கவுது குவாலியர் வலியுல்லாஹ்வின் வழித்தோன்றலான சிதம்பரத்திற்கு அருகில் கிள்ளையில் அடங்கியுள்ள சையத் ஷா ரஹ்மத்துல்லாஹி வலியுல்லாஹ    ; ஷுத்தாரி அவர்களின் தர்கா ஷரீபில் வலியுல்லாஹ் அவர்கள் சவாரி செய்து வந்தகுதிரை மரணித்த பின், அதை தஃபன் செய்து, ஜங்கிலி பீர் என்ற பெயரில் கப்ரு கட்டப்பட்டு நேர்ச்சை பாத்திஹா மற்றும் விளக்குகள் ஏற்றப்பட்டு வல்லோன் அல்லாஹ்வின் அருளால் முராதுகள் ஹாஸிலாகி பூர்த்தி செய்யப்படுவதை இன்று ஊரில் உள்ள முஸ்லிம் ஜமாஅத்தாரிடம் மற்றும் நிர்வாகம் செய்யும் வாரிசுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
நிற்க… கோவில்பாளையம் பள்ளிவாசல் தலைவர் மற்றும் ஜமாஅத்தார்களே! நம் சிற்றறிவிற்கு எட்டியபடி ஆதாரங்களை திரட்டித் தந்துள்ளோம். எனவே நாய்க்கும், கிளிக்கும், குதி;ரைக்கும் அல்லாஹ்வின் நேசம் பெற்ற வலிமார்களின் பாசம் பெற்று புனிதம் பெற்ற அந்த ஐந்தறிவு மிருகங்கள் புனிதப்படுத்தப்படுகின்றனவென்றால் காலையில் பாங்கு சொல்லி எழுப்பும் சேவல் – அதுவும் காட்டுபாவா சேவல் நேர்ச்சைக்கு மாற்றமாக அறுத்தும் அறுபடாமல் கொஞ்ச தூரம் ஓடிச் சென்று ஒரு இடத்தில் மையத்துப்போல் படுத்து மரணமடைந்தது என்றால் அது காட்டுபாவாவின் கராமத். அல்லாஹ்வின் குத்ரத். அவன் தன் நேசர்களுக்கு வழங்கும் கராமத்-அற்புதமாகும். எனவே உங்கள் முன்னோர்கள் அந்தப் புனித சேவலுக்கு கப்ரு எழுப்பியதும், பல ஆண்டுகளாக பாத்திஹா, கந்தூரி, மவ்லிது, ராத்திபு போன்ற விசேசங்கள் செய்வதும் கூடும் என்பதும் அக்காலத்தில் வாழ்ந்'து வந்த எந்த சுன்னத் வல் ஜமாஅத் ஆலிமும் அதைத் தடுக்கவில்லை என்பதும், அது ஷரீஅத் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
எனவே வஹ்ஹாபிய மதம் பிடித்த தேவ்பந்திய தப்லீ:க் ஜமாஅத்து முதல் தவ்ஹீது ஜமாஅத் வரை மேற்கண்ட ஆதாரங்களுக்கு விதண்டாவாதம் பேசுவார்களேயானால், அவர்களுடைய (வஹ்ஹாபிய) மதம் அவர்களுக்கு. நமது சுன்னத் வல் ஜமாஅத் மார்க்கம் நமக்கு என்று அமைதியாய் சொல்லிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.
மற்ற அனைத்திற்கும் அல்லாஹ்வும் அவனது ஹபீபும் ரஸூலுமாகிய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நன்கறிந்தவர்கள் என்று கூறி நமது தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியும், எல்லோருக்கும் ஹிதாயத்து கிடைக்க துஆ செய்து விடை பெறுகிறோம். வஸ்ஸலாம்
வாழ்க நாகூராரின் பேரர் காட்டுபாவா பாவா ஃபக்ருத்தீன்! ஓங்குக காட்டுபாவா சேவலின் புகழ்!!(காட்டுபாவா அவர்களின் தர்கா ஷரீப் இரண்டு இடங்களில் உள்ளது என்பதை அறியவும்)
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "அவ்லியாக்களின் மிருகங்களுக்கு கப்ர் கட்டலாமா?"

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates