Elegant Rose - Diagonal Resize 2 ‘வட்டி அழிகிறது’! ஐரோப்பாவின் சீரழிவு...!! அமெரிக்காவின் பேரழிவு....!!! தப்பிப் பிழைக்குமா இந்தியா?!!! ~ TAMIL ISLAM

வெள்ளி, 16 மார்ச், 2012

‘வட்டி அழிகிறது’! ஐரோப்பாவின் சீரழிவு...!! அமெரிக்காவின் பேரழிவு....!!! தப்பிப் பிழைக்குமா இந்தியா?!!!

V V IMPORTANT ECHONOMIC ARTICLE


o அடி மேல் அடி

o அமெரிக்கா பொருளாதார எத்தர்கள்

o அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?

o அமெரிக்காவின் பெட்ரோ-டாலர் சைக்கிள் ஏமாற்று

o அமெரிக்க-சீன ‘பரஸ்பர ஒட்டுண்ணி’ உறவு

o சதாம் ஹுசைன் கொடுத்த முதலடியும் அமெரிக்காவின் பதிலடியும்

o கடங்கார அமெரிக்கவும் ஈட்டிக்கார சீனாவும்

o ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் விளாசிய விளாசல்

o அரசியல் பிழைத்தாருக்கு பொருளாதாரமே கூற்றாகும்!!!

o அமெரிக்க-ஐரோப்பிய பின்னடைவும் அயோக்கிய தலைவர்களும்!!

o அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும் அதனால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளும்.

o தற்காக்கும் இந்திய தந்திரங்கள்

o எப்படி சரியும் இந்திய சந்தை?

o இந்தியாவில் சரியக்கூடிய முக்கிய துறைகள்

o என்ன செய்தால் பித்தம் தெளியும்?


‘வட்டி அழிகிறது’! ஐரோப்பாவின் சீரழிவு...!! அமெரிக்காவின் பேரழிவு....!!! தப்பிப் பிழைக்குமா இந்தியா?!!! 

நியூயார்க் நகரம்: உலகின் ‘வட்டி’ அடிப்படையிலான ‘ஒட்டுண்ணி சந்தை பொருளாதாரத்தை’ (நன்றி: திரு. விளாதிமிர் புடின், பிரதமர், ரஷியா) தூக்கி நிறுத்தும் அமெரிக்காவின் பொருளாதார தலைநகரம்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் பெற்ற அதிர்ச்சியை விட அதிக அதிர்ச்சியை சமீபத்திய ‘பங்கு சந்தை’ வீழ்ச்சியில் பெற்று உறைந்து போயுள்ளது.

கொடூர கனத்துடன் வட்டி பொருளாதாரம் செய்யும் சவாரியின் அழுத்தம் தாளாது உலகின் தொழில் மற்றும் வியாபார குதிரைகளான பங்கு சந்தைகள் உட்காரத் தொடங்கியுள்ள நிலையில், உலகெங்கும் ‘வட்டி அழிகிறது’.

குறிப்பாக, அமெரிக்கா வழக்கம் போல கடன் வாங்கி ‘வல்லரசை’ நடத்துவதாக ‘பேர் பண்ணும்’ கொடுமை ஒரு புறம.

மற்றொரு புறம், ஐரோப்பாவின் பெரும் பொருளாதாரங்களான ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தாங்கள் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாது ‘திவாலாகலாம்’ என்னும் பெருங்கொடுமையான நிலை.

இவ்வாறு தங்களது அங்கத்தினர்கலான இரு பெரும் ‘பொருளாதாரங்கள்’ திவாலாகும் பேராபத்தால், ‘ஐரோப்பிய’ பொருளாதாரமே ‘அழிந்து’ போகக்கூடிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது.

நிலைமையின் தீவிரம் உணர்ந்த உலக சந்தைகள் தங்களது ‘நடுக்கத்தை’ காட்டியதன் விளைவாக தொடங்கிய இந்த உலக பொருளாதார பின்னடைவு, திடிரென்று தோன்றி கண் முன்னரே பெரிய புயலாக மாறி அடிக்கலாம் என்ற நிலைமையை தோற்றுவித்துள்ளது.

இதன் ஒவ்வொரு அம்சத்தையும் இயன்ற வரை சுருக்கமாக, எளிதாக இப்போது பார்க்கபோகிறோம்.

அடி மேல் அடி

அமெரிக்காவின் குடியரசு கட்சியின் வெள்ளை இனவெறி ‘டீ பார்டி’ தீவிரவாதிகளின் பிடியில் மாட்டி, குட்ட குட்ட குனிந்து ஒருவாறு வெளி வந்த கறுப்பர் ஜனாதிபதி ‘ஒபாமா’ வின் ஒப்பந்தத்தால், கடன் உச்சவரம்பு பிரச்சனையிலிருந்து மீண்டு ஒரு வாரம் கூட ஆகவில்லைஸ பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்திக்கிறது.

எதிர்ப்பார்ததை விட சிறப்பான வேலைவாய்ப்பு புள்ளிவிவரம் கிடைக்கபெற்றும் சாந்தியாடையாத அளவிற்கு, நிலைமையின் தீவிரம் இருப்பதை உணர்ந்த அமெரிக்க பங்குச் சந்தைகள் ஆகஸ்ட் 5 வியாழக் கிழமையன்று சந்தித்த கடும் வீழச்சியை, ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஆகஸ்ட் 6 வெள்ளிக்கிழமை அன்று எதிரொலித்தன.

இதன் தொடர்சியாக இறங்கிய அடுத்த பேரிடியில் அமெரிக்க ‘களஞ்சிய கடன் பத்திரங்களின்’ நம்பகத்தன்மையின் தரத்தை ‘AAA’ எனும் உயர் நிலையிலிருந்து ‘AA+’ எனும் தாழ் நிலைக்கு கொண்டு சென்று ‘உலக பொருளாதார’ அடிப்படையையே அதிர வைத்தது ‘S&P’ எனப்படும் ‘ஸ்டான்டர்ட் அண்ட் புவர்ஸ்’ கடன் தர நிர்ணய நிறுவனம்.

ஆனால் ‘ஸ்டான்டர்ட் அண்ட் புவர்ஸ்’ புள்ளி விவரத்தில் அமெரிக்காவின் ‘மானிய செலவை’ சுமார் 2 ஆயிரம் கோடி டாலர்கள் தவறாக அதிகப்படுத்தப்பட்டிருந்ததை, அமெரிக்க நிதி அமைச்சக அதிகாரிகள் கையும் களவுமாக கண்டுபிடித்த பின்னர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட ‘ஸ்டான்டர்ட் அண்ட் புவர்ஸ்’, தனது தர நிர்ணயத்தை மட்டும் மாற்ற சம்மதிக்காதது, அதன் மீது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக ஒபாமாவின் ‘ஏழை கருப்பர்களுக்கான மானியங்களை எதிர்க்கும் ‘குடியரசு கட்சியின் வெள்ளை இன வெறி ‘டீ பார்ட்டி’ தீவிரவாதிகளின் கைகள், ‘ஸ்டான்டர்ட் அண்ட் புவர்ஸ்’ பின்னணியில் இருந்து செயல்படுகின்றன என்று விஷயமறிந்த வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

ஆசியாவிலும், ஜப்பான், ஹாங்காங், கொரியா, சிங்கப்பூர், இந்தயா மற்றும் சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டு பங்குகள் மிக மோசமாக அடிவாங்கின.

இதனிடையே வெளியிடப்பட்ட அமெரிக்காவின் வேலையற்றோர் புள்ளிவிபரம் எதிர்பார்த்ததை விட சற்றே சிறப்பாக இருந்ததால் ஐரோப்பிய பங்கு சந்தைகள் சற்றே ஆறுதல் அடைந்த நிலையில் தான் அமெரிக்காவின் ‘கடன் தகுதி’ தராதரம் AA+ ஆக ‘ஸ்டான்டர்ட் அண்ட் புவர்ஸ்’ நிறுவனத்தால் திருட்டுத்தனமாக குறைக்கப்பட்ட செய்தி வெளியானதும் சர்வதேச சந்தைகளை உலுக்கி உள்ளது.

அமெரிக்கா பொருளாதார எத்தர்கள்:

இதனால் உலகில் காணப்படும் பொருளாதார மீட்சி பற்றிய சந்தேகமும், புதிய அச்ச உணர்வும் பெருகி உலகெங்குமுள்ள முதலீட்டாளர்களிடம் பரவலாக காணப்படுகிறது.

உலகெங்கும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் எந்த வேலையும் செய்யாமல் வட்டிக்கு கணக்கெழுதி ‘டை கட்டி, ஷூ மாட்டி, கோட்டு, சூட்டு’ போட்டு உட்கார்ந்து தின்னும், ‘வட்டி வங்கியாளர்களின்’, ‘அரசுகளின்’, ‘தனி மனிதர்களின்’ கூட்டு பொருளாதார அயோக்கியத்தனம், ஐஸ்லாந்து, கிரேக்கம் ஆகிய நாடுகளை முதலில் ‘திவாலாக்கியது’.

இப்போது இந்த ‘வட்டி’ அயோக்கியத்தனம் தனது ‘அழிவுப்பார்வையை’ ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் பக்கம் திருப்பிய நிலையில், அவற்றுக்கு கடன் கொடுத்த ‘ஐரோப்பிய’ வட்டி வங்கிகள், தங்களை காப்பாற்றி கொள்ள தத்தமது ‘அரசுகளையும்’, அந்த அரசுகளோ தங்களது ‘குடிமக்களின்’ வரிப்பணத்தையும் இனி கொள்ளையடிக்க முயலும்.

இது போதாதென்று, ‘திவாலை’ நோக்கி பீடு நடை போடும் நாடுகளுக்கு, இந்த ‘வட்டி’ பொருளாதாரம் கொடுக்கும் மற்றொரு பக்க மத்தள அடி என்னவென்றால், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் வங்கிகள் தாங்கள் கடன் பெறுவதே இயலாமல் போய், அதன் காரணமாக ஐரோப்பா முழுவதும் கடன் தட்டுப்பாடு ஏற்பட்டு, ‘கண்டம் தழுவிய’ பொருளாதார அழிவை ‘ஐரோப்பா’ எதிர்நோக்க வேண்டி வரலாம் என்பதேயாகும்.

இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரத்தை பற்றிய இந்த கட்டுரை ஆசிரியனின் கருத்து ‘வெளியே சொல்லுமளவிற்கு’ நல்லதாக இல்லை.

மிகபெரும் பணக்கார வட்டி முதலாளிகளாக, அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களாக, அமெரிக்க பொருளாதாரத்தை கடந்த சில நூற்றாண்டுகளாக நடத்திய, நடத்தும் ஏமாற்றுக்கார, இழிவான எத்தர்கள் குறித்து விவரிக்க கூடிய ‘கெட்ட வார்த்தைகள்’ பல ‘தமிழிலும் ஆங்கிலத்திலும்’ நினைவுக்கு வந்தாலும், அவை ‘போதுமானதாக’ இல்லை என்ற வருத்தம் மேலோங்குகிறது.

எளிமையாக கூறுவதானால் ‘அமெரிக்கா திவாலாகலாம்’.

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?

அமெரிக்காவின் இந்த நிலைக்கு காரணம் என்ன? என்று பார்த்தோமானால் உலக நாடுகளை மிரட்டி கொள்ளையடித்தே வாழ்ந்த ஒரு நாடு, அதனால் கிடைத்த ‘சொகுசில்’ இருந்து மீழ முடியாமல் ‘பொருளாதார கோமாவை’ அடைந்துள்ளது, என்ற உண்மை தெரிய வரும்.

இது குறித்து பங்குச்சந்தை ஆய்வாளரான திரு. மு.சாதிக் அவர்கள் கூறும் போது,

"கடந்து ஒரு நூற்றாண்டாக, அமெரிக்காவை ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள் யாவரும், அமெரிக்கர்களின் வாழ்கையை எல்லாவகையிலும் எளிதாக மாற்றி, உழைப்பில்லாத ஒரு சமூகத்தை உருவாக்கியுள்ளனர்.

கடன் பற்றிய கவலை இல்லாத தொடர்ச்சியான நுகர்வு கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தினர். இதற்காக தனது ‘ராணுவ வல்லமையை வைத்து உலக நாடுகளை பல்வேறு விதங்களில்’ சுரண்டினர்.

உலக நாடுகளும் அமெரிக்க என்ற அழகான பெண்ணின்’ கடைக்கண் பார்வைக்கு ஏங்கி ‘ஒழுக்கமில்லாமல்’ பின்னால் சுற்றும் இளைங்கர்களை போல சுற்றி வந்து, அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் எளிதாக வழங்கின.

இந்த நாடுகளின் அரசுகள் அமெரிக்காவிற்கு பெரும் செலவில் பல்வேறு போருளாதார சலுகைகளையும், குறைந்த வட்டி கடன்களையும் போட்டி போட்டு வழங்கும் அவல நிலை நிலவுகிறது.

இதில் பெரும் சோகமான விடயம் என்னவென்றால் இதே நாடுகளின் அரசுகள், தங்களது சொந்த மக்களுக்கு அதிக வட்டியில் கடன்கொடுத்து கொடுமைபடுத்துவது தான்.

பல நேரங்களில் இந்த நாடுகளின் தலையில் அமெரிக்கா ஒரு பொருளாதார அல்லது ஆட்சிமாற்ற ‘கைத்துப்பாக்கியை வைத்து’ மிரட்டிகொண்டே இருந்தது என்பது மற்றுமொரு காரணம்.

அமெரிக்காவின் பெட்ரோ-டாலர் சைக்கிள் ஏமாற்று:

குறிப்பாக, அமெரிக்காவின் இந்த சுக போகத்திற்கு உற்ற துணைவர்களாக திகழ்ந்த மற்றும் திகழும் ‘பெட்ரோல் உற்பத்தி செய்யும்’ முஸ்லிம் நாடுகள் தான், இந்த ‘துப்பாக்கி’ முனையிலிருந்த நாடுகள்.

இந்த நாடுகள், அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்கவை பற்றிய ஒரு பிரமிப்புடனும், அவர்கள் எது செய்தாலும் சரி என்ற எண்ணத்துடனும், அவர்களால் எதுவும் முடியும் என்ற மயக்கத்திலும் இருந்தனர்.

எனவே, தங்கள் நாடுகளில் கிடைக்கும் இயற்கை வளமான பெட்ரோல் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்வார்கள்.

ஆனால் நாங்கள் வட்டி வாங்குவதில்லை என்று கூறிவிட்டு, தங்களது ‘பெட்ரோ-டாலர்’ வங்கி வைப்பு பணத்தை வைத்து, அமெரிக்காவை ‘வட்டிக்கு விட்டு’ சம்பத்திக்க விட்டு ‘மஞ்சள் குளிக்க’ காரணமான, இந்த முஸ்லீம் நாடுகளின் முட்டாள்தனமான போக்கு, இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

ஏனெனில் ‘இஸ்லாம்’ வட்டியை கொடுப்பது மற்றும் வாங்குவதை மட்டும் தடை செய்யவில்லை அதற்கு துணை போவதையும் தடை செய்துள்ளது.

ஆக, இவ்வாறெல்லாம் ‘வட்டி பணத்தில்’ திளைத்து, கொழுத்த அமெரிக்கா, தனது மக்களுக்கு உலகில் வேறெங்கும் காணமுடியாத ‘நாலு நாள்’ வேலை நாட்களை அறிமுகப்படுத்தி, அமெரிக்கர்களை முழு சோம்பேறிகளாக்கி கொழுக்க வைத்தது.

இவ்வாறு தொப்பை பெருத்த குண்டர்களாக மாறி, இப்போது அதன் விளைவாக பெரும்பாலான அமெரிக்கர்கள் ‘அதிக எடை’, ‘இதய நோய்’, ‘நீரழிவு’ என அவதிப்படுவதும் யாவரும் அறிந்ததே.

இதன் நேரடி விளைவாக அமெரிக்காவின் மொத்த உற்பத்தி பாதிக்கப்பட்டு, மீழ முடியாத நிலையில் இன்று ‘அமெரிக்க பொருளாதாரத்தையே படுத்த படுக்கையாக்கி’ விட்டது.

ஆக, அமெரிக்காவின் பொருளாதார சீரழிவிற்கு அமெரிக்கர்களின் செயல்பாடுகள் காரணமான அளவு உலக நாடுகள் பலவற்றின் ஏமாளித்தனமான, கோமாளித்தனமான செயல்பாடுகளும், காரணம் என்பதை மறுக்கவியலாது’, என்று தனது கருத்தை விரிவாக கூறினார் புகழ்பெற்ற இந்திய பங்குசந்தை ஆய்வாளரான திரு. மு. சாதிக்.

இவ்வாறாக கடுமையாக தேங்கி போன அமெரிக்காவின் வளர்ச்சி மற்றும் அதனால் விளைந்த வேலையின்மை மற்றும் அதனால் விளைந்த பொருளாதார தேக்கம் யாவும் சேர்ந்து அமெரிக்காவை, ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் போக்கிலேயே போக வைத்து ‘திவாலாக்கலாம்’, என்னும் இன்றைய மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.


அமெரிக்க-சீன ‘பரஸ்பர ஒட்டுண்ணி’ உறவு:

அவ்வாறு அமெரிக்கா ‘திவாலானால்’, அதனால் பெரும் பாதிப்பை அடையப்போவது, உலகின் ‘தொழிற்சாலையான’ சீனவாகவே இருக்கும்.

உள்ளதை சொல்லப்போனால் இந்த ஒரு விடயம்தான் அமெரிக்காவை இதுவரை திவாலாகாமல் காப்பாற்றி வருகிறது.

சீனாவின் உயிர் நாடியே, அது அமெரிக்காவிற்கு செய்யும் ஏற்றுமதியில் தங்கியுள்ளது.

இது தவிர அமெரிக்காவின் ‘கடன் பத்திரங்களை’ ஒரு லட்சம் கோடி டாலருக்கு மேல் சீனா வாங்கி குவித்துள்ளது.

இந்நிலையில் ‘அமெரிக்கா’ மூழ்கினால் அதனோடு சேர்ந்து ‘சீனாவையும்’ இழுத்துக்கொண்டு சென்றுவிடும் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்த காரணங்களால் கடும் எரிச்சலடைந்த சீனா தனது கோபத்தை எப்போதுமில்லாத வகையில், முதன்முறையாக ஒரு ‘ஈட்டிக்காரனின்’ அதிகாரத்தோடு சர்வதேச ஊடகங்கள் வழியே முதன் முறையாக காட்டிய போது ‘அமெரிக்காவுடன்’ உலகமே அதிர்ந்தது.

அதன் சாரம்சமாவது, "சீனாவிடம் உள்ள, அமெரிக்க கடன் பத்திரங்களின் மதிப்பை உறுதி செய்து, கடன்களை தீர்க்க வேண்டும் என, கேட்க எங்களுக்கு முழு உரிமை உண்டு.

அமெரிக்கா, தனது கடன் தொல்லையிலிருந்து உடனடியாக விடுபட, ராணுவம் மற்றும் சமூக நலச் செலவுகளைக் குறைகட்டும்.

அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறைவு, உலகப் பொருளாதார மீட்சியை தடுத்து மற்றொரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும்.

எனவே, அமெரிக்கா தன்னை திருத்திக்கொள்ளவேண்டும். இப்போதே".

கிராமத்து பாணியில் எளிமையாக சொல்வதானால் சீனா அமெரிக்கவை பார்த்து இப்படி கூறுகிறது. ‘டேய்! அமெரிக்காரா பயலுவளா,,, முதல்ல எங்க கடன அடைங்கடா! வல்லரசா இருக்குரத்துக்கு முன்னாடி, முதல்ல நல்லரசா இருங்கடா!’ என்று அமெரிக்காவின் வாசலில் வந்து கத்தி மானத்தை வாங்கி கொண்டுள்ளது..

சதாம் ஹுசைன் கொடுத்த முதலடியும் அமெரிக்காவின் பதிலடியும்:

சீனா அடுத்து கூறுவதுதான் முக்கியமானது.

ஏனெனில் இதையே 2006 ஆம் ஆண்டு ‘சதாம் ஹுசைன்’ துணிச்சலாகவோ, விரக்தியிலோ கூறி செயல்படுத்தியபோது ‘ஜார்ஜ் புஷ்’ தலைமையிலான அமெரிக்காவின் ‘வலது சாரி தீவிரவாதிகளின்’ அரசு, ‘பேரழிவு ஆயுதங்கள்’ இருப்பதாக பொய்யாக பழிபோட்டு போர் தொடுத்து, சதாமை தூக்கில் போட்டு இராக்கை ‘கற்பழித்தது’.

சீனா இராக்குமல்ல, சீனர்கள் முட்டாள்களுமல்ல எனவே, சதாம் ஹுசைன் கூறியதை இப்போது சீனா கூறும்போது அமெரிக்கா, அவமானத்தில் தலையை தொங்கப்போட்டுள்ளது.

சரி அப்படியென்ன பொல்லாததை கூறிவிட்டது சீனா எனபதை பார்போமா?

‘இந்த பிரச்சனை எல்லவாற்றிற்கும் காரணம் அமெரிக்க டாலர் தான், எனவே, புதிய, ஏற்ற இறக்கமில்லாத, பாதுகாப்பான உலக கரன்சி ஒன்றை, உருவாக்கினால், அமெரிக்கா போன்ற தனி நாடு செய்யும் செலாவணி மோசடியை அது தடுக்கும்’, எனபதே சீனா கூறிய ‘சதாம் ஹுசைன்’ தத்துவம்.

இதையே 2006 ஆம் ஆண்டு வேறு விதமாக அப்போதிருந்த சூழலில் சாத்தியமாகக்கூடிய வகையில் கூறிய சதாம் ஹுசைன், ‘யுரோவிலும் உலக நாடுகள் பெட்ரோல் வாங்கலாம் என்ற அறிவிப்பை’ வெளியிட்டார்.

சதாம் ஹுசைனின் இந்த அறிவிப்பை கேட்டு இடியோசை கேட்ட நாகமாய் அரண்டனர் அமெரிக்கர்கள்.

ஏனெனில், அமெரிக்கர்களின் இரண்டு நூற்றாண்டு ‘வட்டி’ மற்றும் போலிப்பொருளாதார புரட்டுக்களுக்கு ‘சதாம் ஹுசைனின்’ அறிவிப்பு முதன் முதலாக வேட்டு வைத்தது.

சதாம் ஹுசைன் செய்ததை அணு ஆயுத வல்லமை கொண்ட ‘சோவியத் ரஷ்யாவாலும்’ செய்ய இயலவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உடனே, பேரழிவு ஆயுதம் என்று பொய்யாக பொங்கிய ‘ஜார்ஜ் புஷ் ஜூனியர்’, இராக்கை ஆக்கிரமித்து இரண்டே வாரத்தில் ‘வெற்றி அறிவிப்பை’ வெளியிட்ட கூத்தும் நடந்தது.

பின்னர் அமெரிக்கா வீரர்களின் ‘பிணப்பைகள்’ வரத்தொடங்கி சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி இராக்கியர்கள் ‘படுகொலை’ செய்யப்பட்ட அவலமும் நடந்தது.

இறுதியாக அமெரிக்க ஜனாதிபதிகளில் ‘செருப்படி’ வாங்கி தனது பதவிக்காலத்தை முடித்த முதல் ‘ஜனாதிபதி’ என்ற இழிவுடன் ‘ஜார்ஜ் புஷ் ஜூனியர்’ வெளியேற நேர்ந்தது.

சதாம் ஹுசைன் இவ்வாறு கூறுவதற்கு முன் முஸ்லீம் நாடுகள் தாங்கள் பெட்ரோல் விற்று, ‘டாலர்களில்’ பெற்ற வருமானத்தை அமெரிக்க வங்கிகளில் வட்டி வாங்காது விடவே, அந்த வட்டி பணத்தை தனது உலக வல்லான்மையை பெருக்கிக்கொள்ள செலவிட்டது அமெரிக்கா (Petro-Dollar Cycle).

உலகெங்கும் உள்ள கிருத்துவ மிஷனரிகள் மற்றும் NGO க்கள் இதற்காக முஸ்லீம்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

ஏனெனில் அவர்கள் பெறும் உதவித்தொகை ‘முஸ்லீம் நாடுகள்’ விட்டு விட்ட இத்தகைய வட்டித்தொகைதான்.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த முஸ்லீம் நாடுகள் தமக்கு வேண்டாம் என்று விட்ட வட்டித்தொகையில் ஒரு பகுதி அந்த நாடுகளுக்கெதிராகவே, இஸ்ரேலுக்கும் அதன் ராணுவத்திற்கு அமெரிக்காவால் பெரிய மனதுடன் உதவியாக கொடுக்கப்படுவதுதான்.

தேவைப்பட்டால் தனது ‘கெட்டுவிட்ட பெயர்’ பற்றி கவலைப்பாடாத இஸ்ரேலை வைத்து குண்டு போட்டு நகரங்களை தரைமட்டமாக்கி, முஸ்லீம் நாடுகளை மிரட்டலாம் அல்லவா?

கடங்கார அமெரிக்கவும் ஈட்டிக்கார சீனாவும்:

ஆனால், அமெரிக்காவின் செயற்கைகோள்களை தரையிலிருந்தே ‘அழித்து நொருக்கக்கூடிய’ லேசர் தொழில்நுட்பம் கொண்ட சீனாவிடம் இப்படி வாலாட்ட முடியுமா என்ன? ஒட்ட அறுத்து விட மாட்டார்கள்ஸ ‘அறுத்துஸ’!!

செயற்கை கோள்களே போனபின்னர் F-16 ஆவது F-118 ஆவது, ‘வான்வெளி மேலாதிக்கமாவது’ (Aerial Superiority), அமெரிக்காவின் வான்வெளியே சீன கட்டுப்பாட்டிற்கு சென்றாலும் ஆச்சர்யமில்லை.

மொத்தத்தில் ‘வல்லரசான’ அமெரிக்காவிற்கு கடன் கொடுத்துள்ள நாடு என்ற முறையிலும், அதி நவீன ராணுவ மற்றும் பொருளாதார வல்லமையுடைய, ஐநாவில் ‘ஒதுக்கும்’ அதிகாரம் (Veto) பெற்ற நாடு என்ற வகையிலும் ‘சீனாதான்’ இன்றைய உலகின் உண்மையான ‘வல்லரசு’, என்றால் அது மிகையாகாது.

எனவே தான் சீனா தனது வாசலுக்கு வந்து ‘சிங்க குரலில்’ கத்துவதை கேட்டுக்கொண்டு தலைகுனிந்து நிற்கிறது அமெரிக்கா.

அதேநேரம் சீனா எவ்வளவு கத்தினாலும், அமெரிக்கா தனது கடன்களை கட்ட இயலாமல் ‘திவாலானால்’ சீனா முப்பது ஆண்டுகளாக சிறுகச்சிறுக சேகரித்து, கடும் தியாகங்களை புரிந்து, ‘கடும் முயற்சி’, ‘உழைப்பு’ மற்றும் ‘திட்டமிடுதல்’ ஆகிவற்றால் பெற்ற இந்த முன்னேற்றம் யாவும், முப்பதே நாட்களில் ‘ஆவியாகப் போகும்’, என்பதும் அமெரிக்காவிற்கு தெரியும்.

‘அமெரிக்காவுக்கு இது தெரியும் என்பது சீனாவிற்கும் தெரியும்’.

எனவே தான் ‘சீனாவும்’, ‘அமெரிக்காவும்’ பரஸ்பர ஒட்டுண்ணிகளாக (Symbiotic Relationship) வாழ்ந்தே தீரவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அமெரிக்க-சீன உறவு, ‘விவாகரத்து செய்ய முடியாமலும், வேறு வழியில்லாமலும், விரக்தியில் வாழும் கணவன் மனைவி போல’, என்றால் ‘பல’ வாசகர்களுக்கு புரியலாம்.

என்ன பெருசா.. போச்சுஸ எங்க அமேரிக்காஸ இராக்கை செய்தது போல.. சீனா ஒரு ‘கம்யுனிச பயங்கரவாத நாடு’ என்று பழிபோட்டு, அதன் சொத்துகளை முடக்கினால் போச்சு, என்று யாரும் நினைக்கூடாது.

ஏனெனில். சீனா ‘சோவித் ரஷ்யா’ அல்ல. அமெரிக்காவை விட பல மடங்கு அதிக உலகளாவிய ‘பொருளாதார வல்லமை ‘, ‘சர்வதேசா மீடியா வலிமை’ (கிழவன் ருபெர்ட் முர்டோகை, இளம் சீன பெண் வேறு எதற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டும்? என கேட்டுப்பாருங்கள்) மற்றும் ‘உள்நாட்டு கட்டமைப்புடன்’ (உலகின் அதிவேக ரயில்கள்) உள்ளநாடு.

எனவே, அப்படி ஒரு மோதலில் சீனா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் நிலையும் நாறிப்போகும்.

குறிப்பாக அமெரிக்கா சற்று அதிகமாக ‘நாறி’ நாடாகவே மதிக்கப்படாத நிலையை அடையும் (அட.. மஞ்ச நோட்டிஸ் கொடுத்தவன் நிலைமை தாங்க..).

ஆனால் இந்த சீன-அமெரிக்க பரஸ்பர ‘ஒட்டுண்ணி’ வாழ்வு, ‘எவ்வளவு நாட்களுக்கு’ தாக்கு பிடிக்கும் என்பதுதான் ‘மில்லியன் டாலர் கேள்வி’.

‘நாறிப்போனாலும் பரவாயில்லை என்று, இரண்டில் ஒரு நாடு நினைத்தாலும், கதை கந்தலாகிவிடும்’.

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் விளாசிய விளாசல்:

அமெரிக்காவிற்கு ‘கடன் கொடுத்த’ சீனா, ‘ஈட்டிக்கரனின்’ உரிமை மற்றும் அதிகாரத்துடன் கேட்கும் கேள்விகள் ஒரு புறமிருக்கட்டும்.

முன்னதாக , அமெரிக்கா தனது பிரச்சார யந்திரங்களாலும் ‘ஹாலிவுட்டின்’ அரை மற்றும் முழு நிர்வாண ‘அம்மணிகளாலும் ‘ உலகை ‘அமெரிக்க’ நுகர்வு வெறியின் பக்கம் கவரந்திழுத்துதது.

இதோடு விட்டதா, தனக்கு போட்டியான கம்யுனிச ‘சோவியத் ரஷ்யாவை’ ஒழித்து கட்டி, ஆட்டம் போட்ட அமெரிக்காவை ‘நேரம் வரட்டும்’ என கருவிக்கொண்டிருந்தாற்போன்று, சவுக்கடி கொடுத்துள்ளார் ஒருவர்.

தனது சுளீர் கருத்தால் சவுக்கடி கொடுத்தது வேறு யாருமல்ல, முன்னால் கேஜிபி யின் (KGB- Komitet gosudarstvennoy bezopasnosti or Committee for National Security) சர்வதேச உளவாளியாக இருந்து, ரஷ்ய ஜனாதிபதியாக உயர்ந்து, தற்போது பிரதமராக இருந்துஸ ரஷ்யாவை இன்னும் கேஜிபி பாணியில் கட்டுபடுத்தும் விளாடிமிர் புட்டின் தான் அவர்.

என்ன ‘சவுக்கடி கொடுத்தார்’ என்று பார்த்தோமானால், இந்த கட்டுரை ஆசிரியனின் அறிவிற்கெட்டிய ‘கெட்ட வார்த்தைகள்’ ஏன் ‘அமெரிக்கர்களுக்கு’ போதவில்லை என்ற காரணத்தை எனது அன்பு வாசகர்கள் ஓரளவுஸ. ஓரளவிற்கு மட்டும்தான்.. அறிந்து கொள்ளலாம். .

புடின் கூறினார், " அமெரிக்கா தனது தகுதிக்கு அப்பாற்பட்டு செலவு செய்கிறது.

அந்த செலவின் சுமையை உலகப் பொருளாதாரமே சுமக்கும் படிச் செய்கின்றது (அப்பாவி முஸ்லிம் பெட்ரோல் வள நாடுகள் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து பெட்ரோ-டாலர் சைக்கிளை ஓட்ட வைத்து).

இவ்வாறான டாலரின் ஏகபோகத்தைக் கொண்டு உலகப் பொருளாதாரத்தை சுரண்டும் ஒட்டுண்ணியாக அமெரிக்கா திகழ்கிறது".

புடினின் கூறுவதை, இப்படி எளிமையாக கூறலாம். ‘அட, அமெரிக்கா மொள்ள மாறி பசங்களா!!

திருட்டு பசங்களா!!! தகுதியில்லாம ஆட்டம் போடுற ரவுடிங்களா!!!

ஊரை கொள்ளையடிச்சு, பசப்புற படுபாதகர்களா!!! மனுஷ கறி தின்னு வாழுற காட்டுமிராண்டிகளா!!!, என்று சற்று கௌரவமாக மொழிபெயர்க்கலாம்.

உலக வரலாற்றில் எத்தனையோ நாடுகள், அரசுகள் இருந்தன மறைந்தன.

பல நாடுகள், வேறு பல நாடுகளை அடிமைபடுத்தி, கொடுமைபடுத்தி இருக்கலாம்.

ஆனால் எந்த ஒரு நாடும், அதன் மக்கள் இனமும் அமெரிக்கா செய்த ‘மனித குலத்திற்கெதிரான’ அழிவு வேலையை, அமெரிக்கா செய்தது போன்று பொருளாதார ரீதியிலும், ஆயுத ரீதியிலும் உலக அளவில் இதுவரை செய்ததில்லை.

அமெரிக்காவின் போருளாதார குற்றங்களுக்கு ‘பெட்ரோ-டாலர் சைக்கிள்’ ஒன்றே போதும்.

அரசியல் பிழைத்தாருக்கு பொருளாதாரமே கூற்றாகும்!!!

இந்த உலகளாவிய பொருளாதார பின்னடைவின் மற்றுமொரு மோசமான அங்கம் என்னவென்றால், உலகின் பொருளாதார கேந்திரமான நாடுகளின், நிதி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பலவீனம் மற்றும் மோசமான செயல்பாடு.

அமெரிக்கவின் கருப்பர் ஜனாதிபதியாகவும் அதனால் ‘ஏக பத்தினி விரதனாகவும் திகழும்’ ஒபாமா, பிரதிநிதிகள் சபையில் ‘குடியரசு கட்சியை சேர்ந்த டீ பார்டி தீவிரவாதிகளின்’ பெரும்பான்மை பலத்தால் அரசியல் ரீதியாக பலவீனமான நிலையில் உள்ளதை யாவரும் அறிவர்.

இந்நிலையில், திவாலாகவிருக்கும் ‘இத்தாலி’ நாட்டின் பிரதமர் மற்றும் உலக வங்கியின் ‘முன்னாள் தலைவன்’ டொமினிக் ஸ்ட்ராஸ் கான் போன்றோர்கள் ‘பொருளாதாரம்’ குறித்து கவலையில்லாத ‘காமுகர்களாக’ சல்லாபித்து அதனால் வரும் பிரச்சனைகளோடு போராடுவதில் தங்களை இழந்து தங்களின் பொறுப்புகளை கைவிடும் நிலைக்கு போவதும், தற்போதைய நிலைகளுக்கு ஒரு மறைமுக காரணமாகிவிட்டது.

இதற்கு மற்றுமொரு நல்ல உதாரணமாக திகழ்வது ‘பிரஞ்சு’ ஜானதிபதியான ‘சர்கோசி’.

திறமை இல்லாமல், தீவிர வலதுசாரி சந்தர்ப்பவாதியாக இருந்து கொண்டே ‘ஒழுங்கீனத்திலும்’ முன்னணி வகிக்கும் ‘சர்கோசி’ போன்ற தலைவர்கள். ‘உலக பொருளாதாரத்தை’ வெகு வேகமாக தங்களது திறமையின்மையை வைத்து ‘ஒழித்து கட்ட’ துடித்து கொண்டிருக்கின்றனர் எனபதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஐரோப்பாவின் போருளாதார பிரச்சனைக்கான தீர்வாக இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி உதிர்த்த பொன்மொழி என்ன தெரியுமா?

உடனடியாக ஜி 7 நாடுகளின் ‘நிதியமைச்சர்கள்’ கூட்டத்தைக் கூட்ட வேண்டுமாம், அதில் யூரோ பயன்படுத்தும் நாடுகளின் கடன் பிரச்னையைத் தீர்க்க வேண்டுமாம்.

இந்த ‘அழகிகளின் தாசன்’ என்ன கூற வருகின்றார் என்றால், தனது பிரச்சனைகளையே தீர்க்க முடியாமல் திண்டாடும் அமெரிக்காவும், சம்பந்தமில்லாத ஜப்பானும், தேமே என்றிருந்து அடுத்து ‘திவாலாகலாமா, வேண்டாமா’ என்று யோசிக்கும் கனடாவும், இவர் ‘அழகிகளுடன்’ பொழுதை கழிக்க ஏதுவாக ‘இத்தாலியின்’ கடன் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதுதான் அவரது கூற்றின் உண்மையான கருத்து.

‘இத்தாலி என்று கூறுவதற்கு வெட்கப்பட்டு, அல்லது ‘அழகிகளுடன்’ பொழுது போக்கும் தனது திட்டத்தை மறைக்க, ‘ஐரோப்பா’ என்று கூறியுள்ளார் இந்த மகானுபவன்.

இவரின் இந்த அபத்த கருத்தை சர்வதேச நாடுகள் எதுவும் கண்டுகொள்ளமால், பதிலளிக்காமல், எதிரொலிகாமல் இருந்த ஒரு விடயமே இவரையும், இவரது கருத்தையும் மற்ற நாடுகளின் தலைவர்கள் எவ்வாறு மதிக்கின்றனர் என்பதற்கு ஆதாரம்.

அமெரிக்க-ஐரோப்பிய பின்னடைவும் அயோக்கிய தலைவர்களும்!!

மொத்தத்தில் உலகின் ‘பொருளாதார கேந்திரங்களின்’ தலைவர்கள், அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ கடும் ‘பலவீனர்களாக’ உள்ளனர்.

இவர்கள் நடப்பு பொருளாதார சிக்கல்களை தீர்ப்பது அப்புறம் இருக்கட்டும். இவர்களால் தங்களது ‘அரசியல்’ மற்றும் ‘சல்லாப’ சிக்கல்களையே தீர்க்க இயலாத நிலையில் உள்ளனர் எனபதுதான் இன்றைய நிதர்சனம்.

தற்போது அமெரிக்காவும், ஐரோப்பாவும் இன்று சிக்கி தவிக்கும் பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பது ஒரு புறமிருக்க, அதை எதிர் கொள்ளுமளவிற்கு ஒரு உறுதியான, முழுமையான திட்டத்தை கொண்டுவர நல்ல தலைவர்கள் இல்லாத நிலை உள்ளது.

இருக்கும் சிலரில், அமெரிக்க ஜனாதிபதி போன்ற உண்மையிலேயே திறமையான நல்ல தலைவர்களும், சூழ்நிலை கைதிகளாகி, பிரச்சனையின் ஆழத்தை உணர்ந்து உறுதி காட்டாமல், தட்டிகழித்து அவற்றை தீர்க்க தவறிவிட்டனர் என்ற கருத்து இன்று சர்வதேச சந்தையில் ‘முதலீட்டாளர்களிடையே’ நிலவுகின்றது.

இவ்வாறாக அமேரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இரண்டு கண்டங்களிலும் உள்ள முன்னணி பொருளாதாரங்களின் அரசியல் மற்றும் நிதி நிர்வாகிகளின் மீதான நம்பிக்கையிமை காரணமாகவே, சர்வதேச அளவில் சந்தைகளில் பெரும் நிச்சமயற்ற நிலை அதிகப்பட்டு காணப்படுகிறது.

இதுவரை வர்த்தகர்கள் மிகவும் பாதுகாப்பானது என்று கருதிய முதலீடுகள் கூட தற்போது உள்ள நிலையில் மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படும் நிலையில், உலக பொருளாதார கப்பலை, ஓட்டும் மாலுமிகலான தலைவர்களும் இது போன்றிருந்தால், அந்த கப்பலில் பயணிக்கும் ‘முதலீட்டாளர்கள்’ நிலை எவ்வாறிருக்கும் என்பதை அனுமானிப்பது கடினமில்லை.

இவ்வாறான ‘எதிர்மறை எண்ணங்களை’ தோற்றுவிக்கும் காரணிகளின் நேரடி விளைவாக சர்வதேச சந்தையிலிருந்து பெரிய அளவில் முதலீட்டாளர்கள் வெளியேறி, தங்களது முதலீட்டை இது போன்ற சமயங்களில் பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தை வாங்குவதில் திருப்பி விடுவதால், சந்தைகள் இறங்கும் அதே வேகத்தில் தங்கத்தின் விலை படு வேகமாக ஏறுகிறது.

இவ்வாறான மோசமான சர்வதேச போருளாதார சூழலில், அமெரிக்காவும் சிக்கி சின்னாபின்னமானால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும்.

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும் அதனால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளும்:

முதலில் இது குறித்து பாஜக வின் ‘அன்புக்குரிய’ காங்கிரஸ்காரர்களில் ஒருவரும், நமது நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி என்ன கூறுகிறார் என்று பார்போம்.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,"இது மிகவும் அபாயகரமானதுதான்.

எனினும் இதன் விவரங்கள் முழுதாக வெளிவந்து அவற்றை ஆராய்ந்த பின்னர் தான் எதையும் கூற முடியும்.

எனினும் வெளிநாட்டு பொருளாதார நெருக்கடிகளால் விளையும், ஆபத்தான நிலைமைகளை சமாளிக்கும் திறன், நமது பங்குச் சந்தைகளுக்கு இருக்கிறது’ ", என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இவரது கருத்துக்களில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.

முதலாவதாக அமெரிக்காவின் பொருளாதார நிலை, இந்தியாவின் பார்வையில் மிகுந்த கவலை தரக்கூடியது.

இரண்டாவதாக, இது குறித்து முன்கூட்டியே கருத்து சொல்வது சாத்தியமில்லாத அளவிற்கு ‘நிலைமை மோசமாக இருக்கிறது’ அல்லது ‘எது வேண்டுமானாலும் நடக்கலாம்’.

மூன்றாவதாக எந்த ஒரு மோசமான நிலைக்கும் நாம் தயாராக உள்ளோம் அல்லது இருக்க வேண்டும்.

ஆக, உலகமயமாக்கம் மற்றும் மின்னணு தொழிநுட்ப புரட்சியால் இன்றைய உலகம் சார்ந்தியங்கும் முறை பரவலானதாகவும், வேகமானதாகவும் மாறி எதுவும் நடக்கலாம் என்றாகிவிட்ட நிலையில் எதற்கும் தயாராக இருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை எனபதே நிதர்சனம்.

நவீன மின்னணு தொழில்நுட்பத்தால் ‘ஒத்த நேரத்தில்’ (Real Time) இயங்கும், உலக பொருளாதாரத்தில் விளைவுகளோ பாரதூரமானது.

உலகின் எந்த பகுதியில் பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நிகழ்வும் நடந்தாலும், உலகம் முழுவதும் ஒத்த நேரத்தில் (Real Time) அதன் எதிரோலிப்பை உடனடியாக ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான ‘ஒத்த நேர’ (Real Time) இயக்கத்தில் இயங்கும் உலகின் பொது செலாவணியாக அமெரிக்காவின் ‘டாலர்’ கருதப்படும் நிலையிலும், உலகின் அதி முக்கிய, அதி தீவிர நுகர்வோரை கொண்டு பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடு என்ற அடிப்படையிலும் அமெரிக்காவின் பொருளாதார பாதிப்பு உலகெங்கும் உடனடியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

தற்காக்கும் இந்திய தந்திரங்கள்:

அமெரிக்காவின் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட போவது அமெரிக்காவிற்கு பெருமளவில் பண்டங்களையும் சேவைகளையும் ஏற்றுமதி செய்யும் நாடுகளும், அமெரிக்க ‘கடன் பத்திரங்கள்’ மற்றும் ‘டாலர்களை’ தமது ‘அன்னிய பரிமாற்ற இருப்பாக’ (Forex Reserve) வைத்திருக்கும் நாடுகள் தான்.

இந்த இரு விடயங்களிலும் சீனாவும், இந்தியாவும் முன்னணியில் இருந்தாலும், இந்தியாவிற்கு இதனால் வரும் பாதிப்பு சற்று குறைவாக இருக்கவே வாய்ப்பதிகம் என கருதப்படுகிறது.

இதற்கு காரணம் இந்தியாவின் பாரம்பரிய குணமான ‘நட்டங்களை தவிர்க்க அல்லது குறைக்க முயலும்’ (Risk Averse) குணம்தான்.

இதனால் தான் உலகமயமான இந்த நிலையிலும் இந்தியா தன்னை தற்காத்து கொள்ளுமளவிற்கு, சீனாவை போன்று அமெரிக்க பொருளாதாரத்துடன் ‘ஆழமான பிடிமானமில்லாத’ (De-coupled) பொருளாதாரமாக திகழ்கிறது.

இந்தியாவை பொறுத்த வரை தனது ‘அன்னிய பரிமாற்ற இருப்பை’, பிற நாடுகளில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.

முதலாவதாக தனது ‘அன்னிய செலாவணி இருப்பில்’ தங்கத்தின் அளவை கூட்டுதல், டாலர் தவிர யுரோ, ஏன் போன்ற பிற நாடு செலாவணிகளையும் தேவையான அளவிற்கு பரந்துபட்ட அளவில் வைத்திருத்தல் போன்றவைகளை (Hedging) செய்து தனது ‘அந்நிய செலாவணியின்’ மதிப்பை பாதுகாத்து கொள்கிறது.

சமீபத்தில் ஜூலை 29 அன்று நிலவரப்படி இந்திய ‘அன்னிய செலாவணி இருப்பு’ 319 ஆயிரம் கோடி டாலர்கள் இருந்தாக ‘இந்திய ரிசேர்வ் வங்கி’ வழங்கிய தரவு (Data) கூறுகிறது.

இவ்வாறு இந்திய அன்னிய செலாவணி மதிப்பு உயர்விற்கு முக்கிய காரணம் இந்தியாவின் ‘தங்க இருப்பும்’, ‘யுரோ இருப்பும்’ டாலரின் சரிவிற்கு எதிராக உயர்ந்தது தான் என கூறுகின்றார், ஸ்டாண்டர்ட் சாடர்ட் வங்கியின், இந்திய ஆய்வு பிரவு தலைவரான சமீரன் சக்ரபோர்த்தி.

எப்படி சரியும் இந்திய சந்தை?

இவ்வாறாக தனது அந்நிய செலாவணி இருப்பை இந்தியாவால் பாதுகாக்க இயன்றாலும், அமெரிக்க போருளாதார வீழ்ச்சியின் பாதிப்புக்கள் ஏற்படுத்தும் பங்கு சந்தை ரீதியான, வேலை வாய்ப்பு மற்றும் சேவைத்துறை ரீதியான, அரசியல் மற்றும் ராஜ தந்திர ரீதியான பாதிப்பிலிருந்து விடுபடுவதோ, தற்காத்துகொள்வதோ இயலாத விடயம்.

முதலாவதாக அமெரிக்கா போருளாதார பின்னடைவு இந்திய பங்குச்சந்தைகளில் எத்தகைய பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்திய பங்கு சந்தைகளில் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பாடும் பாதிப்பு குறித்து பங்குச்சந்தை ஆய்வாளரான திரு. மு.சாதிக் அவர்கள் கூறும்போது,

‘அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலி விளைவுகள், இந்திய பங்குச்சந்தைகளில் ஐந்து கட்டங்களாக தாக்கத்தை ஏறபடுத்தும்.

முதலாவதாக இந்திய பங்குச்சந்தையிலிருந்து ‘அன்னிய முதலீட்டாளர்களின்’ (FDI) வெளியேற்றம் தொடங்கும்.

இதனால் விளையும் பங்கு சந்தை சரிவால் யாவரும் தங்களது பங்குளை விற்க தொடங்குவார்கலாதலால், சந்தையின் ‘நாடித்துடிப்பு குறைய தொடங்கும்.

இதனோடு சேர்ந்து ‘முதலீட்டாளர்கள்’ ‘லாபம் பார்க்க’ எண்ணி (Profit Booking) பங்குகளை விற்கும் போது சந்தை மேலும் சரியும்.

அடுத்ததாக தங்களது ‘பங்குகளை’ அடமானம் வைத்து பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள ‘வர்த்தகர்களின்’ அடமான பங்குகளின் மதிப்பு குறைவை காட்டி, நட்டத்தை தவிர்க்க முயலும் ‘பங்கு தரகர்களும்’ விற்க தொடங்குவதால் மேலும் சரிவு ஏற்படும்.

இவற்றோடு பெரு முதலீட்டாளர்களின் ‘அல்கோரிதமிக் அல்லது தானியங்கி வர்த்தக’ (Algorithamic Trading) விற்பனை கட்டளைகள் தூண்டலால் பங்குகள் பெருமளவில் விற்கப்படும்போது, பங்கு சந்தை பெரும் சரிவை சந்திக்கும்.

இறுதியில் ‘முதலீட்டாளர்களின்’ எதிர்மறை உணர்வால் ‘அடி மட்டத்தை’ அடையும்’ நிலை வரும், என்று கூறினார்.

இந்தியாவில் சரியக்கூடிய முக்கிய துறைகள்:

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி இந்திய பங்குச்சந்தைகளில் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் அதேநேரம், அமெரிக்கா நிறுவனங்களில் நடக்கும் ஆட்குறைப்பு போன்றவற்றால் இந்திய சேவை துறை வருமானத்தில் பெருத்த அடி விழும்.

அதே நேரம் ‘வேலையின்மை’ அளவும் பெருமளவில் உயரும்.

இதனால் ஏற்ப்படும் தொடர் விளைவுகளாக பணப்புழக்க குறைவும் வளர்ச்சியில் கடும் தேக்க நிலையும் உருவாகும்.

அடுத்ததாக, பெருத்த அளவில் பாதிக்கப்படுவது ‘ஏற்றுமதி துறையாக’ இருக்கும்.

குறிப்பாக இந்தியாவின் ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் அடிப்படையிலான் சேவைத்துறை’ (IT & ITES) பெரிய அளவில் சவாலை எதிர்நோக்கும்.

இதன் விளைவாக பெருகும் வேலையில்லா திண்டாட்டத்தின், பல்வேறு போருளாதார பின்னடைவையும், சமூக ரீதியான பிரச்சனைகளையும் எதிர்நோக்க வேண்டிவரும்.

இந்த பொருளாதார பின்னடைவின் தாக்கம் கட்டுமானத்துறை, உற்பத்திதுறை என அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்து, நாட்டின் மொத்த வளர்ச்சி வீதத்தை பாத்திது பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும்.

நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்லும்.

இவ்வளவு களேபாரங்களுக்கும் இடையே நாட்டின் சரியான அளவில் பருவ மழை பெய்து, ‘வேளாண் துறை’ வளர்ச்சி தொடர்ந்தால், பெயரளவிலான வளர்ச்சியோடு நாடு ஏதோ காப்பாற்றப்படலாம்.

ஏனெனில், என்னதான் உலகமயம் பேசினாலும் அடிப்படையில் இந்தியா ஒரு மக்கள் தொகை பெருக்கமுள்ள நாடு என்ற அடிப்படையில் உள்நாட்டு தேவைகளை வைத்தே, தனது சந்தையின் வளர்ச்சியை ஒருவாறு தக்கவைத்து, இந்தியா வழக்கம் போல சமாளிக்க இயலும்..

மேலும், இவ்வாறான பொருளாதார தேக்க நிலை மற்றும் அதனால் விளையும் மந்த நிலையில் ஒரு நன்மையையும் உண்டு. அது என்னவென்றால் பணவீக்கம் குறைவதால் விளையும் விலைவாசி குறைவே அது.

அடுத்ததாக அரசியல் மற்றும் ராஜதந்திர அடிப்படையிலான பாதிப்புக்கள் குறித்து பார்க்கலாம்.

பொதுவாக பொருளாதார பின்னடைவானது நாடுகளுக்கிடையேயான ராஜதந்திர நிலவரங்களையும், உள்நாட்டு அரசியலையும் தீவிரமாக பாதிக்கும் தன்மையுடையதாக இருக்கும்.

எனவே அமெரிக்காவுடனான இந்திய ராஜிய உறவில், பல்வேறு காரணங்களால் முன்னதாக ஏற்ப்பட்டுள்ள விரிசலை அது மேலும் பெரிதாக்கலாம்.

இதன் விளைவாக, தனக்கேற்ற ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர வைக்க, இந்தியாவில் உள்நாட்டு பிரச்சனைகளை தூண்டி விட அமெரிக்கக முயலலாம்.

இதற்காகவே காத்திருக்கும் பாஜக போன்ற வலதுசாரி தீவிரவாதிகளோ அல்லது அமெரிக்காவிற்கு பெரிதும் சாதகமான முன்னாள் பாதி வருட பிரதமர் ‘சந்திரசேகர்’ போன்ற பலவீனமான இரண்டும் கெட்டான்களோ கூட இந்தியாவின் ஆட்சியாளராக்கப்படலாம்.

என்ன செய்தால் பித்தம் தெளியும்?

இவ்வாறாக உள்நாட்டிலும், வெளியுறவிலும் இந்தியா பலவீனமாக்கபடலாம்.

எனினும் இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தியவின் சில சாதக அம்சங்கள் இந்தியாவின் கையை ஓங்க செய்யலாம் என்பதிலும் சந்தேகமில்லை.

உதாரணமாக தொழில், விவசாயம் மற்றும் தொழில்நுட்பதுறைகளில் இந்தியா பெற்றுள்ள தன்னிறைவு, இந்தியாவிற்கு சாதகமான நிலைகளை தோற்றுவித்து, அதனால் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படுமானால் நிலைமை தலைகீழாகி, இந்தியா அமெரிக்காவிற்கிணையாக பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஒரு வல்லரசாக வாய்ப்பேற்படும்.

ஆனால் அத்தகைய நிலையை இந்தியா அடைய ஒரு வலுவான, சிந்தனையுடன் கூடிய, நேர்மையான, பிரச்சனைகளில் மாட்டாத, சாதி மற்றும் இன, மொழி வெறி இல்லாத, சாதி, இன மற்றும் மொழி வெறியை எதிர்த்து வெல்ல முடிந்த, வட்டிப் பொருளாதாரத்தை ஒழித்துகட்டகூடிய, இந்திய மக்களின் மீதும், மனித குளத்தின் மீதும் உண்மையான அன்புள்ள, பரந்த மனமுள்ள ஒரு நல்ல தத்துவத்துடன் கூடிய தலைவனும், அரசும் வேண்டும். கிடைக்குமாஸ.?

கிடைக்கவேண்டும். இல்லையென்றால், இந்தியா ‘வல்லராசாகி’ சாதிக்க போவது ஒன்றுமில்லை என்பது குறித்த தெளிவு சற்று முன்னர் ‘அமெரிக்காவிடம் சீனா நாக்கை பிடுங்கி கொள்வது போன்று கேட்ட கேள்விகளை’, படித்த ‘நல்ல உள்ளங்களில்’ பசுமரத்தாணி போன்று பதிந்திருக்குமே.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates