Elegant Rose - Diagonal Resize 2 கல்கி அவதாரம் முஹம்மது நபி அவர்கள் தாம் ~ TAMIL ISLAM

வியாழன், 31 மே, 2012

கல்கி அவதாரம் முஹம்மது நபி அவர்கள் தாம்

("மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்" எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் "கல்கி" பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த "கல்கி" வந்துவிட்டார், அவர்தாம் முஹம்மது நபி(ஸல்) என்று இந்துமத அறிஞர் ஒரு கூறியுள்ளார். அவருடைய ஆய்வுத்தகவலை இங்கு தந்துள்ளோம்)

இந்து வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கல்கி அவதாரம் முஹம்மது நபி அவர்கள் தாம் என்று இந்துமத அறிஞர்கள் சிலர் ஆதாரங்களின் அடிப்படையில் தங்கள் கருத்துகளைச் சொல்லியுள்ளனர். கல்கியைப் பற்றி சொல்லப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் பல முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அப்படியே பொருந்துகின்றன..

பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் காணப்படுகிறது:

"ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாத"

சிஷ்ய சாகா ஸமன்விதம்.."

(பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)

இதன் பொருள்:
"அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்)."

இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதுதானா என்பது பற்றி இந்துப் பண்டிதர்களிடையே கருத்துவேறுபாடுகள் காணப்பட்டாலும், பெரும்பாலான சமஸ்கிருத அறிஞர்கள் இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதே என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.

அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், வங்காள பிராமணருமான பண்டிட் வேத் பிரகாஷ், இந்துப் புராணங்களையும் வேதங்களையும் நன்கு ஆராய்ந்து இந்துக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கல்கி அவதாரம் வேறு யாருமல்ல, அது நபிகள் நாயகம் தான் என்று ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இன்னும் எட்டு அறிஞர்களிடம் தம் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்து, அவர்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் அந்த நூலை அவர் வெளியிட்டுள்ளார்.. அவருடைய ஆய்வு முடிவுகளின் சுருக்கமான விவரம் வருமாறு:

உலக மக்கள் அனைவருக்கும் பகவானின் செய்தியைக் கொண்டு வருபவராக கல்கி இருப்பார் என்று வேதங்கள் கூறுகின்றன. இது நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்குத்தான் பொருந்துகிறது.

கல்கியின் தந்தை பெயர் விஷ்ணு பகத், தாயின் பெயர் சோமாநிப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் "விஷ்ணு" என்றால் இறைவன்(அல்லாஹ்), "சோமாநிப்" எனும் சொல்லுக்குப் பொருள் அமைதி - சமாதனம் என்பதாகும். "ஆமினா" என்பதற்கும் அதுதான் பொருள். அப்துல்லாஹ்வும் ஆமினாவும் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தந்தையும் தாயும்.

கல்கி ஆலிவ் எண்ணையையும் பேரீச்சம் பழங்களையும் உணவாகக் கொள்வார் என்றும், "நம்பிக்கையாளர்" என்று மக்களால் போற்றப்படுவார் என்றும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணையையும் பேரீத்தம் பழங்களையும் உணவாக் கொண்ட நபிகள் நாயகம் அவர்களை "அல் அமீன்" (நம்பிக்கையாளர்) என்று மக்கள் போற்றினர்.

மிகவும் உயர்ந்த குடும்பத்தில் - உயர்ந்த கோத்திரத்தில்தான் கல்கி பிறப்பார் என்று வேதம் கூறுகிறது. மக்காவில் மிக உயர்ந்த குடும்பமான குறைஷிக் குடும்பத்தில் - ஹாஷிம் கோத்திரத்தில்தான் நபிகளார் பிறந்தார்.

குகையில் வைத்துதான் பகவானின் செய்திகள் தேவதூதன் மூலம் கல்கிக்கு கிடைக்கும் என்று வேதம் கூறுகிறது. "ஹிரா" குகையில் இருக்கும்பொதுதான் ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் இறைவனின் திருச்செய்திகள் அண்ணல் நபிகளாருக்கு அருளப்பட்டன.

கல்கிக்கு அதி வேகமுள்ள ஒரு குதிரையை பகவான் அருளுவார் என்றும், அதன் மூலம் அவர் உலகத்தையும் ஏழு வானங்களையும் சுற்றி வருவார் என்றும் வேதத்தில் பதிவாகியுள்ளது. இது அண்ணலார் அவர்களின் விண் பயணத்தைதான் (மிஃராஜ்) குறிக்கிறது.

பகவானின் அளவற்ற அருளும் துணையும் கல்கிக்கு கிடைக்கும் என்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதிலுமே இந்த தெய்வீகத்துணை கிடைத்துள்ளது.

குதிரையேற்றத்திலும், அம்பு எய்வதிலும், வாள் போரிலும் கல்கி நிபுணராய் இருப்பார் என்ற அறிவிப்பு உள்ளது. முஹம்மது நபி இவை எல்லாவற்றிலும் சிறப்புற்று விளங்கினார்.

ஆகவே 1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி அவதரித்து விட்டார். அவர் தாம் முஹம்மது நபி என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் பண்டிட் வேத் பிரகாஷ்.

-சசி-

சமரசம் 1-15 ஜுன் 2004

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates