Elegant Rose - Diagonal Resize 2 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய கடிதங்கள் ~ TAMIL ISLAM

திங்கள், 4 ஜூன், 2012

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய கடிதங்கள்




நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள்.
நபியவர்கள் அரசர்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டபோது ''முத்திரை இல்லாத கடிதங்களை அரசர்கள் படிக்க மாட்டார்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, நபியவர்கள் வெள்ளியினாலான மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் 'முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று பதித்தார்கள். அது மூன்று வரிகளாக இருந்தது. முஹம்மது என்று முதல் வரியிலும், ''ரஸூல்'' என்று அடுத்த வரியிலும், அல்லாஹ் என்று அதற்கடுத்த வரியிலும் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி)
நபியவர்கள் இப்பணிக்காக தங்களது தோழர்களில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தூதுவர்களாக அரசர்களிடம் அனுப்பினார்கள். நபியவர்கள் எழுதிய கடிதங்களின் விவரங்கள் பின்வருமாறு:

1. அபிசீனியா (ஹபஷா) மன்னர் நஜ்ஜாஷிக்கு:''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் 'அஸ்ஹம்' என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும் இது.
நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை. நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகுக!
நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்.
''வேதமுடையவர்களே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு யாதொன்றையும் இணைவைக்க மாட்டோம். அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் சிலரைக் கடவுளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற நீங்களும் நாமும் ஒத்துக் கொண்ட விஷயத்திற்கு நீங்கள் வந்துவிடுங்கள். நீங்கள் இதைப் புறக்கணித்தால் நாங்கள் 'முஸ்லிம்கள்' என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருந்துவிடுங்கள்.'' (அல்குர்ஆன் 3:64)
''நீ (இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ள) மறுத்துவிட்டால் உனது சமுதாயத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்துவர்களின் குற்றமும் உம்மையே சாரும்'' (தலாயிலுந்நுபுவ்வா, முஸ்தத்ரகுல் ஹாகிம்)

2. எகிப்து (மிஸ்ரு) மன்னருக்கு:
மிஸ்ரு (எகிப்து) மற்றும் இஸ்கந்தய்யா (அலெக்ஸாண்டியா)வின் மன்னரான 'முகவ்கிஸ்' என்று அழைக்கப்படும் ஜுரைஜ் இப்னு மத்தாவிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பிய கடிதம்:அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது. நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.
நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். ''நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்''
''(வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) ''நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். ) (அல்குர்ஆன் 3:64) (ஜாதுல் மஆது) இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு நபியவர்கள் ஹாதிப் இப்னு அபூ பல்தாவை தேர்வு செய்தார்கள். ஹாதிப் ரளியல்லாஹு அன்ஹு அங்கு சென்றவுடன் அம்மன்னரைப் பார்த்து இவ்வாறு கூறினார்: ''நிச்சயமாக உமக்கு முன் தன்னை மிக உயர்ந்த இறைவன் என்று சொல்லி வந்த ஒருவன் இங்கு இருந்தான். அல்லாஹ் அவனை நிரந்தரத் தண்டனையைக் கொண்டு தண்டித்தான். அல்லாஹ் அவனைக் கொண்டு பிறரையும், பின்பு அவனையும் தண்டித்தான். எனவே, நீ பிறரைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள். பிறர் உன்னைக் கொண்டு படிப்பினை பெறும்படி நடந்து கொள்ளாதே!''
இதைக் கேட்ட முகவ்கிஸ் ''நிச்சயமாக எங்களுக்கென்று ஒரு மார்க்கம் இருக்கிறது. நாங்கள் அம்மார்க்கத்தை விடமாட்டோம். ஆனால், அதைவிட சிறந்த ஒரு மார்க்கம் கிடைத்தால் விட்டு விடுவோம்'' என்று கூறினார். அப்போது ஹாதிப் ரளியல்லாஹு அன்ஹு
அதற்கு பின்வரும் பதிலை கூறினார்:
நாங்கள் உம்மை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறோம். இதைத் தவிர மற்ற மார்க்கங்களின் தேவை இனி அறவே இருக்காது. இதுவே அனைத்திற்கும் போதுமான, பரிபூரணமான மார்க்கமாகும். நிச்சயமாக இந்த நபி மக்களுக்கு அழைப்பு கொடுத்தார்கள். அம்மக்களில் குறைஷிகள் அவருடன் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். யூதர்கள் அவரைப் பகைத்தனர். கிறிஸ்துவர்கள் அவருடன் நட்பு கொண்டனர்.
''சத்தியமிட்டுக் கூறுகிறேன்! நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். அவ்வாறே நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள்.
உம்மை நாங்கள் குர்ஆனின் பக்கம் அழைப்பது நீங்கள் தவ்றாத் வேதமுடையவர்களை இன்ஜீலின் பக்கம் அழைப்பதைப் போன்றுதான். ஒவ்வொரு நபி அனுப்பப்படும் போதும் அவரது காலத்திலுள்ள மக்களெல்லாம் அந்த நபியின் சமுதாயமாகக் கருதப்படுவார்கள். எனவே, அம்மக்கள் அந்த நபிக்கு கீழ்ப்படிந்து நடப்பது கடமையாகும். நீங்கள் இந்த நபி அனுப்பப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். (எனவே நீர் அவரை பின்பற்றியாக வேண்டும்). ஈஸாவின் மார்க்கத்தைப் பின்பற்றுவதிலிருந்து நாங்கள் உம்மைத் தடுக்கவில்லை. மாறாக, நாங்களும் உமக்கு அதைத்தான் ஏவுகிறோம்.''
இந்தப் பதிலைக் கேட்ட முகவ்கிஸ், ''இந்த நபியின் விஷயத்தில் நான் சிந்தித்து விட்டேன். அவர் வெறுப்பானவற்றை ஏவவில்லை, அல்லது விருப்பமான ஒன்றை தடுக்கவுமில்லை. வழிகெட்ட சூனியக்காரராகவோ, பொய் சொல்லும் குறிகாரராகவோ நான் அவரைக் கருதவில்லை. மறைவாக பேசப்படும் இரகசியங்களை வெளிப்படுத்தும் நபித்துவத்தின் அடையாளம் அவரிடம் இருக்கக் கண்டேன். இருந்தாலும் நான் மேலும் யோசித்துக் கொள்கிறேன்'' என்று ஹாத்திபுக்கு பதில் கூறினார்.
பின்பு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தை யானை தந்தத்தில் வைத்து மூடி முத்திரையிட்டு தனது அடிமை பெண்களிடம் கொடுத்து பாதுகாத்து வைக்கச் சொன்னார். பின்பு அரபியில் எழுதும் தனது எழுத்தாளரை அழைத்து நபியவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதுமாறு கூறினார்.
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் எழுதுகிறேன். அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுக்கு கிப்திகளின் அரசர் முகவ்கிஸ் எழுதுவது. உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டுமாக! நான் உங்களது கடிதத்தைப் படித்தேன். அதில் நீங்கள் கூறியிருப்பதையும், நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீரோ அதையும் நான் புரிந்து கொண்டேன். ஒரு நபி மீதமிருக்கிறார் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர் ஷாம் தேசத்திலிருந்து வருவார் என்றுதான் எண்ணியிருந்தேன். நான் உங்களது தூதரைக் கண்ணியப்படுத்தினேன். மதிப்பும் மரியாதையுமிக்க இரண்டு அடிமைப் பெண்களையும் சில ஆடைகளையும் நான் உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நீங்கள் வாகனிப்பதற்காக ஒரு கோவேறு கழுதையையும் அன்பளிப்பாக அளிக்கிறேன். உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக.''
இக்கடிதத்தில் இவர் வேறு எதையும் குறிப்பிடவில்லை. இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இரண்டு அடிமைப் பெண்களில் ஒருவர் 'மாரியா', மற்றொருவர் 'சீரீன்'. கோவேறு கழுதையின் பெயர் 'துல்துல்' ஆகும். பிற்காலத்தில் வந்த மன்னர் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலம் வரை துல்துல் உயிருடனிருந்தது. (ஜாதுல் மஆது) மாரியாவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்காக வைத்துக் கொண்டார்கள். இவர் மூலம் நபியவர்களுக்கு 'இப்றாஹீம்' என்ற குழந்தை பிறந்தது. சீரீனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு என்ற அன்சாரி தோழருக்கு வழங்கினார்கள்.
3. பாரசீக மன்னர் 'கிஸ்ரா'விற்கு கடிதம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாரசீக மன்னர் 'கிஸ்ரா'விற்கும் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதமாவது: ''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறைநிராகரிப்பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் ''நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்) குற்றமெல்லாம் உங்களையே சாரும்.''
இக்கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு 'அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மி' என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். இவர் பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அவர் அக்கடிதத்தை தனது ஆள் மூலமாக கிஸ்ராவிடம் அனுப்பினாரா அல்லது அப்துல்லாஹ்வே நேரடியாக கிஸ்ராவிடம் கொடுத்தாரா என்ற விபரம் அறியப்படவில்லை. எதுவாக இருப்பினும், முடிவில் அக்கடிதம் கிஸ்ராவிடம் சென்று அதை அவன் படித்து விட்டு கிழித்தெறிந்தான். பின்பு பெருமையுடன் ''எனது குடிமக்களில் ஒரு கேவலமான அடிமை எனது பெயருக்கு முன் அவரது பெயரை எழுதுவதா?'' என்று கூறினான்.
இந்தச் செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிந்த போது ''அல்லாஹ் அவனது ஆட்சியை கிழித்தெறியட்டும்'' என்று கூறினார்கள். அவ்வாறே நடக்கவும் செய்தது. இதற்குப் பின் கிஸ்ரா யமன் தேசத்திலுள்ள தனது கவர்னருக்குக் கடிதம் எழுதினான். அதில் ''ஹிஜாஸில் உள்ள இவரிடம் நல்ல துணிச்சலான இரு வீரர்களை அனுப்பி வை. அவர்கள் அவரை என்னிடம் கொண்டு வரட்டும்'' என்று குறிப்பிட்டான்.
இக்கடிதம் கிடைத்தவுடன் கவர்னர் பாதான் தன்னிடமுள்ள வீரர்களிலிருந்து இருவரைத் தேர்ந்தெடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி வைத்தான். மேலும் அவ்விருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அதில் ''இக்கடிதம் கிடைத்தவுடன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இருவருடன் உடனே புறப்பட்டு கிஸ்ராவிடம் செல்ல வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தான்.
வந்த இருவரில் ஒருவன் பெயர் சுஹ்ர்மானா பானவய்ஹி. இவன் கணக்கு மற்றும் ஃபார்சி மொழியை அறிந்தவன். இரண்டாமவன் பெயர் குர்குஸ்ரு.
இவ்விருவரும் மதீனா வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தார்கள். அவ்விருவரில் ஒருவன் நபியவர்களிடம் ''அரசர்களுக்கெல்லாம் அரசரான கிஸ்ரா தனது கவர்னர் பாதானுக்கு கடிதம் எழுதினார். அதில் உம்மை அழைத்து வருவதற்காக ஆட்களை உம்மிடம் அனுப்பும்படி ஆணையிட, பாதான் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார். நீர் என்னுடன் புறப்பட வேண்டும்'' என்று கூறியதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எச்சரிக்கும்படி பல வார்த்தைகளையும் கூறினான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவற்றைப் பொறுமையாக கேட்டு விட்டு, தன்னை நாளை சந்திக்குமாறு அவ்விருவரிடமும் கூறினார்கள்.
இக்காலக் கட்டத்தில் மன்னர் கைசரின் படையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த கிஸ்ராவின் படையினர் கடும் தோல்வியடைந்தனர். இதற்குப் பின் கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. கிஸ்ராவின் மகன் ஷீர்வைஹி தகப்பனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இச்சம்பவம் ஹிஜ்ரி 7, ஜுமாதா அல் ஊலா பிறை 10, செவ்வாய் இரவு நடந்தது. அச்சம்பவம் நடந்த அதே நேரத்தில் அதை வஹியின் வாயிலாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிந்து கொண்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, தாக் இப்னு கல்தூன்)
மறுநாள் இரு தூதர்களும் வந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அச்செய்தியை அவர்களுக்குக் கூறினார்கள். அதற்கு அவ்விருவரும் ''நீர் என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? இதற்கு முன் மிக இலகுவான தண்டனையைத்தான் நாம் உம்மிடம் கூறியுள்ளோம். நீர் சொன்ன இச்செய்தியை நாங்கள் எழுதி கவர்னருக்கு அனுப்பலாமா?'' என்று கூறினர்.
அதற்கு நபியவர்கள் ''ஆம்! அவருக்கு இச்செய்தியை என் சார்பாக அனுப்பி வையுங்கள்.'' என்றும் ''எனது மார்க்கமும், ஆட்சியும் கிஸ்ராவின் ஆட்சி எதுவரை இருக்கிறதோ அதுவரை வந்தடையும். எதுவரை குதிரையும் ஒட்டகமும் செல்ல முடியுமோ அதுவரை சென்றடையும். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதை அவருக்கே சொந்தமாக்கி விடுவேன், அவரது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரையே அரசனாக்கி விடுவேன்'' என்றும் சொல்லுங்கள் என்றார்கள்.
அந்த இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து புறப்பட்டு தங்களது கவர்னர் பாதானிடம் வந்தனர். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறி அனுப்பிய செய்தியைக் கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் ஷீர்வைஹியின் கடிதம் ஒன்று அவரிடம் வந்தது. அதில்: ''நான் எனது தந்தையைக் கொன்று விட்டேன். எனது தந்தை தனது கடிதத்தில் குறிப்பிட்ட மனிதர் விஷயத்தில் சற்று பொறு. எனது அடுத்த கட்டளை வரும் வரை அவரை பழித்துப் பேசிவிடாதே'' என்று எழுதப்பட்டிருந்தது. (தாரீகுல் உமமில் இஸ்லாமிய்யா, ஃபத்ஹுல் பாரி)

[ ''அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'' என்று கூறினாய்,
''நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார்.
நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன்.
நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்''  - ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன் ]
4. ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரோமின் மன்னர் (ஹெர்குலஸ்) 'ஹிர்கலுக்கு' எழுதிய கடிதத்தின் வாசகத்தை இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஒரு நீண்ட ஹதீஸுக்கு இடையில் குறிப்பிடுகிறார்கள். அது,
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்,.. அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, ரோமின் மன்னர் ஹிர்கலுக்கு எழுதுவது: நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!
இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய் இஸ்லாமை ஏற்றுக்கொள் அல்லாஹ் உனக்கு கூலியை இருமுறை வழங்குவான் நீ புறக்கணித்து விட்டால் உமது கூட்டத்தினர் அனைவரின் குற்றமும் உன்னையே சாரும். வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம்.
நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) ''நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன் 3:64)
இக்கடிதத்தை எடுத்துச் செல்ல திஹ்யா இப்னு கலீஃபா அல்கல்பி என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். அவரிடம் ''நீங்கள் இதை புஸ்ராவின் கவர்னரிடம் கொடுங்கள், கவர்னர் அக்கடிதத்தை மன்னர் கைஸரிடம் கொடுக்கட்டும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
இது தொடர்பாக இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்கள் அறிவிக்கும் நீண்ட அறிவிப்பை இங்கு பார்ப்போம்:
அது, அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைபிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம். அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹிர்கல் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.) அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹிர்கல் வரவேற்று அமர வைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார்.
இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.
மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?
அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.
மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.
(தனது மொழிபெயர்ப்பாளரிடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.
அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன்.
மன்னர்: உங்களில் அவரது குடும்பம் எப்படிப்பட்டது?
அபூஸுஃப்யான்: அவர் எங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்.
மன்னர்: இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: ''இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?''.
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா?
அபூஸுஃப்யான்: எளியவர்களே பின்பற்றுகிறார்கள்.
மன்னர்: அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை! அதிகரிக்கின்றனர்.
மன்னர்: அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறுகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய் பேசுவார் என சந்தேகப் பட்டதுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவர் மோசடி செய்ததுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக் கிறோம். அதன்படி அவர் செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.)
மன்னர்: அவருடன் போர் செய்துள்ளீர்களா?
அபூஸுஃப்யான்: ஆம்!
மன்னர்: அவருடன் நீங்கள் புரிந்த போர் முடிவு எவ்வாறு இருந்தது?
அபூஸுஃப்யான்: அவருக்கும் நமக்கும் இடையே போர் ஏற்றம் இறக்கமாக, அதாவது சில நேரம் அவர் எங்களை வெல்வார் சிலநேரம் நாங்கள் அவரை வெல்வோம்.
மன்னர்: அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?
அபூஸுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். உங்கள் முன்னோர் கூறியதை விட்டுவிடுங்கள் என்று கூறி தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளைக் கட்டளையிடுகிறார்.
அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட மன்னர் தனது மொழிபெயர்ப்பாளரிடம் தான் இனி பேசுவதை மொழிபெயர்த்துக் கூறச் சொன்னார். அதாவது:
உன்னிடம் அவரது குடும்பம் பற்றிக் கேட்டேன். ''அவர் உங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்'' என்றாய். இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார்.
அடுத்து, உன்னிடம் ''இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'' எனக் கேட்டேன், ''இல்லை'' என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன்.
அடுத்து உன்னிடம் ''இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'' எனக் கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோர்களில் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன்.
அடுத்து உன்னிடம் ''(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'' எனக் கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன்.
அடுத்து ''அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா''? என்று உன்னிடம் கேட்டேன் ''அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'' என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.அடுத்து உன்னிடம் ''அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா?'' என்று கேட்டேன். ''அதிகரிக்கின்றனர்'' என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும்.
அடுத்து உன்னிடம் ''அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'' என்று கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.
அடுத்து உன்னிடம் ''அவர் மோசடி செய்ததுண்டா''? என்று கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.
அடுத்து உன்னிடம் ''அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ''அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'' என்று கூறினாய்.
''நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'' என்றார்.
பின்பு புஸ்ராவின் ஆளுநர் வாயிலாக தனக்காக திஹ்யாவிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தன்னிடம் கொடுக்க வேண்டினார். ஆளுநர் அதனை மன்னனிடம் தந்தார். முன்னாள் நாம் கண்ட அக்கடிதத்தை மன்னர் படித்து முடித்தபோது அங்கே மக்களின் சப்தங்கள் உயர்ந்தன. கூச்சல்கள் அதிகமாயின.
அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: ''எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன்கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அபூ கபிஷாவின்' பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது'' என்று அபூஸுஃப்யான் கூறினார்.
அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் கடிதம் கைஸர் மன்னரிடம் எப்படிப்பட்ட பிரதிபலிப்பை ஏற்படுத்தியது என்பதை அபூஸுஃப்யான் நேரில் பார்த்து புரிந்து கொண்டதையே இவ்வாறு கூறினார்.
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுவர் திஹ்யாவிற்கு மன்னர் கைஸர் பெரும் செல்வத்தையும் உயர்ந்த ஆடைகளையும் கொடுத்து கௌரவித்தார். அந்தளவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதம் அவரிடம் மாறுதலை ஏற்படுத்தியது. திஹ்யா ரளியல்லாஹு அன்ஹு திரும்ப மதீனா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வழியில் 'ஹிஸ்மா' என்ற இடத்தில் ஜுதாம் கிளையைச் சேர்ந்த சிலர் அவன் பொருட்கள் அனைத்தையும் வழிப்பறி செய்து கொண்டனர். பின்பு மதீனா வந்து சேர்ந்த திஹ்யா (தனது இல்லம் செல்வதற்கு முன்) நேராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களைச் சந்தித்து நடந்ததைக் கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 500 வீரர்களை ஜைது இப்னு ஹாரிஸாவின் தலைமையில் ஹிஸ்மாவை நோக்கி அனுப்பினார்கள். இந்த 'ஹிஸ்மா' என்பது வாதில் குர்ராவை அடுத்துள்ள ஊராகும். அங்கு சென்ற ஜைது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜுதாம் கிளையினரைத் தாக்கி அதிகமானவர்களைக் கொன்றார்கள். பின்பு அக்கிளையினரின் கால்நடைகளையும் பெண்களையும் அழைத்துக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தார்கள். அதில் 1000 ஒட்டகங்களும், 5000 ஆடுகளும், கைதிகளில் பெண்கள் சிறுவர்களென 100 பேர்களும் இருந்தனர்.
ஏற்கனவே ஜுதாம் கிளையினர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தனர். எனவே, இக்கிளையினரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான ஜைது இப்னு ஃபாஆ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இவ்வழக்கைக் கொண்டு வந்தார். இவரும், இவன் கிளையைச் சேர்ந்த மற்றும் சிலரும் இதற்கு முன்பே இஸ்லாமைத் தழுவியிருந்தனர். இவர்கள் தங்களது ஜுதாம் கிளையினர் திஹ்யாவை வழிப்பறி செய்த போது தங்களால் முடிந்தளவு திஹ்யாவைப் பாதுகாத்தனர்.
எனவே, நபியவர்கள் இவர்களின் கோரிக்கையை ஏற்று ஜைது இப்னு ஹாரிஸா கொண்டு வந்திருந்த பொருட்களையும் கைதிகளையும் திரும்பக் கொடுத்து விட்டார்கள்.போர்களைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்நிகழ்ச்சியை ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அது தவறாகும். ஏனெனில், நபியவர்கள் முதன் முதலாக, கைஸர் மன்னருக்கு ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் கடிதம் அனுப்பினார்கள். எனவே, ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் இச்சம்பவம் நடந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று இப்னுல் கய்யூம் ரஹ்மதுல்லாஹி அலைஹி
குறிப்பிடுகிறார்கள்                                                                                                                                                                5. பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம் பஹ்ரைன் நாட்டு ஆளுநர் 'அல்முன்திர் இப்னு ஸாவி' என்பவருக்கு இஸ்லாமின் பக்கம் அழைப்புக் கொடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தை அலா இப்னு ஹள்ரமி என்ற தோழர் மூலம் அனுப்பினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்பு அவர் நபியவர்களுக்குப் பதில் எழுதினார். ''அல்லாஹ்வின் தூதரே! உங்களது கடிதத்தை பஹ்ரைன் நாட்டு மக்களுக்கு முன் நான் படித்துக் காட்டினேன். அவர்களில் சிலர் இஸ்லாமால் கவரப்பட்டு அதை விரும்பி ஏற்றுக் கொண்டனர். எனது நாட்டில் மஜுஸிகளும் யூதர்களும் இருக்கின்றனர். எனவே, நான் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு நடக்க வேண்டும்? என எனக்குக் கட்டளை பிறப்பியுங்கள்'' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வர்களும் பின்வரும் பதில் எழுதியனுப்பினார்கள். ''அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, முன்திர் இப்னு ஸாவிக்கு எழுதிக் கொள்வது. உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! உங்களுக்கு முன் நான் அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. முஹம்மது அவனது அடிமையும் அவனது தூதருமாயிருக்கின்றார் என்று நான் சாட்சி கூறுகிறேன். இதற்குப் பின் உங்களுக்கு நான் அல்லாஹ்வை நினைவூட்டுகிறேன்.
யாரொருவர் நன்மையை நாடுகிறாரோ அந்த நன்மையின் கூலி அவரையே சாரும். யார் நான் அனுப்பும் தூதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து, அவர்கள் கூறும் விஷயங்களைப் பின்பற்றுகிறாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தவராவார். யார் அவர்களுக்கு நன்மை செய்கிறாரோ அவர் எனக்கு நன்மை செய்தவராவார். நான் அனுப்பிய தூதர்கள் உங்களைப் பற்றி நல்லதையே கூறினார்கள். நீங்கள் உங்களது கூட்டத்தினருக்குச் செய்த பரிந்துரையை நான் ஏற்றுக் கொள்கிறேன். இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர்கள் முஸ்லிமாக மாறும் போது அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் அப்படியே கொடுத்து விடுங்கள். அவர்களில் குற்றமிழைத்திருந்தவர்களை நான் மன்னித்து விட்டேன். எனவே, நீங்களும் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சீர்திருத்தம் செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் நாம் உங்களை உங்களது பதவியிலிருந்து அகற்ற மாட்டோம். யார் தனது யூத அல்லது மஜூஸி மதத்தில் நிலையாக இருந்து விடுகிறாரோ அவர் ஜிஸ்யா (வரி) செலுத்த வேண்டும்.'' இவ்வாறு அதில் குறிப்பிட்டார்கள்.
6. யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம் இவர் பெயர் 'ஹவ்தா இப்னு அலீ' ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவருக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹவ்தா இப்னு அலீக்கு எழுதிக் கொள்வது. நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.''இக்கடிதத்தை அனுப்புவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸலீத் இப்னு அம்ர் அல் ஆமி ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஸலீத் ரளியல்லாஹு அன்ஹு இந்த முத்திரையிட்ட கடிதத்தை எடுத்துக் கொண்டு ஹவ்தாவிடம் வந்தபோது, அவர் ஸலீதை வரவேற்று தனது விருந்தினராகத் தங்க வைத்தார். ஸலீத் ரளியல்லாஹு அன்ஹு அவருக்கு அக்கடிதத்தைப் படித்துக் காட்டினார்.
அவர் அதற்குச் சிறிய அளவில் மறுப்பு தெரிவித்து விட்டு பதில் ஒன்றை எழுதினார். அதில், ''நீர் அழைக்கும் விஷயம் எவ்வளவு அழகானது, அற்புதமானது - பொதுவாக அரபிகள் எனக்குப் பயந்து நடக்கிறார்கள். உமது அதிகாரத்தில் எனக்கும் சில பங்கைக் கொடுத்தால் நான் உம்மைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறினார். இக்கடிதத்துடன் ஸலீத்துக்கு வெகுமதிகளையும் அன்பளிப்புகளையும் கொடுத்து 'ஹஜர்' என்ற இடத்தில் நெய்யப்பட்ட உயர்ந்த ஆடைகளையும் அவருக்கு அணிவித்தார்.இவையனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸலீத் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நடந்த செய்தியைக் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அக்கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு ''அவன் பூமியில் சிறுபகுதியைக் கேட்டாலும் கொடுக்க மாட்டேன். அவனும் நாசமாகி விட்டான். அவனது அதிகாரத்திற்கு உட்பட்டதும் நாசமாகி விட்டது'' என்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வர்கள் மக்காவை வெற்றி கொண்டு திரும்பிய போது 'ஹவ்தா' இறந்துவிட்ட செய்தியை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸாலாம் கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ''நிச்சயமாக யமாமாவில் தன்னை நபி என்று கூறும் ஒருவன் உருவாகுவான். அவன் எனது மரணத்துக்குப் பின் கொல்லப்படுவான்'' என்றார்கள். ஒருவர் ''அல்லாஹ்வின் தூதரே! அவனை யார் கொல்வார்? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ''நீரும் உமது தோழர்களும்'' என்றார்கள். பின்னாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியவாறே நடந்தது.


7. சிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்
இவர் பெயர் 'ஹாரிஸ் இப்னு அபூ ஷமீர் அல்கஸ்ஸானி' ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவருக்கு எழுதிய கடிதமாவது:''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''
அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு ''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. கடுங்கோபம் கொண்ட அவன் கைஸர் மன்னரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது போர் தொடுக்க அனுமதி கேட்டான். ஆனால், கைஸர் அவனைத் தடுத்து விட்டார். இதற்குப் பின் கடிதம் கொண்டு வந்த ஷுஜாஃ இப்னு வஹபுக்கு அன்பளிப்பாக ஆடைகளையும் வழிசெலவுகளையும் கொடுத்து அழகிய முறையில் ஹாரிஸ் அனுப்பி வைத்தான்.
''Jazaakallaahu khairan''                                                                               நூல்: ரஹீக்.
        
 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates