Elegant Rose - Diagonal Resize 2 மத குருமார்களின் தப்புத் தாளங்கள்! ~ TAMIL ISLAM

சனி, 2 ஜூன், 2012

மத குருமார்களின் தப்புத் தாளங்கள்!

சமீபத்திய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் செய்தி, ''சாமியார்களின் பாலின சித்து விளையாட்டுக்கள்''. துறவறம் பூண்டு, தங்களை ஞானப்பழமாக ஜோடனை செய்து சல்லாபங்களில் ஈடுபட்டு அதனை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு வீடியோ-பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்த, ஊடகங்கள் தங்களுடைய வருமானத்தினை பல மடங்கு பெருக்கிக் கொள்ள வழிவகுத்ததோடு, சாமியார்களின் முகத்திரையினையும் கிழித்தெரிந்திருக்கினர் என்றால் பாராட்டாமல் இருக்க முடியுமா நண்பர்களே?
ஊடகங்கள் இதுபோன்ற பரபரப்புச் செய்திகளை பல தடவை வெளியிட்டாலும் மக்கள் இன்னும் மதிமயங்கி அவர்களின் ஏமாற்று- பம்மாத்து வேலைகளுக்கு பலியாகத்தானே செய்கிறார்கள். பொருளாதார குற்றங்களான
1) குறைந்த அளவு பணம் டெபாசிட் செய்து அதிக வருமானம் ஈட்டுங்கள் என்ற விளம்பரம், 2) குறைந்த பணம் கொடுத்து அதிக பணம் கொடுக்கும் இரட்டிப்பு மோசடி,3) குறைந்த பணம் கொடுத்தால் தங்கம் மழையாக கொட்டும் திட்டம், 4) புறம்போக்கு நில மோசடி, 5) பட்டா நிலத்தை பல பேர்களுக்கு கிரயம் செய்து கொடுக்கும் மோசடி, 6) தங்க நகைகளை பாலிஷ் போடும் ஏமாற்று வேலை,  டிராவல்ஸ் நிறுவனங்களில் வாகனம் வாங்கி முதலீடு செய்தால் மாதாமாதம் செக் கொடுக்கும் மோசடி, 8) வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகச் சொல்லி மோசடி,   
9) கனினி பயிற்சி கொடுத்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறோம் என்று பணம் சம்பாதிக்கும் மோசடி  
10) மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுக்கு அதிக சம்பளத்தில் வேலை போன்ற மோசடிகளை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டினாலும் இன்னும் அதுபோன்ற ஏமாற்று வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆகவே ஏமாறுவர்கள் இருக்கின்றவரை ஏமாற்றுவர் காட்டில் மழை பொழியத்தானே செய்யும். அது போன்ற சாமியார்கள் ஏமாற்று வேலைகளை ஊடகங்கள் வெளியிடாமலில்லை. உதாரணத்திற்கு;
1) சென்னையில் பெண்வேடம் போட்டு கரூர் புதுமண தம்பதிகளை அந்தமானுக்கே அழைத்துச் சென்று சாமி சொல்வதாக சாந்தி முகூர்த்தம் புதுப்பெண்ணிடம் அந்த சாமியார் சதுர்வேதி சல்லாபத்தில் ஈடுபட்டு, அதன் மூலம் கைது செய்யப்பட்டு வழக்கினுக்காக நீதிமன்ற வாசல்களின் படிகளை எண்ணிக் கொண்டுள்ளார்.  
2) இலங்கையிலிருந்து அகதியாக திருச்சிக்கு வந்து, திருச்சி-மதுரை ரோட்டில் ஆசிரமம் அமைத்து அப்பாவி இலங்கை அகதிப்பெண்களை கற்பழித்து, அதனைப்பார்த்த ரவி என்ற வாலிபனை கொலை செய்ததின் மூலம் இரட்டை ஆயுள் தண்டனை கடலூர் சிறையில் அனுபவித்து வரும் வாயிலிருந்து லிங்கம் எடுத்து ஏமாற்றும் பிரேமானந்தா. 3) டெல்லியில் ஆள்கடத்தல்-சினிமா நடிகைகள், ஏர்ஹோஸ்டஸ், கல்லூரி மாணவிகள் போன்றோரை வைத்து விபச்சாரம் செய்து கொண்டிருந்த நவீன ரஷ்புடீனாக காட்சி தரும் இளம் சாமியார் திவேதி கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். அவரிடம் ஊடகங்களின் நிருபர்கள, ''ஆன்மீக பணியில் ஈடுபட்ட நீங்கள் விபசார விடுதியும் நடத்தி இருக்கிறீர்களே அது தவறு இல்லையா?'' என்ற கேள்விக்கு ''செக்ஸும் ஒரு ஆன்மீகமே'' என்று பதிலளித்திருக்கறார் என்றால் இதெல்லாம் ஆன்மீகத்தில் சகஜம்பா என்று சினிமா நடிகர் கவுண்டமனி-ஓமக்குச்சி சம்பாசனையில் சொல்வது போலத் தெரியவில்லையா?  4) காஞ்சிபுரம் சரஸ்வதி சங்கராச்சாரியார் மீது பெண் எழுத்தாளர் அணுராதா ரமணன் பாலியல் குற்றம் சுமத்தி பத்திரிக்கை வெளிச்சம் போடவில்லையா? 5) அதே காஞ்சிபுரத்தில் தேவநாதன் என்ற அர்ச்சகர் சாமியார்கள் எல்லாம் காம வேட்டையாடும் போது ஆச்சாரியார் எவ்வழியோ அதேபோன்று பட்டரும் அவ்வழியே என்று கோயில் கருவறையிலேயே பெண்களின் கற்புகளை சூறையாடியதினை ஊடகங்கள் படம் போட்டு காட்டவில்லையா?  6) அதன் பின்னரும் திருவண்ணாமலையில் பிறந்து படிப்பில் கவனம் செலுத்தாது பெங்களூரிலிருந்து மைசூர் போகும் ரோடில் உள்ள வீடேடி என்ற இடத்தில் 200 ஏக்கரில் ஆசிரமம் அமைத்து நடிகையின் கைகளால் எண்ணை ஸ்நானம் செய்து சல்லாப நீலபடக் காட்சிகனை மிஞ்சும் அளவிற்கு வீடியோவில் படமெடுத்து பத்திரிக்கைகள்-டெலிவிஷன் சேனல்களும் போட்டிபோட்டு விளம்பரப்படுத்தியதின் மூலம் பல வழக்குகளுக்கு தள்ளப்பட்டு தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா போன்ற சாமியார்களின் சித்துவேலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இவ்வளவு நடந்தபின்னரும் சாமியார் நித்தியானந்தா என்ன சொல்கிறார் தெரியுமா? எல்லாம் ''கர்ம விதி'' என்கிறார். அது ''காமப் பசி'' என்று சொல்வதிற்குப் பதிலாக அவ்வாறு சொல்லி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதில் சம்பந்தப்பட்ட நடிகை என்ன சொல்கிறார் தெரியுமா?, ''தான் சாமியார் நித்தியானந்தாவிற்கு செய்த எண்ணெய் குளியல் மற்றும் சல்லாபமும் ஒரு பக்தை சாமியாருக்கு செய்யும் செயல்தான்'' என்று பேட்டியில் சொன்னதாக ஊடகங்கள் சொல்கின்றன.
இந்த நேரத்தில் ''தேவதாசி முறை'' என்று பெண்களை கோவிலுக்கு அர்ப்பணிக்கும் முறையினை ஒழிக்கப் பாடுபட்ட முதல் பெண் எம்.எல்.ஏ என்று புகழ்பெற்ற முத்துலட்ஷிமி ரெட்டி தமிழக சட்டமன்றத்தில் 1927ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ந்தேதி தேவதாசி ஒழிப்புச்சட்டம் கொண்டு வந்து பெண் இன உயர்வுக்கு வழிவகுத்த பின்னரும் நடிகை ரஞ்சிதா சொல்கிறார் சாமி நித்தியானந்தாவுடன் ஈடுபட்ட நீலப்படக் காட்சிகள் ஒரு பக்தையின் செயல் என்று. அவர் சொல்வது பெண்களை தலைகுனிய வைத்த செயலாகவும் முத்துலட்ஷிமி ரெட்டியின் தேவதாசி ஒழிப்புக் கொள்கையினை முறியடிக்கக்கூடியதாக உங்களுக்குத் தெரியவில்லையா?
இது ஒரு புறம் இருக்க அமெரிக்கா, ஜெர்மனி, ஹாலந்து, ஆஸ்ட்ரியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் பாதிரிமார்கள் தேவாலயத்தில் சாமி-கோரஸ் பாட்டுப் பாடும் சின்னஞ்சிறு பாலகர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவலை 14.3.2010-ந்தேதிய ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளனர். அதாவது ஜெர்மன் நாட்டு மக்கள் கிறித்துவ பாதிரிமார்கள் தேவாலயங்களில் சேவையாற்ற சென்ற சிறுவர்களை பாலியல் குற்றத்திற்கு தள்ளியது கண்டு கொதித்தெழுந்து,
அந்த நாட்டு மக்களின் கோபாதாபங்களை 12.3.2010 அன்று ஜெர்மன் நாட்டு பிசப்புகள் போப் பெனடிக்கினைச் சந்தித்து எடுத்துரைத்ததாகவும், இது சம்பந்தமாக முழு விசாரணை நடத்தி மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்போவதாக சொன்னதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் போப்பிற்கும் அவருடைய சகோதரர் மான்சினோர் ஆகியோர்களுக்குக் கூட தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சென்னை மகாபலிபுரத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் மீனவச் சிறுவர்களைப் பராமரிக்கிறேன் எனச் சொல்லி அனாதை விடுதி நடத்தி சிறுவர்களை ஓரினச் சேர்க்கைக்குப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் வீடியோவிலும் அதனைப் பதிவு செய்து வெளி நாட்டில் விற்பனையாக்கி இன்று சிறையிலடைக்கப்பட்டுள்ளார் என்பது ஒரு செய்தியாக இருக்கலாம்.
அதேபோன்று ஓரினச் சேர்க்கை திருமணம் மேலை நாடுகளில் சட்டமாக செயல் படுத்தப்பட்டுள்ளதினை அனைவரும் அறிவர். ஆனால் மேற்கு வங்கத்தினைச்சார்ந்த ஒரு அரசியல் கட்சிக்கு முஸ்லிம்களைச் சேர்க்கும், சிறந்தப் பேச்சாளர் என்று பெயரெடுத்த கல்கத்தாவைச் சேர்ந்தவர், மாவீரன் திப்பு பெயரைக் கொண்ட பள்ளிவாசலின் இமாம் ஒரு மணமகனுக்கும் ஓரு அரவாணிக்கும் திருமணம் செய்து இஸ்லாமிய அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாயிருக்கிறார் என்று 15.3.2010 தேதியிட்ட ஹிந்துப் பத்திரிக்கை செய்தி கூறுகிறது.
இஸ்லாமிய சட்டப்படி ஆணுக்கும்-ஆணுக்கும் திருமணம் செய்து கொடுப்பது தடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 படி குற்றமாகும். அதற்கு ஆயுள் ஜெயில் அல்லது 10 வருட தண்டனை மற்றும் அபராதம் விதிக்கச் சட்டமிருக்கும் போது இமாம் இந்த செயலில் துணை போயிருக்கிறார். சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு துணை போனதிற்கும் அவருக்கு இ.பி.கோ பிரிவு 109, 120(பி) படி தண்டனையும் வழங்க சட்டமிருக்கும் போது அந்த ஈனச் செயலில் ஈடுபட்டுள்ளார் பிரசித்தி பெற்ற இமாம் என்ற போர்வையில்.
சட்டம் ஒரு புறமிருக்க அந்த ஓரினச்சேர்க்கை அசுத்தமான, அருவருப்பு கொண்ட, இயற்கைக்கு மாறான செயலாக அதனைக் கருதவேண்டாமா? இஸ்லாத்தில் ஓரினச்சேர்க்கை தடை செய்யப்பட்டு அதில் ஈடுபடுபவர்களை இன்றும் அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் கசையடியும், கடுமையான ஜெயில் தண்டனையும் வழங்கவில்லையா? ஐரோப்பிய நாடுகள் ஆசிய, அரேபிய, ஆப்பிரிக்கா நாடுகளில் ஆதிக்க காலனிகளை நிறுவியபோது தங்களுடைய ஓரினச் சேர்க்கை பழக்கத்தினையும் மக்களுக்குத் தானமாக வழங்கினர்.
ஆனால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புவியில் உதித்து புனித வஹியினையும், நல்ல பண்பாடுகளையும் மக்களுக்குப் போதித்த பின்பு ஓரினச் சேர்க்கை அறவே ஒழிக்கப்பட்டு பெண்ணுக்கு வாழ்க்கைத் துணை ஆண் என்றும், அவளிடமிருந்தே நீங்கள் ஓய்வு பெறுங்கள் என்ற போதனை சொன்னது இஸ்லாம். அதனைப் போதிக்கும் கல்கத்தா இமாம் செயல் வரம்பு மீறலாகாதா? இமாம்களை பள்ளிகளில் இறைமறைப்படி தொழுகை நடத்தி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிபடி முஸ்லீம்களுக்கு போதிக்கும் ஆசிரியராகத்தானே பார்க்க வேண்டும். அவர்கள் மதபோதனைகளுக்கு மாறாக தன் சொந்தக் கருத்துக்களை புகுத்தினால் அதனை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?
இது போன்ற குற்றங்கள் நடக்கக் கூடாது என்று தான் இஸ்லாத்தில் யாரும் பிரமச்சாரியாக இருக்கக் கூடாது என்ற கொள்கையும், மனைவி, மக்கள் புடைசூழ நல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனை செய்ததோடு மட்டுமல்லாமல் வாழ்ந்தும் காட்டினார்கள். பிரம்மச்சாரி வாழ்க்கை நடத்தினால் பிரபலமாகும் போது மேலே சொன்ன பாலினத் தவறுகள் ஏற்படத்தானே செய்யும் ஆகவேதான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்க்கை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து புகழினை அடைந்தவர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இங்கே எப்படி நல்ல மூமினாக வாழ வேண்டும் என்று ஒரு உதாரணத்தினைச் சொன்னால் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இரண்டு சஹாபிகள் இருந்தனர். ஒருவர் பள்ளிவாசலே கதியென்று தொழுகை நடத்தி பள்ளியிலே வாசம் செய்து கொண்டு இருந்தார். ஆனால் அவர் குடும்பத்தினை கவனிக்கவில்லை. அவர்கள் வறுமையில் வாடினார்கள்.
இன்னொருவர் ஒரு வேளை தொழுகை மட்டும் பள்ளிக்கு வந்து விட்டு மற்ற நேரங்களில் கோடாரியை தூக்கிக் கொண்டு காட்டிற்குச் சென்று மரங்களை வெட்டி அதனை விற்று அந்த வருமானத்தில் தன் குடும்பத்திற்குத் தேவையானவைகளை வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் வழங்குவராகவும் ஆனால் ஈமான் தவறாத சஹாபியாக இருந்தார்.
மற்ற சகாபிகள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்த விறகு வெட்டி சகாபி பற்றி குறை கூறி மேற்கூறிய இரண்டு சகாபிகளில் யார் சொர்க்கத்திற்குப் போவார்கள் என்று கேட்டபோது, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விறகு வெட்டி சஹாபிதான் சொர்க்கத்திற்கு முதலில் போவார் என்றும் கூறி தொழுவதுடன் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினைக் காப்பாற்ற வேண்டுமென்ற தலையாய உதாரணத்தினை எடுத்துச் சொன்னதாக ஹதீஸ்கள் உள்ளன.
ஆனால் இன்று குடும்பத்தினை வறுமையில் விட்டு விட்டும், சரியாக தொழில் செய்யாமலும், வயதான பெண் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கான வழிவகை செய்யாமலும், தன் பிள்ளைகள் படிப்பிற்கு தேவையான உதவி செய்யாமலும் நீண்ட நாள் ஜமாத்துக்கு செல்வது சரியாகுமா என்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தலித்களைவிட பின்தங்கியிருக்கும் நமது சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டாமா?
போர், வியாபாரம், வேலை தவிர ஆண்கள் தங்கள் மனைவி மக்களை விட்டு பிரியக்கூடாது என்று இஸ்லாமிய போதனையில்லையா? கணவன் மனைவியுடைய ஆசாபாசங்களை பூர்த்தி செய்யாததால் தானே சில பாலின தவறுகளெல்லாம் சமுதாயத்தில் நடக்கிறது. ஆகவே சமுதாயம் கீழ்கண்ட விழிப்புணர்வை கடைப்பிடிக்க வேண்டும்:
1) பெண்கள் வேற்று ஆண்களிடம் பழகுவதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பலாப்பழம் இருக்குமிடத்தினை நோக்கி மொய்க்கும் ஈக்களாக் வேற்று ஆண்களை நோக்க வேண்டும். 2) நமது தேவைகளை அல்லாஹ்விடம் தான் கோரிக்கை வைத்து செயலில் ஈடுபட வேண்டும். மாறாக அல்லாஹ் படைத்த படைப்புகளிடம் நமது தேவைக்காக கை மற்றும் மடியேந்தக் கூடாது. 3) ஏமாறுபவர்கள் இருப்பது வரை ஏமாற்றுவர்கள் உற்சாகமாக ஊர்வலம் தான் வருவார்கள். ஆகவே நமது மனதினை திடத்துடன் ஏக இறை பக்தியுடனும், ஏக பத்தினியாகவும் இருக்க வேண்டும். 4) அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட மது, மாது, புகைத்தல், பேராசை, ஓரினச் சேர்க்கை, பாலினக் கொடுமை, குடும்ப வன்முறை ஆகியவைகளுக்கு துறும்பளவேனும் இடமளிக்கக் கூடாது.  5) குடும்ப தேவைகளை கவனிக்க மற்றவர்களிடம் கையேந்த விட்டுவிட்டு மற்றவர்களுக்கு உபதேசம் செய்யக்கூடாது.                                                                             ''jazaakallaahu khairan'' Posted by Rajaghiri Gazzali

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates