Elegant Rose - Diagonal Resize 2 நீங்கள் என்னுடன் படுக்கையை ~ TAMIL ISLAM

திங்கள், 4 ஜூன், 2012

நீங்கள் என்னுடன் படுக்கையை


இது ஓர் வரலாற்றுப்பொன்னேடு
நீங்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள சம்மதிக்கவில்லையென்றால், உங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன்!

நடுநிசி! மக்க மாநகர் வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. அன்று பவுர்ணமியாதலால் பட்டப் பகல்போல் நகரம் ஒளி வீசிக் கொண்டிருந்தது என்றாலும் ஆங்காங்கு இருந்த வீடுகள் நிழலுள் மூழ்கியும் நிழலைப் பரப்பியும் மவுனமொழி பேசின.
நான் என்னை ஒரு போர்வைக்குள் மறைத்துக் கொண்டும் நிழல்களுக்குள் ஒளித்துக் கொண்டும் சந்து பொந்துகளில் நடந்து சென்றேன். பின் முக்கிய வீதியொன்றில் முன்னேறி இலக்கை எட்டும் தூரத்தைக் கடந்து விட்டேன்.
குறைஷிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த போரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த கூடாரங்களை நோக்கியே என் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. முஸ்லிம்கள் பலரும் மக்காவை விட்டு வெளியேறிய பின்னரும் நான் மக்காவிலேயே தங்கியிருப்பதற்குக் காரணம் இருந்தது.
கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் சிலரை இரவில் யாருக்கும் தெரியாமல் மீட்டு மதீனாவுக்குக் கொண்டு சேர்ப்பதே என் பணியாக இருந்தது. அதற்காகவே நான் நடுநிசியில் தன்னந்தனியாக குறைஷிகளின் கூடாரங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.
அன்று இரவு ஒரு முஸ்லிம் தோழரை மீட்பதாக வாக்குறுதி அளித்திருந்தேன். அவரும் எனக்காக கண் விழித்துக் காத்துக் கொண்டிருந்தார். முக்கிய வீதியில் சென்ற நான் எதிரில் ஆள் நடமாட்டம் தெரிய அருகிலிருந்த வீட்டின் நிழலுள் நிழலானேன்.

எதிரில் ஒர் உருவம் தென்பட்டது. அது நானிருந்த இடத்தைக் கடந்து சென்றபோது அது யாரெனப் பளிச்செனத் தெரிந்தது. அது ஒரு பெண் அவள் பெயர் அனாக். அவளை எனக்கு நன்றாகத் தெரியும். அவளையும் பலருக்குத் தெரியும். அவள் ஒரு பாலியல் தொழிலாளி!
அவளுக்கு நான் ஒரு வழமைச் சவாரி, ஒரு காலத்தில்; அவளைப் போன்றவர்களையெல்லாம் அப்பால் தள்ளி விட்டு இப்பால் வந்து நீண்ட நாட்களாகி விட்டன. கண்டபடி வாழ்ந்த காலங்களெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்ட நிலையில் நான் இப்போது ஒர் உண்மை முஸ்லிம்.
அவள் என்னைப் பார்த்து விட்டால் எனக்கு இருவகை இழப்புகள் ஏற்படலாம். ஒன்று என் செயல் குறித்து அறிந்தால் அவள் மூலம் எதிரிகளின் தொல்லை வரலாம். பணி தடைபடலாம். இரண்டு, என்னை அவள் தன் திசைக்கு அழைக்கலாம். இரண்டுமே நடைபெறாமல் இறைவன் என்னைக் காப்பற்ற வேண்டும் என எண்ணிய நான் என்னையறியாமல் தும்மினேன்.
தும்மலைக் கேட்ட அனாக் திரும்பிப் பார்த்து "யாரது! இருளின் மடியில்...!" எனக் கேட்ட படி என்னை நோக்கி வந்தாள். அவளின் மடி என் நினைவுக்கு வந்தது .இறைவன் என்னை காப்பாற்றுவான். நான் பதில் பேசாமல் நின்றபடி போர்வையால் முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டேன்.
"எனக்குத் தெரியாதவர் மக்காவில் யாருமே இருக்க முடியாது... யார் நீ" எனக் கேட்டபடி அருகில் வந்து என் போர்வையை வேகமாக உருவினாள். என் முகம் இப்போது நன்றாக தெரிய வர, "மர்ஸத் நீங்களா? என் மனங்கவர்ந்தவர்களில் ஒருவரான நீங்கள் ஏன் என்னிடமிருந்து மறைய வேண்டும்?" எனக் கேட்டபடி அருகில் வந்து என் கையைப் பற்றினாள். நான் கைகளை உதறினேன்.
எனக்கு நா வறண்டது. என்ன பதில் கூறுவது என எனக்குத்தோன்றவில்லை. எச்சிலைக் கூட்டி விழுங்கினேன். கண்களிலும் நீர் தளும்பியது.
"மர்ஸத், ஏன் பேச மறுக்கிறீர்கள்? ஏன் இப்போது உங்கள் கரங்கள் உதறுகின்றன? மெல்லிய காற்று வீசும் சூழலில் எப்படி வந்தன உங்கள் முகத்தில் வியர்வைத் துளிகள்?"
"அனாக்! நான் இப்போது ஒரு முக்கிய வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். அதனால் தான்..."
"என்ன வேலைக்காக தாங்கள் பதுங்கிப் பதுங்கி சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்னைக் கண்டு பேசுவதை விட அவ்வேலை என்ன அப்படி முக்கியத்துவம் வாய்ந்தது!"
"அதைப் பற்றி நான் இப்போது உன்னிடம் பேச முடியாது"
"ஏன்? என் மேல் நம்பிக்கையில்லையா உங்களுக்கு? திருடச் செல்கிறீர்களா? இல்லை, யாரையும் கொலை செய்யப் போகிறீர்களா? அப்படிப்பட்ட ஆளில்லையே நீங்கள்... என்னிடம் சொல்லுங்கள்; இல்லையேல் பரவயில்லை" என்ற அவளின் பேச்சில் என மனம் குளிர்ந்தது.
அனாக் விலை மகளாயிருந்தாலும் அவள் அநியாயத்துக்கு விலை போக மாட்டாள் என எண்ணி, "நான் குறைஷியர் சிறைப்பிடித்துள்ள முஸ்லிம் ஒருவரை மீட்கப் போய்க் கொண்டிருக்கிறேன்" என்ற உண்மையைச் சொன்னேன்.
"நல்ல வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். பரவாயில்லை. என்றாலும், இன்று நீங்கள் என்னோடு தங்கிச் செல்ல வேண்டும்" என அனாக் என்னிடம் வேண்டுகோள் விடுத்தாள்.
"அனாக்! நான் இப்போது முஸ்லிமாகி விட்டேன். எனவே, நான் உன் அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறேன். அல்லாஹ் தவறான பாலியல் உறவைத் தடை செய்துள்ளான். அது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இனியாவது தெரிந்து கொள். இனி நீ கூட அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு ஒரே மனிதருடன் வாழும் வாழ்க்கையை மேற்கொள்ளலாம்."
"அதெல்லாம் கதைக்குதவாத வீண் பேச்சு. வீடு கட்டிக் கொண்டு வாழ்வதெல்லாம் என்னைப் பொறுத்த வரை வீண் வேலை. எனக்குக் கூடாரமே போதும். அதனால் இப்போது நீங்கள் எனக்கு வேண்டும்."
"நீங்கள் என்னுடன் வர சம்மதிக்கவில்லையானால், நான் கூச்சலிட்டுக் குறைஷிகளிடம் உங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன்" என அவள் என்னை எச்சரித்த போதே என் கால்கள் ஒட ஆரம்பித்தன. அவள் கத்தத் தொடங்கினாள்.
"கூடாரக்காரர்களே! நீங்கள் அடைத்து வைத்திருக்கும் கைதிகளை மீட்பதற்காக இதோ ஒருவர் வந்து விட்டுத் தப்பித்து ஒடுகிறார். அவரை விரைந்து பிடியுங்கள்" என அனாக் கூச்சலிட நான் சிட்டாகப் பறந்தேன்.
குதிகால் பிடரியில் பட ஒடிய நான் திரும்பிப் பார்த்தேன். எட்டுப் பேர் என்னைத் தொடர்ந்து ஒடி வந்து கொண்டிருந்தார்கள். அனாக் தூரத்தில் புள்ளியாய் நின்று கொண்டிருந்தாள்.
ஒடினேன்; ஒடினேன்.... ஒடிக் கொண்டே இருந்தேன். ஒடிக் கொண்டிருந்த நான் கந்தமா எனும் மலைக் குகையின் அடிவராத்தில் சென்று மறைந்து கொண்டேன். தேடி வந்த எட்டுப் பேரும் குகையின் மேல் நின்று எட்டுத் திக்கும் எட்டிப் பார்த்திருப்பர் போலும், பேச்சொலி கேட்டது.
பதுங்கியிருந்த என் தலை மேல் சொட்டுச் சொட்டாக நீர் வடிந்து வழிந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு வகை நாற்றம் மூக்கைத் துளைத்தது. அவை உதட்டில் பட உப்புக் கரித்தது. குகை மேலிருந்து அவர்கள் பெய்த சிறுநீர் என்னைப் பெருமைப்படுத்தியது போலும்! ஏதும் கூற முடியாத நிலையில் அமைதி காத்தேன்.
தேடி வந்தவர்கள் திரும்பிய பின் நீண்ட நேரங்கழித்து மூன்றாம் ஜாமத்தில் என் பணியை மீண்டும் தொடர்ந்தேன். பவுர்ணமி நிலவு கீழ் வானத்தில் போர்வை போர்த்திப் படுத்துக் கிடந்தது. முஸ்லிம்கள் சிறை வைக்கப்பட்டிருந்த கூடார மைதானத்தை அடைந்தேன்.
குறட்டை ஒலியே கேட்டது காவலிருந்த குறைஷிகள் குடித்திருந்த காரணத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நான் குறிப்பிட்ட கூடாரத்தை அடைந்தேன். நான் மீட்கச் சென்ற நபர் என்னை எதிர்பார்த்திருந்தார். அவர் கால்களில் காயம்: கைகளில் விலங்கு.
நான் குனிந்து அவரை என் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன். கனத்த சரீரம் கொண்ட அவரை என்னால் நீண்ட தூரம் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவரின் விலங்கை உடைத் தெறிந்தேன். அவருக்கு ஒரளவு வலுகூடியது போலிருந்தது. என்றாலும் கால்களில் இருந்த காயங்களால் தரையில் காலுன்றி நடக்க முடியவில்லை.
மீண்டும் அவரைப் பேரீச்சை மூட்டையைச் சுமப்பது போல் சுமக்க ஆரம்பித்தேன். நகர எல்லையைத் தாண்டியபோது வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. பறவைகள் கிறிச்சிட்டுக் கொண்டு பறக்க தூரத்தில் இடி முழக்கங்கள்.
என் கால்களும் கைகளும் வலுவிழந்தன. சுமையோடு விழுந்து விடுவேனோ எனப் பயம் வந்தது. அருகிலிருந்த ஈச்ச மரத்தோப்பில் தங்கியிருந்து விட்டு, மீண்டும் பயணத்தை இரவில் தொடரலாம் என எண்ணினேன். என் முதுகிலிருந்த நண்பரும் நான் எண்ணியதையே செயல்படுத்தச் சொன்னார்.
நண்பரைக் கிழே இறக்கி வைத்து விட்டு தோப்பை ஆராய்ந்தேன். அங்கே ஆளரவம் இல்லை. தோட்டத்தின் பின்புறம் ஒர் உயர்ந்த மணல் மேடு இருந்தது. அம்மணல் மேட்டின் மறைவில் நாங்கள் வீழ்ந்து கிடந்தோம். பசி அரை மயக்கம் அசதி எல்லாம் ஒன்று சேர்ந்து எங்களை நீண்ட தூக்கத்தில் ஆழ்த்தின. கண் விழித்துப் பார்த்த போது சூரியன் உச்சியில் இருந்தான்.
"மர்ஸத், உங்கள் உதவிக்கு நன்றி. நம்மிருவரையும் இஸ்லாமிய உறவு இணைத்ததோடு அல்லாஹ்வின் அருள் நமக்கு எவ்வளவு வலுவைத் தந்திருக்கிறது பார்த்தீர்களா? எனத் தோழர் உரைக்க, "ஆம் நண்பரே!" எனக் கூறி சபலங்களிலிருந்தும் நான் தப்பித்ததையும் அதற்கு அண்ணலாரின் வழிமுறைதான் காரணம் என்பதையும் கூற மாலை மதியமும் வீசுதென்றலும் வந்து சேர்ந்தன.
பசியும் அசதியும் வலியும் சென்ற இடம் தெரியவில்லை. நாங்கள் மதீனாவை நோக்கிச் செல்ல ஆயத்தமானோம்! (அபூதாவூத், நஸயீ ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சகோதரர் தாழை மதியவன் அவர்களால் எழுதப்பட்ட நடை)
உலகிலேயே ஆபத்தான இடம் எது என்று ஒரு மாணவியிடம் போது நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட போது. இணையம் என்று பதில் சொன்னார் அதற்கு அரங்கில் நீண்ட நேரம் ஒலித்த கைத்தட்டல்கள். இணையத்தின் பாதிப்பை உண்மைப்படுத்தின.
இன்று பதிவுலகில் சகோதர, சகோதரி(மர்ஸத்)கள் அனைத்து சபலங்களையும் வென்று நல்ல விஷயங்களை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் "அனாக்" குகள் ஆயிரகணக்கில் இணையத்தில் வழிகெடுக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த "அனாக்" களிடமிருந்து இறைவன் "மர்ஸத்"களை காப்பற்றுவானாக.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates